இந்த மாத செய்தி

                                                                                       "அவர்...நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்."தீத்து 2:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

தேசாதிபதியாகிய பிலாத்து இயேசு கிறிஸ்துவை, குற்றமற்றவர் என்று கண்டான். இயேசு கிறிஸ்துவை நிரபராதியாகக் கண்டபோது இயேசுவை அவனால் விடுதலை செய்ய முடியவில்லை. இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன் என்றான். ஜனங்கள் எல்லாரும் இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்ன போது, பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கினான். இயேசு கிறிஸ்துவையோ வாரினால் அடித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். இப்படியாக உலகத்தின் மக்களும், பிரதான ஆசாரியரும், மூப்பரும் 'இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு பிலாத்துவினால் கட்டளை பெற்றவுடன் அவர்மேல் துப்பி, அவருடைய சிரசில் அடித்து, பரிகாசம் பண்ணினார்கள். அவருடைய மேல்வஸ்திரங்களைக் கழற்றி சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். பின்பு கபாலஸ்தலம் என்று அர்த்தங் கொள்ளும் 'கொல்கதா' என்னும் இடத்தில் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

இவ்வாறு பலவித பாடுகளுக்கும், நிந்தைகளுக்கும் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்து தமது ஆவியை விட்டபோது, தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. பூமி அதிர்ந்து, கன்மலைகளும் பிளந்தது. நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்த வான்களின் கல்லறைகளும் திறந்தது. அவர்களின் சரீரங்களும் எழுந்திருந்தது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின்பு இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். நூற்றுக்கதிபதியும், அவனோடு கூட இயேசுவை காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும், சம்பவித்தக் காரியங்களையும் கண்டு மிகவும் பயந்து, மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

இவ்விதமாக சர்வ அதிகாரமும், சர்வ வல்லமையும் நிறைந்த இயேசு கிறிஸ்து இத்தனை பாடுகளுக்கும் மரணத்திற்கும், தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். ஏன் இந்த பாடுகளுக்கும், மரணத்திற்கும் தம்மையே ஒப்புக் கொடுத்தார்? ரோமர் 8:32 ல் தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

சில ஆண்டுகளுக்கு முன் யுத்தம் நடைபெற்றுக் கொண்டுள்ள பகுதியில் ஒரு போதகர் யுத்தத்தில் காயமடைந்து, பாடுகளில் உள்ள மக்களின் மருத்துவச் சிகிச்சைக்காக, பள்ளிக்கூடம், ஆலயங்களில் அவர்களை வைத்து உதவி செய்தார்கள். இவ்வாறு மிகுந்த வேதனையுடன் வந்தடைந்த ஒரு தாய் தனது சிறிய பெண் பிள்ளையைத் தன் கையில் சுமந்து கொண்டு அழுது கொண்டே இருந்தாளாம். அவளது கண்ணீருக்குக் காரணம் என்ன என்று அறிந்து அவளுக்கு ஏற்ற ஆலோசனை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் அவளை அணுகி, ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது, தன் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியைக் கூறினார்களாம்.

சண்டை நடைப் பெற்ற இடத்திலே வசித்து வந்தவள். பெண் பிள்ளையைக் கையில் சுமந்து கொண்டு, மூன்றரை வயது ஆண் மகனை மற்றொரு கையில் பிடித்துக் கொண்டு விரைவாகத் தப்பி ஓடி வந்தாள். கையில் பிடித்திருந்த மகனை இழுத்துக் கொண்டே வந்தவளுக்கு ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றபின்பு முடியாத நிலை வந்தது. என்ன செய்வதென்று கலங்கினாள். தன் மகனை அப்படியே விட்டுவிட்டு, கையில் சுமந்திருந்தப் பெண்பிள்ளையோடு ஓடி வந்துவிட்டாள். அவளால் முடியாத நிலையில் விட்டு வந்த மகனை எண்ணி எண்ணிக் கலங்கி கண்ணீர் சிந்தினாள். என்ன ஆயிற்றோ என்று உள்ளம் பதறினாள். ஏதாவது செய்தி அவனைக் குறித்துக் கேள்விப்பட மாட்டேனா என்று கலங்கி, கண்ணீர் சிந்தி கதறினாள் என்று அவர் கூறினார். தன்னால் இயலாத நிலையில் அச்சிறுமகனை விட்டு விட்டு வந்த தாயின் உள்ளம் தவித்ததுபோல் நம் தேவனும் கலங்கியிருக்க வேண்டும். ஏன் இவ்வாறு இயேசு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார்.

  1. சகல அக்கிரமங்களிலிருந்தும் நம்மை மீட்டெடுக்க தம்மை ஒப்புக்கொடுத்தார்

 "அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு...''தீத்து2:14

மனிதன் தன் வாழ்வில் கிரமத்திற்கு மாறான தீய காரியங்களைச் செய்கிறவனாக இருக்கிறான். அவனது உள்ளம் மற்றவர்கள் இத்தனைப் பாடுகள் அடைவார்களே என்று எண்ணுவதில்லை. அற்ப சொற்ப ஆதாயத்திற்காக துணிகரமான கொலை செய்கிற மக்கள் பெருகிவிட்டார்கள். நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் குறித்து நான் கேள்விப்பட்டேன். வீட்டு வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அப்பகுதியில் பால் விற்கும் ஒரு மனிதன் அவள் அணிந்திருந்த செயின் தங்கநகை என்று எண்ணி அவளைக் கொலை செய்து, நகையை எடுத்துச் சென்றான். அவனது அக்கிரமச் செயலானது அங்கு வாழ்ந்த மக்களின் உள்ளங்களில் பயத்தையும், பீதியையும் உண்டாகச் செய்தது. இன்று உலகம் முழுவதும் தான் செல்வந்தனாக வேண்டும், தான் தன் பதவியில் உயர வேண்டும், தான் விரும்பின சிற்றின்பத்தை அடைய வேண்டுமென்று துணிகரமான செயலைச் செய்கிற மக்கள் அநேகர். இப்படிப்பட்ட நம்மை நமது கொடூரமான இந்த அக்கிரமத்தின் செயலினால் உண்டான ஆக்கினைக்கு விலக்கிமீட்க, இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே பாடுகளுக்கும், மரணத்திற்கும் ஒப்புக் கொடுத்தார்.

எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்மை ஒப்புவித்த நோக்கங்களில் ஒன்று நம்மை மீட்பதாகும். 'பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன், உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்' என்று சொந்தம் பாராட்டும் உன்னத தேவன், தமது குமாரனின் மூலம் இந்த மேன்மையான மீட்பின் வாழ்வை உண்டாக்கி உள்ளார். சில சமயங்களில் நான் பெறும் ஜெபக்குறிப்புகளில், ஐயா, நான் என் வீட்டை, எனது வியாபாரஸ்தலத்தை பணத்தேவைக்காக அடகு வைத்தேன்; ஆனால் இன்று என்னால் மீட்க முடியாது தவிக்கிறேன். உதவி செய்ய ஒருவரும் இல்லை என்று கலங்குகிறதைப் பார்க்கிறேன்.

இன்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமது வாழ்வில் சிறு பிராயத்தில் இருந்து நாம் செய்த பாவ, அக்கிரம செயலின் தண்டனையை தாமே அடைந்து முற்றிலும் மீட்கப்பட்ட வாழ்க்கை வாழ நம்மை வழி நடத்துகிறார். இயேசு கிறிஸ்து பாடுகளின் மரணத்திற்குத் தம்மை ஒப்புக்கொடுத்தபடியினால், நாம் சகல அக்கிரமங்களிலிருந்தும் மீட்பைப் பெற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்களாய் இருக்கிறோம்.

2.சொந்த ஜனமாக நம்மை மாற்ற இயேசு கிறிஸ்து தம்மை ஒப்புக் கொடுத்தார்

"...தமக்குரிய சொந்த ஜனங்களாகவும்...நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.'தீத்து 2:14

எந்தவிதமான சொந்தமும், பந்தமும், உறவும் இல்லாது அநாதையைப் போன்று வாழுகிற ஒவ்வொரு மக்களையும் நீ என் மகன், மகள் என்று பாசத்துடன் அழைத்து ஆதரிக்கிற மேலான நிலையடைய இயேசு கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தாமே சிலுவைப் பாடுகளுக்கும் வேதனைக்கும் அடிமையானார். ஒரு பொருளையோ, ஒரு வீட்டையோ அல்லது விலை உயர்ந்த நகையையோ நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுகிறோம். அதைப்போல இயேசு கிறிஸ்துவும் தமது சிலுவையின் பாடுகளுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தபடியால் நம்மைச் சொந்தமாக்கிக் கொண்டார். இருள் நிறைந்த வாழ்வில் தடுமாறி தவித்த நம்மை ஆச்சரியமான ஒளியினிடத்திற்குத் தமது சிலுவையின் பாடுகளினால் வரவழைத்துள்ளார். அந்த அன்பின் செயலினால் நாம் அவருக்கே சொந்தமாகும் பாக்கியத்தை அடைந்திருக்கிறோம்.

ஒரு குடும்பத் தகராறில் கணவன் தனக்கிருந்த மூன்று பிள்ளைகளும் தன்னுடையது அல்ல என்று வழக்குத் தொடர்ந்தார். கோர்ட் அந்த மூன்று பிள்ளைகளையும், தகப்பனாரையும் அழைத்து நவீன முறையில் கண்டுபிடிக்கக் கூடிய DNA சோதனைச் செய்தார்கள். அந்தப் பிள்ளைகள் தனக்குப் பிறக்கவில்லையென்று முடிவு கண்டு பிடிக்கப்பட்டது. தகப்பனின் அன்பையும், ஆதரவையும் பாவமறியாத பிள்ளைகள் இழந்தனர். தகப்பன், பிள்ளைகள் என்ற உறவு முறிந்தது. அப்பிள்ளைகளின் நிலமை மிகப் பரிதாபமாக மாறியது. உண்மையற்ற மனைவியின் செயல் தகப்பனில்லாத, தகப்பன் யார் என்று தெரியாத நிலையை உருவாக்கிவிட்டது. இவ்வாறு உறவை இழந்து இருக்கும் நமக்குப் பரம தகப்பனாக இருந்து, அவரின் உறவுக்கும் ஆதரவுக்கும் நாம் பாத்திரராக வேண்டுமென்று இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையில் தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

3. நாம் நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர் களாகும்படி இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்.

''...நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் ...நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்."தீத்து 2:14

இன்று நம் செய்கைகளும், சிந்தைகளும், வாயின் வார்த்தைகளும், சுயமாயும், தீதுமாயும் இருக்கிறது. சில வாலிபர்களின் வாயின் வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியாததாய் இருக்கிறது. தந்திரமான செயல்களை உடைய மக்கள் இன்று ஏராளம் இருக்கிறார்கள். எப்பொழுது அடுத்தவனைத் தள்ளி தான் உயரலாம் என்று தீய செயல்களைச் செய்கிறவர்கள் மத்தியில் தான் இன்று பணி செய்து கொண்டிருக்கிறோம். தேனொழுகப் பேசிவிட்டு செயல்புரிவோர் அதிகம். சிலர் மற்றவர்கள் விழ வேண்டும், எல்லாவற்றையும் இழக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துணிகரமான மந்திர, தந்திர செயல்களைச் செய்கிறார்கள். பழைய ஏற்பாட்டின் காலத்திலும் இதைக் காண முடிகிறது .அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைப்பண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.' என்று சங்கீதம் 64:5ல் தாவீது சொல்வதைப் பார்க்கிறோம். அன்று முதல் இன்று வரை தீயக் காரியங்களைச் செய்து வருகிற கூட்டம் பெருகி வருகிறது. இவ்வாறு தீயக் காரியங்களையே எண்ணி, பேசி செயல்புரியும் தன்மையுடைய வர்களாகிய நம்மை மாற்றி, நற்பண்புகளினால் நிறைந்து, நற்செயல் புரிகிறவர்களாயும், அன்பின் செயல்களை உடையவர்களாயும் மாற்ற கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்தார்.

நான் என் சிறு வயது தொடங்கி தீதான காரியங்களைச் செய்து மகிழ்வதில் ஆர்வமுடையவனாயிருந்தேன். ஒரு முறை எங்கள் பகுதியில் VBS நடைபெற்றது. என் தகப்பனார் போதகரா யிருந்தபடியால் ஒவ்வொரு மே மாதம் எங்கள் பகுதியில் நடைபெறும் VBS ல் சென்று வேதத்தைக் கற்றுக் கொள்ளும்படி அனுப்புவார்கள். இவ்வாறு VBS நடந்த இடத்திற்குச் சென்றேன். புளிய மரம் நிறைந்த பள்ளியில் நடைபெற்றது. இடைவேளைக் கிடைத்த நேரத்தில் நானும் இரண்டு நண்பர்களும் புளிய மரத்தில் ஏறி புளியங்காய்களைப் பறித்தோம். VBS ஆசிரியர்களுக்குத் தெரியாத ஒரு தவறான செயல். எங்களுடன் படித்தப் பெண் பிள்ளைகளில் சிலர் VBS ஆசிரியர்களிடம் எங்களைக் குறித்து தகவல் கொடுத்து விட்டார்கள். இதனால் ஆசிரியர்கள் எங்களை விசாரித்து, இனி செய்யாதீர்கள் என்று அனுப்பிவிட்டார்கள். நாங்களோ சந்தர்ப்பம் வரக் காத்திருந்து, ஆசிரியர்களிடம் புகார் கொடுத்தப் பிள்ளைகள் பாத்ரூம் சென்றபோது வெளியிலுள்ள தாழ்ப்பாளைப் போட்டு விட்டுச் சென்று விட்டோம். அது பெரிய பிரச்சனையாக மாறி, அன்று எங்கள் மத்தியில் இருந்த VBS Director எங்களை VBS க்கே வராதீர்கள் என்று அனுப்பிவிட்டார்கள். அவ்விதமான செயல்களைச் செய்த என்னையும் கல்வாரி அன்பு முற்றிலும் மாற்றி நற்பண்புகளைச் செய்யக் கூடியவனாய் மாற்றியுள்ளது. நாம் என்றும், எல்லாவற்றிலும் நற்கிரியைகளைச் செய்வதற்கு நம்மை மாற்றும் வல்லமை அந்தச் சிலுவையில் இயேசு கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்ததின் மூலம் உண்டாகிறது.

ஆம். நமது பழைய வாழ்வின் சுபாவங்கள் மாறி, கிறிஸ்து இயேசுவின் பண்புகளுடன் நாம் வாழுவதற்கு நம்மை மாற்றும் வல்லமை இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலின் மூலம் நமக்குள் உண்டாகிறது. தேவன் விரும்பாத செய்கைகளும், பண்புகளும் நீங்கி, கர்த்தர் விரும்பும் நற்பண்புகள் நிறைந்த வாழ்வு நமக்குள் மலருவதற்கு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தல் நமக்குள் செயல் படுகிறது. இன்று சிலரில் காணப்படும் அன்பற்ற செயல்களும், வார்த்தைகளும் மாறி ஆவியின் கனி நிறைந்த வாழ்வு வாழவும், பெற்றோரை, கணவன், மனைவியை உண்மையாய் நேசிக்கவும், ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவும் நம்மை மாற்றக்கூடிய வல்லமை கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலின் மூலம் உண்டாகிறது. இயேசு கிறிஸ்து தம்மைத் தாமே ஒப்புக் கொடுத்த காரியம் நம்மை முற்றிலும் நற்பண்புகளினாலும் செயல்களினாலும் நிறைக்கிறது.

4. நம்மைச் சுத்திகரிக்கிறது.

''...நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.” தீத்து 2:14

சுத்தமடைவது ஒரு முக்கியமான காரியமாகும். இன்று மனிதன் தன் சரீரத்தைச் சுத்தமாக வைக்க வேண்டுமென்று பலவிதமான மணம் நிறைந்த சோப்புகளினாலும், ஷாம்புகளினாலும் தன் சரீரத்தைக் கழுவுகிறான். அவனது உள்ளான பண்புகள் அவனைத் தீட்டுப்படுத்தக் கூடியதாய் இருக்கிறது. அது நீக்கப்பட வேண்டும். இருதயத்தின் நிறைவினால் தான் வாய் பேசும். சுத்தமாக்கப்படும்போது நம் வாயின் வார்த்தைகள் மாறிவிடும். இருதயச் சுத்தம் நம்முடையக் கர்த்தரைக் காணக் கூடிய வாழ்வினை உண்டாக்குகிறது. சுத்தமுள்ள வாழ்வு நமக்குள் பல ஆசீர்வாதங்களைப் பெருகச் செய்கிறது. 'உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல நீங்களும் உங்கள் நடக்கைக ளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். ' என்ற 1 பேதுரு 1:15 ன்படி நாம் பரிசுத்தமடையும்போது அன்பின் தேவனுடன் ஐக்கியமும் உறவும் உருவாகிறது. கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலினாலே சுத்திகரிப்பு நம்மில் உண்டாகும்போது, நமக்கு விரோதமான பொல்லாத ஆவிகளின் துர்ச்செயல்கள் நம்மை அணுகாது. அத்துடன் மத்.8:2 ல் உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று இயேசுவிடம் வந்த குஷ்டரோகி சுத்தமானபோது சுகமடைந்தான். இழந்த எல்லா மேன்மையையும் பெற்றுக் கொண்டான். மனிதர் முகத்தைப் பார்க்கிறார்கள்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். இயேசு கிறிஸ்து தம்மை ஒப்புக் கொடுத்ததின் மூலம் மனிதரின் வாழ்வில் மெய்யான பரிசுத்தம் உண்டாகிறது. உங்கள் இருதயமும், உங்கள் எல்லைகளும் பரிசுத்தமாகும் போது கிறிஸ்துவின் பிரசன்னம் உங்கள் எல்லைகளில் வந்து விடும்.

அன்பு சகோதரனே, சகோதரியே உன் வாழ்வில் தூய்மையானது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. உன் சிந்தை, வார்த்தை,செயல்கள் அனைத்திலும் பரிசுத்தம் வேண்டுமானால் இன்றே கல்வாரிச் சிலுவையில் பாடுபடுவதற்கும், தம் இரத்தத்தைச் சிந்தவும், பரிகாசங்கள், நிந்தைகள் அடைந்து,முகத்தில் துப்பப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலை நினைவுகூருவாயாக. சர்வ வல்லமையும் சர்வ அதிகாரமும் உடைய அவர் நம்மை நேசித்தபடியால் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். அந்த ஒப்புக்கொடுத்தலினால் நாம் மெய்யான துாய்மையும் மேன்மையும் அடைகிறோம்.

கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தல் நம்மைப் பரிசுத்தப்படுத்தி கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்ற நம்மை நடத்துகிறது. கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்குள் ஒரு நல்லுறவை உண்டாக்குகிறது. கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலின் மூலம் நம்மை சுத்தமாக்கும்போது, கர்த்தருக்குப் பிரியமான பாத்திரமாக மாறிவிடுகிறோம். அது நமக்கு மெய்யான கனத்தையும், புகழையும் கொண்டு வருகிறது.

5. பழுதற்ற பலியாகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த செயல் நம்மை ஊழியராக மாற்றுகிறது

"நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!" எபிரெயர் 9:14

மனிதர்கள் தாங்கள் பெற்ற நன்மைகளைத் தங்கள் இனத்தார், ஜனத்தார், நண்பர்கள் பெற்று வாழ வேண்டும் என்று எல்லாவித உதவியையும், ஆலோசனையையும் வழங்குகிறார்கள். இவ்வாறு மனிதரின் ஆன்மீக வாழ்வின் மேன்மைக்காக நாம் பெற்ற நன்மைகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பது ஊழியத்தின் ஒரு பகுதியாகும். நித்திய அழிவை நோக்கிச் செல்லுகிற மக்களுக்கு நித்திய மகிழ்ச்சியின் வழியை போதிப்பது ஊழியமாகும். கண்ணீர் கவலையுடன் வாழும் மக்களைத் தேற்றும் அன்பின் ஆலோசனை களை அறிவித்து துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றுவது ஊழியமாகும். என்ன செய்வது? செவ்வையான வழி என்ன என்று தடுமாறும் மக்களுக்கு ஏற்ற வேத ஆலோசனைகளைச் சொல்லி கிறிஸ்துவுக்குள் அவர்களை நடத்துவது ஊழியமாகும். மனதின் கவலை, காரிருள் நீங்கி மகிழ்ச்சியின் வாழ்வை அடைய ஆவன செய்வது ஊழியமாகும். கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலின் வல்லமை தகுதியற்ற நம்மை தகுதியடையச் செய்கிறது.

கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தலினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1. பிழைத்திருக்கும் பாக்கியம்.

"...என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்."கலாத்தியர் 2:20

இன்று சந்தோஷமான சுகவாழ்வினை நாம் அடைய வேண்டும் என்று எல்லாவிதங்களிலும் விரும்புகிறோம். இதற்காக கடினமாய் உழைத்துப் பணத்தைச் சம்பாதிக்கிறோம். குறைகள் பெலவீனங்கள் வரும்போது இவ்வாழ்வு மறைந்து விடுகிறது. ஆனால் கர்த்தரின் ஒப்புக் கொடுத்தலினால் உண்டாகும் சுகவாழ்வு, உன் ஆவி, ஆத்துமா, சரீரம் மூன்றிலும் உன்னைத் திருப்தியடையச் செய்கிறது.

எனது வாழ்வில் பெலவீனமடைந்து என் வாழ்வே முடிந்து போகும் என்ற நேரத்தில் கிறிஸ்துவின் வல்ல செயல் என்னை மீட்டது. இன்று அழியாதிருப்பது கர்த்தரின் கிருபையின் செயல். அவரின் தழும்புகளால் குணமாகிறோம் என்ற வாக்கு எவ்வளவு உண்மையுள்ளது என்று அறிந்த நான் அதினால் உண்டான ஆசீர்வாதத்தையும் அனுபவித்து வருகிறேன். கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தல் புது வாழ்வை உண்டாக்குகிறது.

2.கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒப்புக்கொடுத்தல் சபையைத் தூய்மையாக்குகிறது.

"கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக் கொடுத்தார்."எபேசியர் 5:27

திருச்சபைக்குத் தலைவராய் அன்றும், இன்றும் செயல்படும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சபையின் பரிசுத்தத்தையும், வளர்ச்சியையும் குறித்து கரிசனை கொண்டவர். அவர் சிலுவையில் தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்த அன்பின் செயலானது, சபையை ஊன்றி ஸ்திரமாய் கட்டுகிறதாயும், ஒருமனதையும், ஐக்கியத்தையும் உண்டாக்குகிறதாயும் இருக்கிறது.

3. அன்பிலே நடப்பதற்கு உதவுகிறது.

'கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்கொள்ளுங்கள்.'"எபேசியர் 5:2

இன்று அன்பில்லாது வாழ்கிற வாழ்க்கையினால் குடும்பத்தில் சந்தோஷம், சமாதானம், ஐக்கியம் இல்லை. சிறிய காரியங்களும், பெரிய பிரிவினைகளை உண்டாக்குகிறது. இதையே ஊர்களிலும், தேசங்களிலும் காணமுடிகிறது. நாம் அன்பிலே நடக்கும்போது கர்த்தர் மெய்யான அன்பின் ஐக்கியத்தை வீட்டிலும், ஊரிலும், உன் எல்லை அனைத்திலும் உண்டாக்கிவிடுவார்.

இன்று சமாதானத்தை இழந்து, பிரிவினையினால் சந்தோஷத்தை இழந்து தவிக்கும் தேவப்பிள்ளையே, அன்பினால் நிரப்பப்பட கல்வாரியின் தியாகத்தை அறிய உங்களை ஒப்புக்கொடுங்கள். அதிசயங்களைக் காண்பீர்கள்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                        கிறிஸ்து இயேசுவின் பணியில்,              மறைந்த சகோ. C. எபனேசர் பால்.

(இந்தச் செய்தி 2009 ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது)


E- STORE