"நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;

                                     கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்,

                                              ஆலோசனைக்கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா,

                                                                        சமாதானப்பிரபு என்னப்படும்"

                                                                                                                                          ஏசாயா 9:6

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன். டிசம்பர் மாதம் என்றாலே பலவிதமான காரணத்தினால் நமக்குள் சந்தோஷம் உண்டாகிறது. இந்த ஆண்டில் தான் பலவிதமான கஷ்டங்களைக் கண்டோம், ஆகா! இந்த ஆண்டு தொலைந்தது என்று எண்ணுபவர்கள் உண்டு. சிலருக்கு என் வாழ்வில் அநேக ஆசீர்வாதங்கள் கிடைத்ததே, இந்த ஆண்டு முடிகிறதே என்று கவலை. இன்னும் சிலர் வாழ்வில் இந்த புதிய ஆண்டு எனக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர் நோக்கி இருப்பார்கள். இவ்விதமாக இந்த ஆண்டை முடித்து புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் முன் கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையை உலகில் உள்ள கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டாடுகிறோம். இந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் விதத்தில் புதிய வஸ்திரத்தை உடுத்திக்கொள்கிறோம். வீடுகள் பல விதங்களில் அலங்கரிக்கிறோம். பல விதமான மின் விளக்குகளை அலங்காரமாக வீட்டின் எல்லையிலும், வீட்டில் உள்ள மரங்களிலும் அலங்கரிக்கிறோம்.

 அன்று வான சாஸ்த்திரிகளை வழிநடத்திய நட்சத்திரம் எங்கள் வீட்டுக்கு மேலாகத்தான் வந்து நின்று விட்டது என்று பிரசித்திப்படுத்தும் வண்ணமாக நட்சத்திரத்தை செய்து மிக உயரமாக, பெரிதான நட்சத்திரத்தை கட்டுகிறோம்.

இவ்வுலகத்தில் வாழும் நாம் அவர் நாமத்தின் மேல் பூரண நம்பிக்கை வைத்து பிள்ளைகளாகிறோம். கிறிஸ்துவினால் என் பாவம், மீறுதல் நீங்க ஒரு வழி தோன்றியது என்ற சந்தோம், அவருடைய பரிபூரணத்தினால் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் என்ற சந்தோஷம், சத்தியம் இயேசு கிறிஸ்துவின் மூலம் உண்டாயிற்று என்ற மகிழ்ச்சி. இப்படி பலவிதங்களில், பல கோணங்களில் இந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபடியால் எல்லாருக்கும் அருளப்பட்டு இருக்கிறது. மெய்யான வெளிச்சமாக இவ்வுலகில் வந்து, நம்மை வெளிச்சத்தின் பிள்ளைகளாக மாற்றுகிறவர் என்று எல்லா ஜனங்களும் சந்தோஷப்பட கிருபை செய்கிறார். இந்த அன்பின் தேவனின் நாமமும் செய்கைகளும் நம்மை அனுதின வாழ்வில் நலமாய் நடத்தக்கூடியதாக இருக்கிறது. அவருடைய செயல் வல்லமையுள்ளதாயும் இருக்கிறது. ஆலோசனைக் கர்த்தர் என்ற நாமத்தை இந்த செய்தியில் ஆராய்ந்து தேவனை துதிப்போமாக.

                  என் கண்ணை உன் மேல் வைத்து ஆலோசனை சொல்லுவேன் என்ற கர்த்தாதி கர்த்தர் நேற்றும், இன்றும் மாறாதவர். 

ஆலோசனையில் எப்படிப்பட்டவர்?

  1. யோசனையில்  பெரியவர்

    "யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்…"

எரேமியா 32:19

 கர்த்தர் நமக்கு தரும் ஆலோசனைகள் பெரியதும் அவருடைய செயல் வல்லமையுள்ளதாயும் இருக்கிறது. இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார் என்று எண். 12:6 ல் பார்க்கிறோம். இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, தம்முடைய வார்த்தையினாலும், ஆவியினாலும் இப்பூமியின் மேல் போட வந்த அக்கினியினாலும்  நம்மை பரிசுத்தமாக்கி நம்மை ஆசீர்வதிக்கிறார். நான் உங்களை பரிசுத்தமாக்குகிற  தேவன் என்றவர், அனுதினமும் நம்மை பரிசுத்தமாக்கிக் கொண்டே யிருக்கிறார். நம்மை சுத்தமாக்க  தமது இரத்தத்தை சிலுவையிலே சிந்தியவர் நம் மத்தியிலே பெரியவராயிருக்கிறார். 'நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறது' என்ற வார்த்தையின்படி நாம் பரிசுத்தமாயிருக்க வேண்டுமென்பது தேவ சித்தமாயிருக்கிறது.

 மேலும் யோசனையில் பெரியவர் , உலகத்திலிருக்கிறவனிலும், உங்களிலிருக்கிறவர் பெரியவராக செயல்படுவார். இந்த வார்த்தையின்படி சத்துருவின் மீது ஜெயம் கொண்டவர்களாய் இருக்கிறோம். இந்த அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவாலயத்திலும் பெரியவர் என்பதை மத். 12:6 ன் வழியாய் நாம் அறியலாம். அத்துடன் இந்த அன்பின் இயேசு கிறிஸ்து யோனாவிலும் பெரியவர் என்று மத். 12:41 நமக்குச் சொல்லுகிறது. யோனாவினால் ஒரு பட்டணம் கர்த்தரிடம் திரும்பியது. அதைவிட மேலான காரியத்தை ஊழியமாக இவ்வுலகில் செய்ய வந்தவர் இயேசு கிறிஸ்து. அத்துடன் சாலொமோன் சிறந்த ஞானமுடையவனாய் இவ்வுலகில் ஆட்சி புரிந்தான். அவனைவிட பெரியவர் என்று, இயேசு கிறிஸ்துவை நாம் பார்க்கமுடிகிறது. இவரது யோசனை மற்ற எல்லாருடைய யோசனையைக் காட்டிலும் பெரியது.

2.ஆலோசனையில் மாறாதவர்

"...தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்." எபிரேயர் 6:17

கர்த்தரின் ஆலோசனை மாறாதது. அது நிலை நிற்கும் ஆலோசனை என்று ஏசாயா 46:10ல் பார்க்கிறோம். இன்று கர்த்தருடைய ஒவ்வொரு ஆலோசனைகளுக்கும், செவிகொடுத்து செயல்படும்போது மெய்யான ஆசீர்வாதங்களும், சமாதானமும் உண்டாகும். அநேக நேரத்தில் கர்த்தரின் ஆலோசனைகளை அசட்டை செய்வதினால் நாம் நினையாத கேடானவைகள் நடைபெறுகிறது. இன்று மனிதன் தனக்கு சொல்லப்படும் ஆலோசனைக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து செயல்படும்போது, வெற்றியைப் பெறுவான். கர்த்தர் யோசுவாவுக்கு யுத்தம் செய்ய ஆலோசனைக் கொடுத்தார். அந்தப்படி யோசுவா செய்து பெரிய வெற்றியைக் கண்டான். ஆகவே கர்த்தரின் ஆலோசனைகள் நம் வாழ்வில் ஆசீர்வதிக்கப்பட்ட மாறாத மகிமை நிறைந்ததாய் இருக்கிறது.

வார்த்தையில் மாறாதவர், அழைப்பில் மாறாதவர். இன்று தம் மாறாத ஆலோசனையை நமக்கு ஈந்து நமக்கு சமாதானமும், மகிழ்ச்சியும் அருளுகிறார். ஒருமுறை ஆலயத்தின் பின்புறமாக நிறுத்தி இருந்த எனது சைக்கிளைக் காணவில்லை. ஒரு வாலிபன் ஆராதனை நேரத்தில் அந்த பக்கம் வந்து சென்றதைப் பார்த்தேன். அவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்தான். ஆராதனை முடிந்தபின் அவன்தான் எடுத்துச் சென்றிருப்பான் என்று அவன் வீட்டுக்குச் சென்றேன். அவனோ வீட்டில் இல்லை, அவன் தாயார் இருந்தார்கள். அவன் உடுத்தியிருந்த உடை என் உள்ளத்தில் பதிந்திருந்தது. அவன் இந்த நிறை உடை அணிந்திருந்தான் என்றவுடன் அந்த தாய் இல்லை என்றார்கள். அச்சமயத்தில் கர்த்தரின் மகத்துவத்தை அறியாத நான், யோசித்தேன். அவனது சட்டையின் உண்மையான நிறத்தை சொல்லாது, வேறு ஒரு சட்டையின் நிறத்தை உள்ளத்தில் ஆலோசனையாகக் கூறினார். அதையே அறிவித்தேன். அந்த தாயார் உண்மையான சட்டையின் நிறத்தைக் கூறினார்கள். கர்த்தர் கொடுத்த ஆலோசனையினால் சைக்கிளை மறுபடியும்  பெற்றுக்கொள்ள  முடிந்தது.

                         நம் வாழ்வில் நாம் செய்கிற தொழில், பலகாரங்கள் விரும்பத் தக்கவிதமாக செய்ய வேண்டிய ஆலோசனைகளைத் தந்து நம்மைச் செழிப்படையச் செய்வார். 

3. ஆலோசனையில் ஆச்சரியமானவர்

"...அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்."

ஏசாயா 28:29

                கர்த்தரின் ஆலோசனையானது மிகுந்த ஆச்சரியமானது, நம்முடைய ஞானத்திற்கு அவைகள் அப்பாற்பட்ட விதத்தில் அமைந்திருக்கிறது. எரிகோ பட்டணம் இஸ்ரவேல் ஜனங்களுக்கு தடையாக இருந்தது. தேவன் வாக்குத்தத்தம் பண்ணின பாலும், தேனும் ஓடுகிற தேசத்திற்கு செல்ல வழியடைக்கப்பட்டிருந்தது. கர்த்தராகிய தேவன் யோசுவாவிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். ஒவ்வொரு நாளும் பட்டணத்தை சுற்றி வாருங்கள். 7ம் நாளில் 7 முறை சுற்றிவாருங்கள். எக்காலத்தை நெடுந்தொனியாய் 7ம் நாளில் 7 முறையில் தொனிக்கும்போது ஆர்ப்பரியுங்கள் என்றார். அந்த பிரகாரமாகச்  செய்தபோது, ஆச்சரியமான விதத்தில் எரிகோ கோட்டை இடிந்து விழுந்தது. தடைகள் நீங்கியது. இந்த ஆச்சரியமான காரியம் கர்த்தரின் ஆலோசனையினால் நடை பெற்றது.

          இன்று முதல் நாம் அவர் சொல்லும் ஆலோசனைக்குக் கீழ்ப்படியும்போது, உங்கள் வாழ்வில் உள்ள திருமண தடைகள், வேளையில் உண்டாகும் சகல தடைகளும் நீங்கி சத்துரு வெட்கப்பட்டு போகச் செய்வார்.

         தேவனுடைய பிள்ளைகளுக்கு தாங்கள் செய்கிற காரியங்களில் மகிழ்ச்சி, சமாதானம், வெற்றி உண்டாக கர்த்தர் ஆலோசனை சொல்லுகிறார். ஒரு முறை ஒரு ஆசிரிய சகோதரி தனது சாட்சியைத் தெரிவித்தார். எனது கணவர் வேறொரு ஊரிலே வேலை செய்துகொண்டிருக்கிறார். 2 வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிற்கு வருவார்.  அவர் அதிகமாக காலை இரவு நேரங்களிலே தோசை சாப்பிடும் விருப்பம் உடையவர். அன்று காலையிலே நான் தோசை செய்தபொழுது, தோசை சரியாக வரவில்லை. கர்த்தாவே இந்த ஊரில் உள்ள ஹோட்டல்களில் எல்லாம் இரண்டு அடி மூன்று அடி அளவில் தோசை செய்கிறார்கள். நான் செய்கிற காரியத்தில் ஏன் வரவில்லை என்று ஜெபத்திலே கேட்க ஆரம்பித்தேன். தோசைக்கல்லில் வெங்காயத்தைப் பூசி தோசை செய் என்று கர்த்தருடைய ஆலோசனை அருளப்பட்டது. அவ்வாறு நான் செய்தபோது, நேர்த்தியான விதத்தில் தோசை சுட முடிந்தது. கர்த்தரின் ஆலோசனை அவர்களுடைய வாழ்க்கையில் ஆச்சரியமாக இருந்தது. 

 

II கர்த்தர் ஏன் ஆலோசனைத் தருகிறார்?

1)விழுந்து போகாதபடி இருக்க

"ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்…"  நீதிமொழிகள் 11:14

           இன்று ஆலோசனை இல்லாது பல காரியங்களிலே தோல்வியும் துக்கமும் அடைகிறோம். சில காரியங்கள் முடிந்தபிறகு இதை இவ்விதமாக செய்திருக்கலாமே என்று கலங்குகிறோம். இவ்வுலகத்தின் அதிபதியானவன் நாம் விழுந்து வேதனை அடைய வேண்டுமென்று நமக்கு எதிராக செயல் பட்டுகொண்டே இருக்கிறான். ஆனால் கர்த்தரோ விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிற தேவன். ஆகவே நாம் விழுந்து போகாதிருக்க ஏற்ற நல்ல ஆலோசனைகளைத் தந்து அவருடைய நல்ல வழியிலே நடக்கச் செய்கிறவராய் இருக்கிறார்.

           ஒரு முறை ஒரு தேவ ஊழியரோடு இணைந்து ஆலோசனை செய்து ஊழியங்களைச் செய்ய அவருடைய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். போகும் வழியிலே இன்று நீ அங்கு செல்ல வேண்டாம் என்ற ஆலோசனை வார்த்தைகள் என்னைத் தடுத்து நிறுத்தியது. தங்கி இருந்த இடத்திற்கே திரும்பினோம். சில மணி நேரம் போன்கள் இயங்க வில்லை. போன் இயங்க ஆரம்பித்தபொழுது, அந்த தேவ ஊழியர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டார். நாங்கள் தங்கி இருக்கிற இடத்திலே தான் இருக்கிறோம் என்று அறிவித்தோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறினார். அவருடைய கட்டடத்திற்கு கீழாக குண்டு வெடித்தபடியினால் அநேகர் மாண்டு போனார்கள். அன்று ஆலோசனையின் வார்த்தை கிடையாதிருந்தால் நாங்களும் குண்டு வெடிப்பிலே விழுந்து அழிந்து போயிருப்போம். விழுந்து போகாதிருக்க ஆலோசனைத் தேவை.

2) வழியைக் காட்டுவதற்கு                     

"நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்."  சங்கீதம் 32:8

     நாம் நடக்க வேண்டிய வழி இன்னதென்று அறியாத படியினால் தவறான வழிகளைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையில் தடுமாற்றம் அடைகிறோம். நாம் நடக்க வேண்டிய வழி என்ன என்று காண்பிப்பதற்கு, அறிவிப்பதற்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் அருளும் ஆலோசனையின்படி அவர் காட்டும் வழியிலே நாம் நடக்கும் போது தடைகளும், தீங்கும் நமக்கு விரோதமாய் எழும்பினாலும் அனுகூலமான காரியங்கள் கைகூடிவரும்.

      பவுலும் சீலாவும் ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்கு தடை பண்ணப்பட்டு மக்கெதோனியா தேசத்திற்கு நடத்தப்பட்டார்கள். அவ்வாறு வழி நடத்தப்பட்ட பவுலையும், சீலாவையும் கர்த்தர் மக்கெதோனியாவிலே பயன்படுத்தினார். தங்கவும், உண்டு ஊழியங்களைச் செய்யவும் ஏற்ற இடத்தைப் பெற்று ஊழியங்களைச் செய்தார்கள்.

 3)ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயம் உண்டாகும்

 "...ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்." நீதிமொழிகள் 24:6

      நம்முடைய வாழ்க்கையானது ஜெயமுள்ளதாய் இருக்க வேண்டுமானால் ஞானவான்களும் கர்த்தருடைய ஊழியர்களும் அருளுகிற ஆலோசனைகள் நமக்கு அவசிமாய் இருக்கிறது. இதனால் நாம் ஜெயங்கொள்ளுவோம். இன்று நம்முடைய வாழ்க்கையிலே சத்துருவின் செயல்களினால் வருகிற தடைகளையும், நமக்கு எதிராய் இருக்கக்கூடிய காரியங்களையும் நாம் ஜெயிக்க வேண்டும். அநேக ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல் நாட்டு விமானம் கடத்தப்பட்டது. அதை Entebbe என்ற இடத்தில் விமானத்தில் பயணம் செய்த மக்களோடு வைத்திருந்தார்கள். அதை இஸ்ரவேல் நாட்டினுடைய அரசியல் தலைவர்கள், இராணுவ மந்திரிகள் மீட்பதற்கு ஆலோசனை பண்ணினார்கள். அந்த ஆலோசனையின் முடிவிலே மூன்று விமானங்களில் இராணுவ வீரர்கள் சென்று அனைத்து மக்களையும் மீட்டு அந்த இடத்தில் இருந்த எதிரிகளின் மீது ஜெயம் கொண்டு திரும்பினார்கள். அநேக ஆலோசகர்கள் இருந்தபடியால் அவர்களின் முயற்சி முழுமையான ஜெயமாக இருந்தது. ஆலோசனையினால் ஜெயம் வரும்.

III ஆலோசனையினால் உண்டாகும் ஆசீர்வாதங்கள்

1.கர்த்தரின் ஆலோசனையினால் குறை நீங்கும்

" அந்த திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்த போது, மணவாளனை அழைத்து:" யோவான் 2:9

         கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தாயார் மற்றும் சீஷர்கள் கானா ஊர் திருமண வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அழைக்கப்பட்டிருந்த திருமண வீட்டில் திராட்சரசம் குறைவுபட்டு போயிற்று. இந்தக் குறைவினை இயேசுவின் தாயார் திராட்சரசம் இல்லை என்று யேசுவிடம் தெரிவித்தார். இவ்வுலகத்தில் ஓவ்வொருவரின் அனுதின வாழ்க்கையிலும் குறைகள் ஏற்பட்டு கலங்கித் தவிக்கிறோம். ஆனால் இயேசு கிறிஸ்துவோ குறைவுகள் நீங்கிய நல்வாழ்வை பெற்றுக்கொள்ள ஆலோசனைகளை அருளுகிறார். திருமண வீட்டிலே அவமானத்தைக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை, குறை தீர்க்கப்படமுடியாத போராட்டமான சூழ்நிலை, மணவாளன் ஏளனப்படக்கூடிய சூழ்நிலை. அவர் என்ன சொல்கிறாரோ அந்தப்படியே செய்யுங்கள் என்ற தாயாரின் ஆலோசனைக்கு இரங்கி, அவர்கள் இயேசுவின் ஆலோசனைக்கு செவி கொடுத்தார்கள். இன்று அநேகர் மரியாளின் ஆலோசனைக்கு செவிகொடாது பாரம்பரிய பழக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அந்த திருமண வீட்டிலே குறைவு உண்டான போது, வேலைக்காரர்கள் இயேசு கிறிஸ்துவின் ஆலோசனையைக் கேட்டபடியினால் தண்ணீரானது திராட்சரசமாக மாறியது. வல்லமையான பெரிதான சாட்சியைக் கேட்க முடிந்தது. இகழப்படவேண்டிய மணவாளன் புகழப்படும் நிலையைப்  பார்க்க முடிகிறது.

        அருமையான சகோதரனே, சகோதரியே ,உன் வாழ்க்கையிலே உண்டான குறைவுகளினாலே கலங்கி இருக்கிறீர்களா? இன்றைக்கே இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் அழைத்துக் கொள்ளுங்கள். அவர் ஆலோசனைக் கர்த்தர். அவர் அருளுகிற ஆலோசனையை ஏற்று நீங்கள் முழுமனதோடு செயல்படும்போது, மாற்றங்களும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் உண்டாகும்.

       சரீரக் குறைவாய் இருக்கலாம், சுகம் குறைவாக இருக்கலாம். பணக்குறைவாய் இருக்கலாம். எது குறைவாயிருந்தாலும் குறைவை நீக்கி உங்களை ஆசீர்வாதிக்கிற இயேசு கிறிஸ்து ஜீவிக்கிறார். ஒரு பகுதி ஊழியத்தின் போது ஒரு குடும்பத்தார் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு  அழைத்திருந்தார்கள். அவர்களுடைய பெயரானது இந்திய குடும்பத்தாரின் பெயராக இருந்தது. நீங்கள் எவ்விதமாய் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டீர்கள் என்று கேட்டேன். உங்களைப்போல தமிழ் மொழி பேசும் போதகர் ஒருவர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். தமிழ் மொழியிலே பேச, கேட்க விரும்பினபடியால் அவர்கள் நடத்திய கூட்டத்தில் பங்கு பெற்றோம். வீட்டிற்கு சாப்பிட வரவேண்டும் என்று அழைத்தோம். நான்கைந்து பேராக வருவார்கள் என்று எதிர் பார்த்தோம். ஆனால் பத்து நபர்களாக வந்து விட்டார்கள். நாங்கள் பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று இருந்த ஆகாரத்தை எல்லாம் அவர்களுக்கு பரிமாற முடிவு செய்திருந்தோம். அந்த ஊழியர் இந்த ஆகாரத்தை ஆசீர்வதியும், இதை போதுமானதாக மாற்றும் என்று வேண்டுதல் செய்தார். அந்த ஆகாரத்தை பரிமாறினோம். அனைவரும் சாப்பிட்டவுடன் மீதி இருந்தது. நாங்களும் சாப்பிட்டோம். மீதம் இருந்தது, 3 நாட்கள் அது எங்களுக்கு போதுமானதாக இருந்தபடியால் அந்த இயேசு கிறிஸ்துவை எங்களின் ஆண்டவராக ஏற்றுக்கொண்டோம் என்று சொன்னார்கள். நம்முடைய வாழ்க்கையில் உண்டாகும் சகலக் குறைகளையும் தீர்க்க வல்லவர் இயேசு கிறிஸ்து.

              இன்று அவருடைய மாறாத ஆலோசனையைக் கேட்டு நடப்போம். குறை நீங்கி ஆசீர்வதிக்கப்படுவோம்.

2) கர்த்தரின் ஆலோசனையினால் சுகம் உண்டாகும்

"அப்பொழுது எலிசா; அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்." 2 இராஜாக்கள் 5:10

                நாகமான் என்ற சீரியா ராஜாவின் படைத்தலைவன் குஷ்டரோகியாய் இருந்தான். இஸ்ரவேல் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுவரப்பட்ட சிறு பெண், சமாரியாவில் இருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில்  போவாரானால் நலமாயிருக்கும் என்று ஆலோசனை கூறினாள். அந்த வார்த்தையின்படி படைத்தலைவன் நாகமான் தன் ராஜாவிடம் கடிதம் வாங்கிக் கொண்டு இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்தான். கடிதத்தைப்பெற்ற ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிட வேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புவதற்கு கொல்லவும், உயிர்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்று ராஜா கலங்கினான். இதைக் கேள்விப்பட்ட எலிசா தன்னிடத்தில் அனுப்பும்படி ராஜாவுக்குச் சொல்லி அனுப்பினான். தன்னிடத்தில் வந்த நாகமானுக்கு, யோர்தானில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு, அப்பொழுது உன் மாம்சம் மாறி சுத்தமாவாய் என்று சொல்லச் சொன்னான். இந்த நாகமானுக்கோ ஒரு ஏமாற்றம். தன்னை தொட்டு தடவி சுகமாக்குவார் என்று எதிர் பார்த்த அவனுக்கு ஆலோசனையின் வார்த்தைகள் ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் அவன் ஊழியக்காரன் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்யச் சொல்லாமல் ஸ்நானம் பண்ணு என்று எளிதான ஆலோசனையின் வார்த்தைகளை சொன்னபடியினால் அதை செய்யுங்கள் என்று செய்யச் சொன்னான். நாகமானோ தேவ மனுஷனுடைய வார்த்தையின்படியே யோர்தானில் இறங்கி எழுதரம் மூழ்கினபோது ஒரு சிறு பிள்ளையின் மாம்சத்தைப்போல் மாறி அவன் சுத்தமானான்.

          இன்றைக்கு நாமும் கூட கர்த்தருடைய ஊழியக்காரருடைய ஆலோசனையைக் கேட்டு அதன்படி செய்யும்போது, சுகமும், பெலனும் அடைவோம்.

                              ஒரு முறை தன் தொண்டையின் பகுதியில் பாதிப்படைந்த சகோதரர் கலங்கி ஜெபிக்க வந்தார். பல ஆண்டுகளாக தன் தொண்டையின் வலிக்காக கலங்கிக் கொண்டு இருந்தார். ஊழியரிடத்தில் சென்ற போது அவர் தொட்டு ஜெபித்துவிட்டு உப்பைத் தண்ணீரில் சேர்த்து உன் தொண்டையை கொப்பளியுங்கள் என்று ஆலோசனை கூறினார் . அதை ஏற்று அதன்படி செய்தார். அந்த ஆலோசனையின் படி செய்த அவரில் அற்புத சுகம் உண்டாயிற்று. கர்த்தருடைய ஊழியர்களின் ஆலோசனைகள் நம் பெலவீனங்களை நீக்கி புது வாழ்வை உண்டாக்கும் .

 3) பஞ்சகாலத்தில் குறைவின்றி வாழ உதவிச் செய்யும்.

"அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவன் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.''  1இராஜாக்கள் 17:15

    எலியா தீர்கதரிசியானவன் தேவனுடைய வார்த்தையின்படி ஆகாப் இராஜாவிடம் சென்று என் வார்த்தையின் படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன் என்றான். கர்த்தர் எலியாவை வழிநடத்தினார் .கேரீத் ஆற்றண்டையிலே ஒளிந்து கொண்டு இருந்தான். கர்த்தர் அவனை காகங்களை கொண்டு போஷித்தார். மழை இல்லாத காரணத்தினால் ஆறு வற்றிப் போயிற்று. கர்த்தரோ அவனை எழுந்து சாறிபாத்துக்கு போக நடத்தினார். இவ்விதமாய் அவன் செய்தபோது சாறிபாத்தில் உள்ள ஒரு விதவையைச் சந்தித்தான். அவன், அவளிடம் நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக்  கொண்டுவா என்றான். தண்ணீர் கொண்டுவர அவள் போகிறபோது, அத்துடன் முதலாவது சுடுகிற அப்பத்தையும் கொண்டுவரச் சொன்னான். அந்த விதவை அவ்வாறே செய்தாள். எலியாவின் ஆலோசனை வார்த்தையின்படியே பஞ்சக்காலத்திலே குறைவின்றி நிறைவைக் கண்டாள்

      கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே , ''உன்பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.'' நீதிமொழிகள் 3:9ன்படி முதலாவது கனியை கர்த்தருக்கு கொடுக்கும் போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறவராய் இருக்கிறார். இதை நாம் செய்யக் கற்றுக் கொள்ளும் போது எந்த பஞ்சக்  காலமானாலும் குறைவிலாது வாழ  போஷிப்பார். இதைப்போல 2இராஜாக்கள் 4:1-7 உள்ள எலிசாவின் ஆலோசனை  வார்த்தையின் படி செய்த தீர்கதரிசியினுடைய மனைவி தனக்கு இருந்த கடன்களை தீர்க்கவும், தன் வாழ்க்கைக்குரிய செல்வத்தை அடையவும் செய்தார்

4) கர்த்தரின் ஆலோசனைகள் தோல்வியை ஜெயமாய் மாற்றும் ''

''அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத் தக்கதாக மிகுதியான மீன்களை பிடித்தார்கள்.''

அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் செய்கை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். லூக்கா 5:6,7.

     இயேசு கிறிஸ்து போதனை செய்து முடித்த பின்பு பேதுருவைப் பார்த்து ஆழத்திலே படகைத் போடுங்கள் என்றார். தோல்வி நிறைந்த நேரத்திலே சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளுக்கு பேதுரு கீழ்ப்படிந்தார். அந்தப்படியே படகை ஆழத்திலே தள்ளி வலையைப் போட்ட போது நினையாத மிகுதியான மீன்களைப் பிடித்தான். அந்த நாளில் தோல்வியானது கர்த்தரின் ஆலோசனை வார்த்தையினால் ஜெயமாக மாறியது. இந்த ஆலோசனை வார்த்தைகளை நாம்  கேட்க கர்த்தரிடம் நெருங்குவோம். அவருடன் உள்ள உறவை உருவாக்கிக் கொள்வோம்.

             கர்த்தர் நம்மை ஆசீர்வதிபாராக.    

            கிறிஸ்துவின் பணியில்,

            சகோ.C. எபனேசர் பால்.