வேலை/தொழில் இல்லாத மக்களுக்கு ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். உம்முடைய சமாதானமும், சந்தோஷமும் இதுவரை நான் உமக்குள் பெற்றேன். இப்பொழுதும் நான் சில காலங்களாக வேலை/தொழில் இல்லாதபடி வேதனையோடு வாழ்கிறேன். என் வாழ்க்கையில் இதுவரை நான் கேட்ட எல்லா காரியங்களுக்கும் பதில் அளித்தீர். இப்பொழுதும் கர்த்தாவே, வேலை/தொழில் இல்லாதபடியினால் வருமானம் இன்றி குறைவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் குறைகளை அறிந்த தேவனே, ஒரு விசை எனக்கு இரங்கி நல்ல வேலை/தொழில் தரும்படி கெஞ்சுகிறேன். அதிசயமாய் என்னை இம்மட்டுமாய் நடத்தியதற்காய் ஸ்தோத்திரம். கர்த்தாவே இன்று என் வாழ்க்கையிலே தடையான பாவங்கள், மீறுதல்கள் எல்லாம் மன்னியும். நான் எப்பொழுதும் உமக்குப் பிரியமாய் நடக்க விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். என் உள்ளம் சோர்ந்து விடாதபடி இதுவரை எனக்குச் செய்த எல்லா நன்மைகளையும் நினைந்து உம்மைத் துதிக்க போற்ற உதவிச் செய்யும். உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிரப்பும். வாழ்க்கையில் ஏற்பட்ட குறைவுகளினாலே கலங்காதபடி என்னைக் காத்தருளும். எனக்காக யாவையும் செய்து முடிக்க கூடிய அன்பின் தேவனே, உமக்கு வேதனை உண்டாக்கும் காரியங்களை என்னிலிருந்து அகற்றும். நான் எப்பொழுதும் உமது வல்லமையான செய்தியினாலே பூரிப்படைய மகிழ்ச்சியடைய எனக்கு உதவிச் செய்யும். என் சமாதானத்தை இழந்து போகாதபடியும், குறைவினால் கலங்காதபடியும் என்னைக் காத்து நடத்தும். கர்த்தாவே, நீர் ஒருவரே எனக்குச் சகாயர். எனக்குச் சகாயம் பண்ண தீவிரியும். என் இனத்தார் ஜனத்தார் மத்தியிலே நான் வெட்கப்படாதபடி என் காரியங்களைப் பொறுப்பெடும் கர்த்தாவே. நீர் எனக்கு நல்ல வேலையை/தொழிலைத் தருவீர் என்று உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வேண்டுகிறேன் நல்ல பிதாவே. ஆமென்.