கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு;

                                                          அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள் செய்வார்.

                                                                                                                                                                                     சங்கீதம்37:4

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் வாழ்த்துகிறேன்.

ஒரு தேசத்தில் ஊழியங்களைச் செய்து கொண்டிருந்த போது, அந்நாட்டிற்குக் காலஞ்சென்ற ராணி எலிசபெத் அவர்கள் விஜயம் செய்ய வந்தார்கள். அத்தேசமானது இங்கிலாந்து தேசத்தாரால் ஆளுகை செய்யப்பட்ட தேசமாகும். நான் தங்கியிருந்த வீட்டின் சகோதரியோ, நாளை தினம் எங்கள் பட்டணத்திற்கு எலிசபெத் ராணி வர இருக்கிறார்கள். அத்துடன் முக்கியமான மக்களோடு அவர்கள் விருந்து உண்ண இருக்கிறார்கள். நான் தங்கியிருந்த வீட்டிலுள்ள சகோதரி, எனக்குத் தெரிந்த அனுபவமான மக்கள் அவ்விருந்திலே பங்கு பெற இருக்கிறார்கள். எனக்கோ எலிசபெத் ராணியைப் பார்க்கவோ பந்தியில் பங்கு பெறவோ வாய்ப்பு இல்லை என்று கலங்கிய நிலையில் கூறினார்கள். இவர்கள், வாழ்க்கையில் கைவிடப்பட்ட பெண் பிள்ளைகளுக்காக நடத்தப்பட்ட Shelter Ho-ல் பணி செய்து வந்தார்கள். அந்த நாளிலே ஜெபநேரத்தில் உன் வாய் அவர்களோடு பேசும் என்று கர்த்தர் வெளிப்படுத்திக் கூறினார். அந்த சகோதரிக்கு மிகுதியான சந்தோஷம். அவ்வாறே ராணி எலிசபெத் அவர்கள் அந்த விடுதியிலே உள்ளவர்களைப் பார்க்க வந்தபோது, இந்த சகோதரியோடு பேசினார்கள். இவர்களும் அந்த விடுதியைக் குறித்து சில காரியங்களை அவர்களிடத்திலே சொன்னார்கள். எலிசபெத் ராணியோடு பேசிக்கொண்டிருக்கும் போது போட்டோவும் எடுக்கப்பட்டது. சகோதரிக்கு மிகுந்த மகிழ்ச்சி. அந்த நாள் இரவிலே கர்த்தர் தாம் சொன்னபடி என் வாய் அவர்களுடனும், அவர்கள் வாய் என்னோடும் பேச கிருபை செய்தார் என்று மகிழச்சியோடு தெரிவித்தார்கள்.

அன்பு சகோதரனே, சகோதரியே, எல்லாருக்கும் கிடைத்திருக்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் என் வாழ்க்கையில் கிடைக்கவில்லை, மேலான அதிகாரிகள் நாட்டை ஆளும் தலைவர்களுடன் எந்தவித நட்பும் உறவும் இல்லையே என்று கலங்க வேண்டாம்.

குடும்பத்தில் கணவன்/மனைவி நடுவாக எந்தவித பேச்சு வார்த்தை இல்லாது இருந்தாலும் சோர்ந்து போகாது கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிரு. இருதயத்தின் வேண்டுதல்களை நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து அருள் செய்வார். அவர் சகல காரியத்தையும் நேர்த்தியாய் சமாதானமாய் நடத்தி உன் விருப்பங்களை கர்த்தருக்குள் நிறைவேற்றி உன்னை மகிழ்ச்சியாக்குவார். சோர்வடை யாதிருங்கள்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

                                                                              சகோ.C. எபனேசர் பால்.