பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக ஒரு ஜெபம்

          அன்பின் தேவனே,  இந்த நல்ல ஜெபவேளைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த நாள் வரை என் ஜெபத்தைக் கேட்டு பெரிய காரியங்களை எனக்குச் செய்தபடியால் நன்றி கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவே, என் பிள்ளைகளுக்காக ஏறெடுத்த ஜெபம் பலனுள்ளதாய் இருக்கட்டும். ஒருபோதும் கைவிடாத தேவனே, என் ஜெபத்தைக் கேட்டு பிள்ளை/பிள்ளைகளின்  வாழ்க்கையில் ஆசீர்வாதங்களைப் பெருகச் செய்யும். திருமணக் காரியத்தில் உண்டான தடைகளும், தாமதங்களும் நீங்க உதவிசெய்யும்.இயேசு கிறிஸ்துவே,பொறாமையும், போட்டியும் நிறைந்த இவ்வுலக மக்களுக்கு முன்பாக நானும் என் பிழைகளும் வெட்கப்பட்டுப் போகாதபடி காத்துக் கொள்ளும். நீரே என் சகாயர் என்று உம்மையே  நான் சார்ந்திருக்கிறேன். இன்றைக்கு என் இருதயத்தை ஆராய்ந்து பார்த்து, என் பிள்ளைகளில் அற்புதங்களைச் செய்யும். தாமதத்தினால் உண்டாகிற கசப்புகள், குடும்பத்தாரை வேதனைப் படுத்துகிறது. விசுவாசத்தில் சோர்வை உண்டாக்குகிறது. இயேசு கிறிஸ்துவே, காரியத்தை வாய்க்கச் செய்யும். தடைகள் நீங்கட்டும். உம்முடைய ஆலயத்திலே நான் செய்த பொருத்தனைகளைத் துரிதமாய் நிறைவேற்ற எங்களுக்கு உதவிசெய்யும். கர்த்தாவே, பிள்ளைகள் மேற்படிப்பைப் படிக்கவும் அதற்கேற்ற பொருளாதார உதவி கிடைக்கவும் எனக்கு இரக்கம் பாராட்டும். எனக்கு ஒத்தாசை வரும் பர்வதத்தை நோக்கி என் கண்களை ஏறெடுக்கிறேன் என்ற வார்த்தையின்படி உமது சமுகத்தை நோக்கிப் பார்க்கிறேன். நான் பிரகாசமும் மகிழ்ச்சியும் அடையும்படி உமது சமுகத்தை நோக்கிப் பார்க்கிறேன்.  கர்த்தாவே, படித்து முடித்தும் வேலையில்லாமல் இருக்கிற என் பிள்ளையை நோக்கிப் பாரும். உம்முடைய சித்தத்தின்படி ஒரு வேலையைக் கொடுத்து ஆசீர்வதியும். கர்த்தாவே, இன்று நடைபெற்ற எல்லாக் காரியங்களிலேயும் எனக்கு ஜெயம் தாரும். நான் உம்மையே நம்பி இருக்கிறேன். எனக்கு அற்புதத்தைச் செய்யும். என் எல்லையில் சமாதானத்தையும், பிள்ளைகளினிமித்தம்  சந்தோஷத்தையும் உண்டாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வேண்டிக் கொள்ளுகிறேன். நல்ல பிதாவே, ஆமென்.