பாவ சோதனையை மேற்கொள்ள ஒரு ஜெபம்

  அன்பின் தேவனே,இந்த ஜெப நேரத்திற்காக உம்மைத் துதிக்கிறேன். இம்மட்டும் நான் விழுந்து,அழிந்து விடாது காத்து வருகிறவரே உமக்கு ஸ்தோத்திரம். நான் பலமுறை பலநேரங்களில் ஏன் எனக்கு இந்த பாவ சோதனை உண்டாகிறது என்று உள்ளத்தில் எண்ணுகிறேன். இவ்விதமான பாவ சோதனை என் கண்களின் இச்சையினால் வருகிறதோ என என்னையே நான் ஆராய்ந்து பார்க்கிறேன்.மற்றவர்களிடம் எது தவறு என்று நான் கண்டேனோ,அதே தவறுகள் எனக்குள் இருப்பதை உணருகிறேன். இயேசுவே, எனக்கு இரங்கும்.என் சிந்தையிலும், என் எண்ணத்திலும், நான் மிகத்தூய்மையாக இருக்க விரும்புகிறேன்.எனக்குள் வருகிற அத்தனை சோதனையும் நான் மேற்கொள்ள எனக்கு என் ஆவியில் பெலன் தாரும்.நான் உம்முடைய பிள்ளையாகவே முடிவு பரியந்தம் பரிசுத்தத்தில் நிலைநிற்க எனக்கு உதவி செய்யும்.கர்த்தாவே,என் ஆவி, ஆத்துமா, சரீரம் உமக்குச் சொந்தம்.இதனை சத்துரு கெடுத்து விடாது என்னைக் காத்தருளும்.பழைய பாவ வாழ்க்கையின் காரியங்கள் என் உள்ளத்தில் தோன்றி என்னில் வீணான எண்ணத்தை உண்டாக்குகிறது. நான் அனுதினமும் உமது பரிசுத்த பாதையில் நடக்கவும், இவைகள் என்னைச் சேதப்படுத்தாதபடியும் என்னைக் காத்தருளும். நான் இன்றும் உம்மோடு நெருங்கி ஜீவிக்க என்ன செய்ய வேண்டும் என்று கற்று, அறிந்து அதின்படி வாழ எனக்கு உதவிச் செய்யும். பரிசுத்தத்திற்கு மேல் பரிசுத்தம் எண்ணில் பெருக இன்றே உதவிச் செய்யும். கர்த்தாவே நீர் இதுவரை எனக்கு அருளிய ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை இழந்து விடாதபடி அதைக் காத்துக் கொள்ள எனக்கு பெலன் தாரும். நான் சிலர் வாழ்வில் உண்டாகும்பாவச் சோதனைகளைப் பார்க்கும்போது, உள்ளத்தில் பயமும் சோர்வும் உண்டாகிறது.கர்த்தாவே, என்னை உமது  ஆவியின் பெலத்தினால் நிரப்பும். நான் உமது அன்பிலே குறைவுபடாது என்னைக் காத்தருளும். அந்த ஆதி அன்பில் நிலை கொண்டு ஜீவிக்க எனக்கு உதவி செய்யும்.இன்னும் நான் உமக்குள்உமக்காக  ஜீவிக்க எனக்குக் கிருபை தாரும்.என்னைக் கைவிடாது என்றும் காத்து நடத்துவீர் என்று உம்மை ஸ்தோத்திரிகிறேன். கர்த்தாவே இந்த ஜெபத்தைத் தள்ளாமல் என்னைக் காத்து நடத்தும்.இயேசு கிறிஸ்துவின் மூலம் ஏறெடுக்கிறேன்நல்ல பிதாவே, ஆமென்.