"கர்த்தர் உன்னைக் காக்கிறவர்..."

                                                        சங்கீதம் 121:5

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒருமுறை எனக்குத் தெரிந்த ஊழியக்காரர், தனக்கு நன்கு தெரிந்த ஓர் ஊழியரை ஜெபிக்க அழைத்து வந்தார்கள். அந்த ஊழியரோ பல நாடுகளில் உள்ள வேதாகம கல்லூரிகளில் வேதத்தின் மகத்துவங்களைப் போதிக்கிறவர். அவரின் மனைவி ஒரு வெளி நாட்டவர்கள். இரவு 10:30க்கு வந்தபடியால், டீ குடித்து விட்டு ஜெபிப்போம் என்று கூறினேன். என்னைப் பார்த்தோ, என் உருவத்தைப் பார்த்தோ அந்த ஊழியர், அழைத்து வந்த ஊழியரிடம் நாம் போகலாம் என்று துரிதப்படுத்தினார். கொஞ்சம் பொறுங்கள், ஜெபிப்போம் என்றேன்.'டீ'யைக் குடித்த பின்னர் தனியாக உங்களுடன் ஜெபிக்க விரும்புகிறேன் என்றேன். சரி என்று வந்தார்கள். அவர்களைப் பார்த்து, தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்திருக்கும் கடிதத்தை உங்கள் பாக்கெட்டில் இருந்து எடுங்கள் என்றேன். அவருக்கு மிகுந்த ஆச்சரியம். தான் ஏன் இந்த முடிவு எடுத்தேன் என்று தன் உள்ளத்தின் வேதனையான காரியத்தைக் கூறினார். என் மனைவி என்னை விட்டுப்பிரிந்து தன் நாட்டுக்கே சென்று விட்டாள், என் மகளையும் அழைத்துச் சென்று விட்டாள் என்றார். ஏன் என்ன நடைபெற்றது என்று அவரின் தவறான செயலை வெளிப்படுத்தி சொன்னபோது, அந்தக் கடிதத்தைக் கிழித்தார்.

நம்மை நேசிக்கும் கர்த்தர், நாம் நம் பிரச்சனைகளைப் போராட்டங்களைப் பார்த்து தவறான தீர்மானம் செய்யும்போது, அதைத் தடுத்து நாம் அவருக்காக வாழ வேண்டும் என்று விரும்புகிறார். அருமையான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்வில், குடும்பத்தில், வியாபாரத்தில், தொழிலில், பொருளாதாரத்தில், பிள்ளையில் உனக்கு ஏற்பட்ட கஷ்டத்தை, துன்பத்தை, துக்கத்தை, கசப்பை, தோல்வியை முன்னிட்டு தவறான தீர்மானம் செய்யாதே. சர்வ அடிகராம், வல்லமை நிறைந்த இயேசு கிறிஸ்துவை முன் வைத்துக் கொள். அவர் உன்னை நேசிக்கிறவர். உன்னைக் கண்மணிபோல் காப்பார். கைவிடாது உன்னை நடத்துவார். உன் வாழ்வு முன் இருப்பதைக் காட்டிலும் மிகுந்த ஆசீர்வாதமாக மாறும். உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                                                                                   சகோ. C. எபனேசர் பால்.