தொழிலை விருத்தியடையச் செய்ய, வீட்டை இன்னும் பெரிதாகக்கட்ட முயற்சித்து,

                                                                                   கடன் தொல்லையில் சிக்கியிருக்கிறவர்களின் விடுதலைக்காக ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே, இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். கர்த்தாவே இதுவரை என் ஜெபங்களைக் கேட்டு எனக்கு நலமான காரியங்களைச் செய்து வந்தீர். அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். இப்போதும் கர்த்தாவே, என்னுடைய கடை/ என் தொழிலகம்/ என் வீட்டைப் பெரிதாக கட்ட வேண்டும் என்று விரும்பி அதைச் செய்ய ஆரம்பித்தேன். அன்று யாபேஸ் ஜெபித்த போது, தேவரீர் என் எல்லைகளைப் பெரிதாக்கும், எந்தத் தீமையும் அணுகாதிருக்கட்டும் என்று ஜெபித்த ஜெபத்தின் அடிப்படையில் நானும் ஜெபித்து ஆரம்பித்தேன். ஆனால் நான் எதிர்பாராத, கணக்கிடாத பல பணச்செலவுகளும், தடைகளும், தாமதங்களும் தோன்றி, என்னுடைய முயற்சிகளை முழுமையாக நடத்த முடியாதபடி தடைகள் பெருகிவிட்டது. கர்த்தாவே எல்லாம் சீக்கிரமாய் முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அறிமுகமான மக்களிடமும், வங்கியிலும், வட்டிகாரர்களிடமும் கடன் தொகையை வாங்கி விட்டேன். இன்று எவ்வித வருவாயும் இல்லாதிருப்பதால் கடன் வாங்கின தொகைகளுக்கு வட்டி பெருகிக்கொண்டே இருக்கிறது. கர்த்தாவே. நீர் ஒருவரே தடைகளை நீக்கி நான் துரிதமாய் திட்டமிட்டபடி செய்து முடிக்க எனக்கு உதவிசெய்யும். இதை சீக்கிரமாகச் செய்யும் கர்த்தாவே. அதனால் என் வருவாய் பெருகவும். நான் சீக்கிரமாய் கடனாக வாங்கின பணத்தைத் திருப்பித்தரவும் எனக்கு உதவிசெய்யும். என் உள்ளத்தில் இது மிகுதியான வேதனையாக இருப்பதால், கர்த்தாவே, நான் முன்போல உம்மை ஸ்தோத்தரிக்க, துதிக்க முடியவில்லை. மேலும் என் பணக்கஷ்டம் நிறைந்து அதில் சிக்கி இருப்பதால். என் கவலையும் பெருகிற்று. கர்த்தாவே, நான் என் சரீர சுகத்தை இழந்து விடாதிருக்க எனக்கு உதவி செய்யும். இரவு நேரங்களிலும் நான் நலமாய் துாங்கி எழுந்து உம்மைத் துதிக்க, உம்முடைய வேத வாக்கியங்களைத் தியானிக்க எனக்கு அருள் புரியும். நீர் எனக்கு அப்படிச் செய்வீர் என்று நம்பி உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.