“…உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய்,

                                                                                                     அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்..."

                                                                                                                                                                                                                 மத்தேயு 25:21

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வாழ்த்துகிறேன். இன்று நாம் எல்லாவற்றிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்று  நம்முடைய தேவன் நம்மைக் குறித்து எண்ணம் கொண்டவராக இருக்கிறார். உண்மையான வேலைக்காரர் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்க்கிற மக்கள் ஏராளம். உண்மையாய் இருப்பதால் வரும் ஆசீர்வாதத்தையும், எவைகளில் நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.

 

உண்மையாய் இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள்

1. உண்மையாய் இருக்கும்போது உயர்வும், எஜமானின் மகிழ்ச்சியில் பங்கும் கிடைக்கும்

 

எந்த மனிதன் தன்னுடைய வேலையில் உண்மையும் உத்தமமுமாய் இருக்கிறானோ, கர்த்தர் அந்த மனிதனை உயர்த்துகிறார். எஜமானுக்கு மிகுந்த ஆதாயம் கொண்டு வர தனது உண்மையான உழைப்பைத் தரும் எந்த நபரையும் கர்த்தர் கைவிடவே மாட்டார்.

 

ஒரு அருமையான சிறுவன் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஸ்தாபனத்தில் பணியில் சேர்ந்தான். தனது கடமைகளைச் செம்மையாகவும், துரிதமாகவும், உற்சாகமாகவும் செய்தான். இதன் விளைவாக, எஜமான் அதிகமான வேலைகளைத் தர ஆரம்பித்தார். அவனது சம்பளத்தையும் உயர்த்தினார். தனது குடும்பத்திலுள்ள ஒருவனைப் போல அவனை நடத்த ஆம்பித்தார். அந்தச் சிறுவனுக்கு வளரவளர அதிகப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. உண்மையாய் வேலை செய்த அந்தச் சிறுவனை அந்த ஸ்தாபனத்தின் முக்கிய பொறுப்பை வகிக்க எஜமான் உயர்த்தினார்.

 

நாம் உண்மையாக நமது காரியங்களைச் செய்யும் போது நம்முடைய தேவன் நம்மை உயர்த்துகிறார். அது மாத்திரமல்ல கர்த்தரின் சமுகத்தில் நாம் உண்மையாக நமது காரியங்களைச் செய்யும் போது, எஜமானின் சந்தோஷத்தில் பங்கு பெறுகிற மக்களாகவும் நாம் காணப்படுவோம்.

2. உண்மை உள்ளவர்களில் கர்த்தர் பிரியப்படுகிறார்.

"...உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்”

                                                                                                                            நீதிமொழிகள் 12:22

 

நாம் உண்மையாய் இருக்கும்போது கர்த்தர் நம்மேல் பிரியமாய் இருப்பார். இன்று கர்த்தருக்குப் பிரியமான அநேக காரியங்கள் உண்டு. அவைகளில் ஒன்று நாம் உண்மையாக இருப்பது ஆகும். ஒரு தகப்பன் ஒரு பிள்ளையை அதிகமாய் நேசிப்பார் என்றால், அந்தப் பிள்ளைக்கு மாத்திரம் தனிச் சலுகை காட்டுவார். பிரியமானதைச் செய்து, அந்தப் பிள்ளையின் ஒவ்வொரு காரியமும் ஜெயமாயும், மிகுந்த கரிசனையுடன் சந்திக்கப்பட்டதாயும் இருக்கும்.

 

தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்தான். அதினிமித்தம் ராஜா அவனை எல்லாப் பிரதானிகளுக்கும் மேலாக உயர்த்த வேண்டும் என்று விரும்பினான். தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்தபடியால் அவன் கர்த்தருக்குப் பிரியமானவனாக மாறினான். தானி. 9:23ல் 'நீ மிகவும் பிரியமானவன்' என்று தேவனுடைய தூதனாகிய காபிரியேல் அவனைப் பார்த்து சொன்னதைப் பார்க்கிறோம். அத்துடன் அவனுடைய ஜெபத்திற்கு உடனே பதில் வரத்தக்கதாக தேவன் கிருபை செய்தார். அதோடு அவன் சிங்கக் கெபியிலே போடப்பட்டபோது, தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவனைச் சேதப்படுத்தாதபடி சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். இவ்விதமாய் அடிமையாய் வந்த தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்தபடியால் கர்த்தருக்குப் பிரியமாய் இருந்து ஆசீர்வதிக்கப்பட்டான்.

3. உண்மையானவர்களைக் கர்த்தர் காத்துக் கொள்ளுவார்

உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்பு செய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.” சங்கீதம் 31:23

இன்று கர்த்தர் தம்மிடம் உண்மையாய் இருக்கிற மக்களை எல்லா சூழ்நிலையிலும் காத்து நடத்துகிறார். ஒரு முறை ஒரு ஆசிரியை ஒரு சாட்சியைக் கூறினார்கள். ஒரு நாள் தனது பள்ளிக்கூடப் பணி முடிந்து வீடு திரும்ப முடியாது போய்விட்டது. அன்று அப்பகுதியில் அதிகமாகச் சண்டை நடந்ததால் இந்த நிலை. இந்த ஆசிரியையைப் போல மற்றும் சிலர் அன்று பள்ளியிலேயே தங்க நேரிட்டது. இரவு வேளையில் சண்டை அதிகரித்தது. கர்த்தரை ஆராதிக்கிற இந்த ஆசிரியர்கள் ஒரே அறையில் இருந்து துதித்து பாடி, ஜெபிக்க ஆரம்பித்தனர். உண்மையான உள்ளத்துடன் தேவ சமுகத்தை நோக்கிக் கதறினார்கள். குண்டுகள் அருகில் வெடித்தது. ஆனால் சேதம் ஏற்படவில்லை. காலை வரை கர்த்தரை உண்மையாகத் தேடினார்கள். காலையில் எழுந்து வெளி வந்த சமயம், அவர்கள் தங்கின பிளாக்கைத் தவிர எல்லா கட்டிடமும் குண்டு வெடிப்பினால் தகர்க்கப்பட்டு தரைமட்டமாய் இருந்ததைக் கண்டார்கள். தம்மை நோக்கி உண்மையாய் கூப்பிட்ட தம்முடைய பிள்ளைகளை அழிவிலிருந்து காத்து கொண்டார் என்றார்கள்.

 

எசேக்கியா ராஜா நோய்வாய்ப்பட்டு வேதனையோடு இருந்த நேரத்தில் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாய் கர்த்தருடைய வார்த்தை சொல்லப்பட்டது. நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர் என்ற கர்த்தரின் வார்த்தையைக் கேட்டபோது, எசேக்கியா மிகவும் அழுது, ஆ, கர்த்தாவே, உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி எசேக்கியா மிகவும் அழுதான். மனஉண்மையாய் இருந்த எசேக்கியாவுக்குக் கர்த்தர் கிருபையாய் ஜீவனை 15 ஆண்டுகள் கூட்டிக்கொடுத்தார்.

 

4. உண்மையானவர்களைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்

"உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்..."

                                                                                                                நீதிமொழிகள் 28:20

 

நம்முடைய தேவன் உண்மையுள்ளவர். அவர் பொய்யுரையாத தேவன். பொய்யையும், பொய்யனையும் கர்த்தர் அருவருக்கிறார். இன்று பலவிதமான பொய்களைக் கூறி, ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறார்கள். அவைகள் மாயையும் குறைவுடையதுமாய் இருக்கிறது. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கும் போது வேதனையைக் கூட்டார்.

 

யாக்கோபு தனது தகப்பனாகிய ஈசாக்கிடம் தான் மூத்தக் குமாரன் ஏசா என்று பொய் சொல்லி ஏமாற்றி, ஆசீர்வாதங்களைப் பெற்றான். அவனது நிலை மிகவும் பரிதாபமாக மாறியது. அவன் தனது சகோதரனுக்குப் பயந்து ஓட வேண்டிய நிலை வந்தது. பயம், கவலை ஆட்கொண்டது. இதன் விளைவாக பல ஏமாற்றங்களையும் அவன் அடைந்தான். நீ எந்த அளவின்படி அளக்கிறாயோ அந்தப்படியே உனக்கும் அளக்கப்படும். பொய் சொல்லி காரியங்களைச் சாதிக்கலாம். ஆனால் அதில் இழப்பு, ஏமாற்றம் வரும். உண்மையாக நாம் செய்யும்போது கர்த்தரின் ஆசீர்வாதம் பெருகும்.

ஒரு முறை ஒரு சகோதரர் ஊழியத்தினிமித்தம் வெளிநாடு செல்ல திட்டமிட்டார். விசா எடுப்பதற்கு அந்த நாட்டுத் தூதரகத்தை அணுகிய சமயம் நீங்கள் எதற்குப் போகிறீர்கள் என்று கேட்டனர். அங்கு யாராவது இருக்கிறார்களா? என்றார்கள். அதற்கு தான் ஊழியம் செய்ய செல்வதாயும், அங்கு யாரும் இல்லை என்றும் கூறினார்கள். இந்தப் பதிலினால் நாங்கள் உங்களுக்கு விசா கொடுக்க முடியாது என்றனர். அப்படியானால் சரி என்று அந்தச் சகோதரர் கூறினார். உங்களுக்கு யாராவது தெரியும் என்று சொன்னால் விசா தருகிறேன் என்று மீண்டும் சொல்ல, அந்த சகோதரர் அது பொய், நான் அதைச் சொல்லமாட்டேன் என்றார். அந்த அதிகாரிக்குச் சந்தோஷம். இந்த உண்மையான மனிதனுக்கு எப்படியாவது விசா கொடுக்கத் திட்டமிட்டார். உங்கள் சகோதரர் எங்கே என்று கேட்டார். என் சகோதரர் சில தினங்களுக்கு முன் அந்த நாட்டில் ஊழியம் செய்ய சென்று உள்ளார் என்று கூறினார்.உடனே அதிகாரி சகோதரனைக் காண என்று எழுதுங்கள் என்றார். உண்மையைப் பேசி, எழுதிய சகோதரருக்கு விசா கிடைத்தது. அதுமட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு பலமுறை சென்று வர மற்ற நாடுகளுக்கும் கர்த்தர் விசா கிடைக்கச் செய்தார்.

 

வாழ்வில் உள்ளத்தில், எண்ணத்தில், சிந்தையில், செயலில் உண்மை உள்ளவர்களைக் கர்த்தர் தம்முடைய பரிபூரண ஆசீர்வாதத்தினால் நிரப்புகிறார். இன்று என் வாழ்வில் ஆசீர்வாதமே இல்லையே என்று கலங்கும் சகோதரனே, சகோதரியே, கர்த்தரின் சமூகத்தில் இன்று முதல் உண்மையாக வாழ உன்னை ஒப்புக் கொடு. பொய்யைக் களைந்து மெய்யைப் பேசு. உனது முயற்சியிலும், உனது செயலிலும் கர்த்தருக்கு முன்பாக உண்மையாக நீ இருப்பாயானால் இன்று கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

 

சாலொமோன் உண்மையாக கர்த்தரைத் தேடினான். கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்தினான். அன்று இரவே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி அவன் மனம் விரும்பின ஞானத்தையும், மிகுந்த செல்வத்தையும் ஈந்தார். உண்மையானவர்களுக்குக் கர்த்தர் பரிபூரண ஆசீர்வாதத்தை மெய்யாகவே தருகிறார்.

 

பொருளாதாரத்தில் குறைவுபட்டு கலங்கிய நான் தோல்வியும், துக்கமும் நிறைந்தவனாக இருந்தேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை எனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு முழு மனதுடன் உண்மையாக தேடினேன். இதன் பலனாக எனது எல்லையில் காணப்பட்ட சேதங்கள் அகன்றது. குறுகிய காலத்தில் கர்த்தரின் ஆசீர்வாதம் என்னிலும், எனது எல்லையிலும் நிறைய ஆரம்பித்தது. இழந்திருந்த சமாதானம், சந்தோஷம் பெருகிற்று. பொருளாதாரத்தில் மாற்றம் வந்தது. நமது கர்த்தர் தமக்கு முன்பாக உண்மையான வார்த்தை, சிந்தை உள்ளவர்களைத் தமது பரிபூரண ஆசீர்வாதத்தினால் நிரப்புகிறார்.

 

அன்பு சகோதரனே, சகோதரியே, உங்கள் வாழ்வில் உண்மை இருக்குமானால், கர்த்தர் கட்டாயம் பரிபூரண ஆசீர்வாதத்தைத் தருவார். உண்மையாய்த் தம்மைத் தேடுபவர்க்குத் தம்மை வெளிப்படுத்தும் தேவன், தங்களை சகல நன்மைகளினாலும் நிரப்புவார். மோசே உண்மையாக இருந்தபடியால் கர்த்தர் அவனை வல்லமையாய்ப் பயன்படுத்தினார். நேற்றும் இன்றும் என்றும் மாறாத கர்த்தர் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதத்தை அளவில்லாமல் ஊற்றுவார்.

 

5. உண்மையுள்ளவர்களை ஜீவ கிரீடத்தினால் முடி சூட்டுகிறார்

“...நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்."

                                                                                                                 வெளிப்படுத்தல் 2:10

 

நமது கஷ்டத்திலும், பாடுகளிலும் நாம் கர்த்தரையே உண்மையாக சேவிக்கவும், நம்பவும் வேண்டும். ஏனென்றால் சோதனை அல்லது உபத்திரவ நேரத்தில் தான் பரிகாரிகளையும், பரிகாரங்களையும் தேடும் உணர்வு, சூழ்நிலை உருவாகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நாம் கர்த்தருக்கு முன்பாக உண்மையாகக் காணப்பட வேண்டும். இவ்வாறு ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்ல மரணபரியந்தம் நாம் இருக்கும்போது நமது நித்திய வாழ்வில் ஜீவகிரீடத்தைப் பெறுகிற பாக்கியசாலிகளாக மாறுகிறோம்.

இவ்விதமாக கர்த்தருக்கு முன்பாக உண்மையாக இருக்கும் போது, பற்பலவிதமான ஆசீர்வாதங்களினால் நிரப்புகிறார். கர்த்தர் எவைகளில் நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் என்று பார்ப்போம்.

எவைகளில் உண்மையாக இருக்க வேண்டும்?

1.  நம்முடைய பணியில் நாம் உண்மையாய் இருக்க வேண்டும்.

"...தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்த படியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை." தானியேல் 6:4

தானியேலின் உண்மையுள்ள வாழ்வு அவனை முற்றுமுடிய மேலாக உயர்த்தியது. அதுமாத்திரமல்ல தானியேலின் வாழ்க்கை வெற்றியுள்ளதாக இருந்தது என்று தானியேல் 6:28ல் பார்க்கிறோம். அருமை தேவப்பிள்ளையே, உனது தொழில், வேலையில் நீ உண்மையாக இருக்கிறாயா ? உண்மையற்ற உனது செயலினாலே ஆசீர்வாதங்களுக்குப் பதிலாக சாபங்களைப் பெருக்கிக் கொள்ளாதே. எஜமான் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் உண்மையாக உழைக்கிறாயா? குடும்பங்களில் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு முன்பாக சொல்லிலும், செயலிலும் உண்மையுள்ள வர்களாய் இருக்க வேண்டும். பெற்றோருக்கு மறைத்து, உண்மையற்ற விதத்தில் காரியங்களைச் செய்து, ஆசீர்வாதத்தை இழந்து விடுகிற பிள்ளைகள் பலர்.

ஒரு அருமையான சகோதரன் வெளிநாட்டில் சென்று வேலை செய்ய ஆரம்பித்தார். தனது முதலாளி பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி தனது வேலை நேரத்தில் உண்மையாகக் காணப்பட்டார். இதின் காரணமாக முதலாளி அவனை நேசிக்க ஆரம்பித்தார். அநேக சலுகைகளைக் கொடுத்தார். கண்ணியமாக நடத்தினார். ஆம் இன்று நாம் உண்மையாக நம் பணியைச் செய்யும் போது கர்த்தரின் ஆசீர்வாதங்கள் பெருகும்.

2.  நமது ஆவியிலும் நாம் உண்மையாய் இருக்க வேண்டும்

“...ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்."                                

                                                                                                                                  நீதிமொழிகள் 11:13

நமது ஆவியானது கர்த்தர் தந்த தீபமாகயிருக்கிறது. இந்த ஆவியில் நாம் உண்மையாக கர்த்தரைத் தேடி நமது காரியங்களைச் செய்யும்போது ஆவிகளை ஆராய்ந்து அறிகிற தேவன் உண்மை யானவர்களுக்குரிய ஆசீர்வாதத்தை அருளுகிறார். ஆவியில் உண்மை பெருகும்போது மாத்திரம் சிந்தை, செயலில் உண்மை காணப்படும். இந்த ஆவியில் உண்மையில்லையென்றால் ஆவிக்குரிய போராட்டமும், தவறான சிந்தைகளும், தீய காரியங்களும் தோன்றி நமது பரிசுத்த வாழ்வைக் கெடுத்துவிடும். ஆவியில் உண்மையை நாம் காத்துக் கொள்ளும்போது கர்த்தரின் கிருபை வரங்களைப் பெறத் தகுதி அடைகிறோம்.

3.  நமது தேவனைக் கூப்பிடுவதிலும் தொழுது கொள்வதிலும் உண்மை வேண்டும்

"தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்."

                                                                                                                                         சங்கீதம் 145:18

நாம் உண்மையாக கர்த்தரைக் கூப்பிடும்போது அவர் சமீபமாக இருக்கிறார். இது நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய சிலாக்கியம். சில அவசரமான நேரத்தில் நமக்கு அருமையான மக்களை நாம் கூப்பிடும் சமயம் சாக்குப்போக்குச் சொல்லி வர மறுத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையுள்ள தேவன் உண்மையை விரும்பும் தேவன், தம்மை நோக்கி உண்மையாய் கூப்பிடுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார்.

எனது வாழ்விலே இருதய நோயினால் அதி தீவிர சிகிச்சை அறையில் இருந்த சமயம் என் மனைவி அருகேயிருந்து வேதத்தை வாசித்தாள். அந்த வேதப்பகுதி என் உள்ளத்தைக் கவர்ந்தது. என் உள்ளத்தில் உண்மையாகக் கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். என்ன ஆச்சரியம்! உடன் அற்புத சுகத்தைப் பெற்றேன். உண்மையாய் கூப்பிடும் போது அவர் சமீபமாக வந்து நம்மை ஆசீர்வதிக்கிறார்.

''...அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்...” யோவான் 4:24. அவரைத் தொழுது கொள்வதிலும் நாம் உண்மையாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர் சொல்லுகிறார்கள் என்று ஏனோதானோ என்று கர்த்தரைத் தொழுதுகொள்வோமென்றால், நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்ளுகிற மக்களாக இருக்கிறோம்.

எலியா பலிபீடத்தைச் செப்பனிட்டு, உண்மையாகக் கர்த்தரைத் தொழுது கொண்டான். இதின் காரணமாக அக்கினி இறங்கி பலிபீடத்திலிருந்த எல்லாவற்றையும் நக்கிப்போட்டது. சத்துருவின் மீது ஜெயமும் கொண்டான். உண்மையாய் தொழுது கொள்ளுகிற யாவரையும் கர்த்தர் கனப்படுத்துகிறவராக இருக்கிறார்.

4. உதவி செய்வதில் உண்மை வேண்டும்

"...நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய்." III யோவான் 1:5

இன்று நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையாய் இருக்க வேண்டும். உதவி செய்வது நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு அன்பின் காரியம் என 1 யோவான் 3:16, 17-ல் பார்க்கிறோம். உதவியற்ற எளியவர்களுக்கு நாம் உண்மையாக உதவி செய்யும்போது கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.

ஒருமுறை புத்தகங்களை அனுப்ப ஸ்டாம்ப் வாங்குவதற்கு என்னிடம் ஒரு சிறிய தொகை இருந்தது. அன்று காலை ஒரு தாய் தனது மகளுடன் ஜெபிக்க வந்தார். மகள் மகிழ்ச்சியாக எனக்கு ஆசிரியர் பயிற்சி படிக்க இடம் கிடைத்துள்ளது. இன்று பணம் கட்ட வேண்டும், பணம் இல்லை, அதற்காக ஜெபியுங்கள் என்றார்கள். அதிகமாக கர்த்தரிடம் ஜெபித்து பெற்ற இடம் அது. கர்த்தரின் ஆவியானவர் அவர்கள் கட்டுவதற்கான தொகை என்னிடம் இருப்பதை உணர்த்தி, அவர்களுக்கு உதவி செய்ய உணர்த்தினார். என்னிடம் இருப்பது இவ்வளவு பணம் தான். இதை நான் கொடுத்து உதவி செய்தால் இன்று ஸ்டாம்ப் வாங்க வேண்டிய தொகை இன்னும் அதிகமாகுமே என்றேன். கடைசியில் கர்த்தரின் உணர்வுக்கு இடம் கொடுத்து பணம் முழுவதையும் கொடுத்து உதவினேன். நன்றி கூறி சென்று விட்டார்கள். எனது உள்ளத்தில் என்ன செய்வதென்று கேள்வி. சிறிது நேரத்தில் இன்னொரு சகோதரர் வந்தார். பிரதர், எனது மனைவி நேற்று இந்தப் பணத்தை உங்களுக்குக் கொடுக்கச் சொன்னார் என்றார். இவ்வளவு ரூபாய்க் கொடுத்தனுப்பினார்களா? என்றேன். அந்தச் சகோதரர் ஆச்சரியமடைந்து எப்படித் தெரியும் என்றார். எனது தேவையை நான் கர்த்தரிடம் கூறினேன் என்றேன். உண்மையாய் நாம் உதவி செய்யும்போது கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.

5.  ஊழியத்தில் உண்மை

“...நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன்." 1 தீமோத்தேயு 1:12

இன்று கர்த்தர் ஒவ்வொரு ஊழியரிடமும் உண்மையை விரும்புகிறார். பெயரளவில் அல்ல, பெயர் பிரஸ்தாபத்திற்காகவும் அல்ல, நாம் உண்மையாக கர்த்தரின் நாமத்தையே உயர்த்திச் சொல்ல வேண்டும். அழிந்து போகிற ஆத்துமாக்களை மீட்க உண்மையாக நமது ஜெபம், ஆலோசனைகள் இருக்கும்போது, கொஞ்சத்தில் உண்மையாக இருந்த நம்மை அநேகத்தில் அதிகாரியாக உயர்த்துவார்.

மோசே எங்கும் உண்மையுள்ளவனாகயிருந்தான் என்று கர்த்தரே சாட்சி கூறியுள்ளார். இதன் காரணமாக அவன் அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்யக்கூடிய கிருபையுடன் காணப்பட்டான். அவனுக்கு விரோதமாய் எழும்பினவர்களைக் கர்த்தர் சந்தித்தார், யுத்தம் பண்ணினார். இன்று நாம் கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையாக இருக்க நம்மை ஒப்புக்கொடுப்போம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                         கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                         சகோ. சி. எபனேசர் பால்.