"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்..."

                                                                                                                                     சங்கீதம் 148:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் யாவரையும் வாழ்த்துகிறேன்.

மனிதர்கள் பிரியமான காரியத்தை அதிக உற்சாகத்துடன் செய்கிறார்கள். தன் உள்ளத்தில் அதிகமாய் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் படைத்த மாணவன் அதிகநேரம் விளையாட செல்கிறான். இதைப்போல மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயரையும், சில சலுகைகளையும் பெற, சிலர் அதிகாரிகளுக்குப் பிரியமான காரியங்களைச் செய்து இதன் மூலம் சில உலகப் பிரகாரமான உதவியை, சலுகையை அடைகிறார்கள். வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தாவீது என்ற ஓர் சிறந்த ராஜா கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத்தாரும் என்று கெஞ்சுகிறதைப் பார்க்கிறோம். இவரது தாழ்மையான வாழ்க்கையில் இருந்து ஒரு பெரிய தேசத்தின் ராஜாவாக உயர்த்தப்படவும், தான் நேசித்த பிள்ளைகளின் மூலமாய், மாமனார் மூலமாய், மிருகத்தின் மூலமாய் வந்த போராட்டம், எதிர்ப்புகளில் இருந்து காக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் காரணமாயிருந்தது இவர் கர்த்தரைப் பிரியப்படுத்தி வாழ்ந்ததாகும். நமது வாழ்வில் பிள்ளைகள், மனைவி, புருஷன், தாய், தகப்பன், சகோதரர் மூலமாய், சூழ்நிலை சந்தர்ப்பங்கள் மூலமாய், சரீர பெலவீனம், அலுவலகத்தில் உடன் வேலை செய்வோர், அதிகாரிகள் கீழாக பணிபுரிவோர் மூலம் வரும் நிந்தை, போராட்டத்தில் இருந்து நாம் காக்கப்பட்டு உயர்த்தப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் வேண்டும் என்றால் நம்மை சிருஷ்டித்து, காத்து வருகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிரியமான சீஷர்களாக நாம் வாழ வேண்டும். நம்மை உண்டாக்கின கர்த்தரைத் தொழவேண்டும், நம்மைச் சிருஷ்டித்த கர்த்தரை ஆராதிக்க வேண்டும். இந்த வேளையில் நம்மை உருவாக்கிய கர்த்தருக்குப் பிரியமான காரியம் என்ன என்று சிந்திப்போம்.

கர்த்தருக்குப் பிரியமான காரியங்கள் என்ன?

1. துன்மார்க்கன் நீதிமானாக மாறுவது கர்த்தருக்குப்பிரியம்

"துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” எசேக்கியேல் 18:23

இன்று மனிதன் தன்னை உண்டாக்கின கர்த்தரை மறந்து, சிருஷ்டிகளையும், சொரூபங்களையும் வணங்கி, தனது செய்கைகளை மெச்சிக்கொண்டு தன்னையே நீதிமான் என்று சொல்லியும், சிந்தித்தும், செயல்பட்டும் கொண்டு இருக்கிறான். ஆனால் கர்த்தராகிய இயேசு | கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு நாம் அவருடைய மீட்பினால் நமது ஜென்ம சுபாவமாகிய கோபம், வைராக்கியம், மற்றவர்களைப் பரிகாசித்தல், பழி வாங்குதல், தாழ்மையாக நோக்குவது, பெரியோர்களைக் கனம் பண்ணாது பெருமையோடு வாழ்தல், பெற்றோருக்குக் கீழ்ப்படியாது தன் இச்சைகளின்படி வாழ்தல், பொய், அவதுாராய் பேசுவது, கஞ்சா, மது அருந்துவது மற்றவர் வாழ்வை தீய கர்த்தரின் பரிசுத்த அன்புமயமான பாதைக்குத் திரும்புவது கர்த்தருக்குப் பிரியமான காரியம் என்று இங்கு பார்க்கிறோம். பாவச் செயல்கள் புரிகிறவர்கள் என்றென்றைக்கும் அவியாத அக்கினி கந்தகக் கடலில் போடப்படுவார்கள். இச்செயல் நமது வாழ்வில் நடக்கக் கூடாது என்று இந்த ஆக்கினை தீர்ப்புக்கு நாம் தப்ப வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பிதாவானவர் அனுப்பினார். நமது பாவத்தை, சுபாவத்தின் தம்மையை நீக்கி, நம்மை புதிய மனிதனாய் மாற்றும்படி, இயேசு கிறிஸ்துவைப் பாவம் போக்கும் பலியாக இவ்வுலகிற்கு மனித ரூபம் எடுத்து அனுப்பினார்.

"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்” என்று 1 தீமோ. 1:15-லும், "நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே” என்று 1 யோவான் 2:2-லும் நாம் இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை அறிகிறோம்.

இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு இந்த உலகில் வாழ்கிற எனது பாவத்தைப் போக்க அவர் கல்வாரியில் சிலுவை மரத்தில் ஆணிகளினால் கடாவப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்டார் என்று முழு மனதோடு நம்ப வேண்டும். இயேசு கிறிஸ்து அந்தச் சிலுவை மரத்தில் சிந்தின இரத்தத்தால் எனது பாவங்கள் நீக்கப்பட்டது, அகற்றப்பட்டது என்றும், நான் இனி ஜென்ம சுபாவத்திற்கு, பாவத்திற்கு அடிமையாக மாட்டேன் என்றும் விசுவாசித்து உறுதியான

தீர்மானம் செய்ய வேண்டும். இயேசு கிறிஸ்து கூறிய ஆலோசனைப்படி நடப்பேன் என்று உள்ளத்தில் புதிய தீர்மானம் எடுத்து நடக்கிற இந்தப் பூரண நிகழ்ச்சி, பழைய பாவ வாழ்விலிருந்து புதிய பரிசுத்த பாதைக்கு நானே வழி, சத்தியம் என்று சொன்ன இயேசு கிறிஸ்து வழிக்குத் திரும்புகிறது கர்த்தருக்குப் பிரியம் என்று பார்க்கிறோம்.

இந்த நிகழ்ச்சி உனது வாழ்வில் நடைபெறவில்லை என்றால், நீ கர்த்தருக்குப் பிரியமாய் நடக்க முடியாது. இயேசு கிறிஸ்து பரிசேயர்களைப் பார்த்து (ஆலயம் செல்லுதல், பாரம்பரிய காரியத்தில் வைராக்கியமுள்ள மக்கள்) முதலாவது உன் உள்ளம் சுத்தமாக வேண்டும் என்று கடிந்து எச்சரித்தார். (மத். 23:26ல் உள்ளது) மனந்திரும்புதல் உன் வாழ்வில் இல்லை என்றால் உன் போராட்டத்தில் இருந்து தப்பிக் கொள்ள முடியாது. உனது அக்கிரமத்தினால் உன் சத்துருக்கள் உன்னை ஆளுகை செய்வார்கள். ஆகவே இந்த நேரமே உன் பாவ வழியில் இருந்து, உன் பொல்லாப்பு நிறைந்த உள்ளத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்டுவதற்கு ஒப்புக் கொடு. இது கர்த்தருக்குப் பிரியமான காரியம் என்பதை மறந்து போகாதே.

2. கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிவது கர்த்தருக்குப்பிரியம் "...கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ..."

                                                                                                                                      1 சாமுவேல் 15:22

கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிதல் கர்த்தருக்குப் பிரியமானது என்று இங்கு பார்க்கிறோம். கர்த்தரின் வார்த்தை எது என்று ஒரு வேளை கேட்கலாம். வேதத்தை நாம் வாசிப்போம் என்றால் கர்த்தர் நம்மோடு பேசுவதற்கு இடம் கொடுப்பது ஆகும். இந்த 'வேத வாக்கியங்க ளெல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது' என்று 2 தீமோத். 3:16ல் பார்க்கிறோம். இந்த தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவது கர்த்தருக்குப் பிரியமாம்.

ஆதி மனிதனான ஆதாம் புசிக்க வேண்டாம் என்று சொன்ன வார்த்தையைக் கேளாது, தனது இச்சைப்படி தனது விருப்பப்படி தந்திரமாக வேறு ஒரு ரூபத்தில் (சர்ப்பம்) பிசாசு சொன்ன வார்த்தையைக் கேட்டு பழத்தைப் புசித்து கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாது போனதால் சாபம் உலகிற்கு வந்தது. இந்த பாவ சாபம் இன்றும் நம்மைத் உ தொடர்ந்து வருகிறது. இதனால் ஆதி மனிதனுக்குக் கர்த்தருடன் இருந்த

தொடர்பு துண்டிக்கப்பட்டது. இவ்வாறு கீழ்ப்படியாத மக்களின் மீது தேவ கோபம் ஏற்பட்டது. கர்த்தரால் உருவாக்கப்பட்ட நாம் அவர் சொல்லுக்கு, வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது கர்த்தருக்குப் பிரியமாகும்.

எனது அன்பு சகோதரனே, சகோதரியே இம்மட்டும் உனது மனம் போன போக்கில் வேதத்தைக் கேளாதபடி நீ நடந்து கஷ்டத்தையும் மன வேதனையும் அடைந்து வரலாம். உன் வேதனை, பாடு, கஷ்டம் நீங்கி உண்மையான சமாதானத்துடன் ஆசீர்வாதத்துடன் வாழ வேதத்தை நேசித்து இந்த கர்த்தரின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படி. இது கர்த்தருக்குப் பிரியம். அத்துடன் ஆசீர்வதிக்கவும் படுவாய்.

 "நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்று ஆதி. 22:18ல் உள்ள வாக்குத்தத்தத்திற்குத் தகுதியுடையவராய் நாம் மாறி விடுகிறோம்.

நாகமான் என்ற சீரியா தேசத்து தளபதி கர்த்தரின் ஊழியக்காரரின் ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தபடியால் அவனது நாற்றம் எடுத்த அருவருப்பான சரீரம் குஷ்டரோகம் நீங்கி சுத்தமானது என்பதை நாம் மறந்து போகக் கூடாது.

யோசுவாவின் மூலமாய் வெளிப்பட்ட கர்த்தரின் வார்த்தையை அசட்டை செய்து உலகப் பொருள்களின் மேல் கண் வைத்து தனது மனதை அதில் செலுத்தி, கர்த்தரின் வார்த்தையை மீறினபடியால், ஆகான் மட்டும் அல்ல அவன் நேசித்த மனைவி பிள்ளைகள், அவனது இனத்தார்கள், குடும்பத்தார்கள், உடைமைகள், சகல மிருகங்களும் அழிந்து போனதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடியான் வாழ்வில் வேலை ஸ்தலத்தில் உடன் ஆசிரியர்களிடம் இருந்து பல ஆயிரக்கணக்கான பணத்தை கடன் வாங்கி இருந்தேன். ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் மேய்ப்பராக, வழிகாட்டியாக, அவர் வார்த்தைகளை ஆலோசனையாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்தவுடன் "நீயோ கடன் வாங்குவதில்லை” என்ற உபா. 13:6 வசனப்படி நடக்க ஆரம்பித்தேன். இதற்காக என சுகபோகமான ஜீவியத்தை மாற்றிக் கொண்டேன். எனது கரம் கடன் வாங்காது எனது வருவாய்க்குள் வாழ முயற்சித்தேன். அனாவசியமாக ஹோட்டல் போய் சாப்பிடுவது, உல்லாசமாய் அங்கும் இங்கும் பயணம் செல்லுகிற காரியத்தை நிறுத்தி, எனது மனைவியுடன் ஒற்றுமையாக கடன் அடைக்க ஆரம்பித்தேன். கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்த படியால் பல ஆயிரக்கணக்கான கடன் தொகை அடைந்தது. எனது உடன் ஆசிரியர் யாருக்கும் கடன் பாக்கி கிடையாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எனது வாழ்வில் செய்த கர்த்தர் உனது வாழ்விலும் இதைச் செய்ய போதுமானவராய் இருக்கிறார்.

ஆகவே இன்றுமுதல் நாம் கர்த்தரின் சத்தமாகிய வேத வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வதிக்கப்படுவோமாக. இது கர்த்தருக்குப் பிரியம்.

3. துதிப்பது கர்த்தருக்குப் பிரியம்

"தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, ஸ்தோத்திரத்தினால் அவரை மகிமைப்படுத்துவேன்."

கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும் இதுவே கர்த்தருக்குப் பிரியம்” சங்கீதம் 69:30, 31

கர்த்தாதி கர்த்தரைத் துதிப்பது, நன்றி சொல்லுவது கர்த்தருக்குப் பிரியம் என்று பார்க்கிறோம். மனிதன் தனது வாழ்வில், தன்னுடைய குடும்பங்களுக்கோ அல்லது மற்றொரு மனிதனுக்கோ உதவி செய்தால் அந்தச் செய்கையினைப் புகழ்ந்தும், மற்றவர்கள் முன்பாக அவனது உதவி புரிந்த செயலைப் பெரிதுபடுத்திச் சொல்லி மெச்சிக் கொள்கிறார்கள். ஆனால் உனது சரீரத்தில் சுவாசம் கொடுத்து, உன்னைக் காத்து வைத்து வருகிற உனது சிருஷ்டிகரைப் புகழாது இருப்பது அநீதியாகும். உனது வாழ்வில் நீ பெற்ற நன்மைக்காய் கர்த்தரைத் துதிப்பது, நன்றி கூறுவது கர்த்தருக்குப் பிரியம்.

பெருமை உடையவர்கள், பிசாசினால் கட்டப்பட்டவர்கள், மரித்தவர்கள் தான் தேவனைத் துதிக்க மாட்டார்கள் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் வாழ்க்கையில் கர்த்தர் சொப்பனத்தின் மூலம் பேசினார். தேவ மனிதனாகிய தானியேல் சொப்பனத்தை விளக்கினார். கர்த்தரின் தீர்மானத்தை அறிந்தும், 'இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால் என் மகிமைப் பிரதாபத்துக் கென்று ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்' என்று தானி. 4:30ல் உள்ளது போல் தேவனைப் புகழாது தன்னை மகிமைப்படுத்தினான். உடனே கர்த்தரின் கரம் அவன் மீது இரங்கி, அவனை அவன் நிலையிலிருந்து கீழே தள்ளியது. அவன் மிருகத்தை விட கேவலமான நிலையில் இருந்ததை நாம் மறக்கக்கூடாது. இந்தத் தள்ளப்பட்ட இழிவான நிலையிலிருந்த இந்த ராஜா 'நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்' என்று தானி. 4:34 ல் உள்ளது போல் கர்த்தரை மகிமைப்படுத்த தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்தினவுடன் அவனது முகம் மீண்டும் மனித சாயலாய் மாறி அவன் தன் மனித நிலையை அடைந்தான்.

அன்பு சகோதரனே, சகோதரியே, நீ தள்ளப்பட்டு படு குழியில் கிடந்தாலும் சரி, மரிக்கின்ற தருவாயில் இருந்தாலும் சரி உன்னைக் காக்கவும், உன்னைத் தேற்றவும், விடுவிக்கவும் ஒரு கரம் காத்துக் கொண்டுள்ளது என்று உணர்ந்து அந்த ஆணிகளால் துளைக்கப்பட்ட கரத்தைப் பற்றிக் கொள்ள, உன் வாயை விரிவாய்த் திறந்து கர்த்தருக்குத் துதி செலுத்து, அப்பொழுது இந்த அன்பின் கரம் உனது வாழ்வின் துயரங்களையும், வேதனைகளையும் நீக்கி உன்னை விடுவிப்பதாய் காணப்படும்.

கர்த்தரைத் துதிக்கும் சமயம் அற்புதங்கள் நடைபெறும். எனது குடும்பத்துடன் ஸ்கூட்டரில் தஞ்சை சென்று இரவு 11 மணிக்குத் திரும்பி வரும் சமயம் வாகனத்தின் விளக்கு திடீரென்று அணைந்து விட்டது. பலவிதத்தில் முயற்சி செய்தும் பயன் இல்லை. ஒரே காரிருள் எங்களை சூழ்ந்திருந்தது. அதிக தொலைவில் மங்கலாக எரியும் விளக்குகள் தெரிந்தன. கலங்காது கர்த்தரைக் குடும்பமாக துதித்து,பயணத்தைத் தொடர்ந்தோம். சில மீட்டர் துாரம் செல்வதற்குள் மீண்டும் அணைந்த விளக்கு எரிய ஆரம்பித்தது.

 

. உனது வாழ்வில் உள்ள பயம், வியாதி, வேதனை, சமாதானமற்ற தொல்லை, சத்துருவினால் வருகிற நிந்தை, பாடுகள் வாழ்க்கை, கடன் உன் வாழ்வை சூழ்ந்து, இருளில் சிறைபட்ட மகனை, மகளைப் போல் இருக்கிறாயா ? கலங்காதே இப்பொழுதே உன்னை உண்டாக்கின கர்த்தரை ஸ்தோத்திரி. அவர் உன்னை விடுவித்து ஆசீர்வதிப்பார்.

“இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள்' என்ற ஏசாயா 43:21ன் வார்த்தையின்படி கர்த்தரைத் துதிப்போம். அவர் ஜனமாய் மாறுவோம், ஆசீர்வதிக்கப் படுவோம். கர்த்தருக்குப் பிரியமாய் வாழ்வோம்.

4. ஜெபிப்பது கர்த்தருக்குப் பிரியம்

...எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு முன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது."     

                                                                  1தீமோத்தேயு 2:1,2,3                                              

தேசத்தை ஆட்சி செய்கிற மந்திரிகளுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் நாம் ஜெபிப்பது கர்த்தருக்குப் பிரியம் ஆகும். இன்று அநேகர், கிறிஸ்துவை தங்கள் மீட்பராக ஏற்றவர்கள், தங்களது வாழ்விற்காக ஜெபிக்கிறார்கள். ஆனால் வேதத்தில் பார்க்கிறோம் ‘எல்லாருக்கும்' என்று. எனது காலஞ் சென்ற தகப்பனார் எங்கள் குடும்ப ஜெபத்தில் கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், அதில் அதிகாரியாக உள்ளவர்களுக்காகவும், அதில் வேலை செய்வோருக்கும் அதிகமாய் ஜெபிப்பார்கள். என் உள்ளத்தில் இது ஏன் என்று நினைத்த நாட்கள் உண்டு. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றபின் துன்பத்தில், கஷ்டத்தில், அதிகாரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது.

தேசத்திலே சுவிசேஷம் பாதிக்கப்படும்படியான சட்டம் தோன்றின சமயம் அநேக கிறிஸ்தவ ஸ்தாபனங்கள் ஜெபித்ததால் அக்கொடிய சட்டம் நிறைவேற்றப்படாமல், அந்த அரசாட்சியும் நீங்கினது. கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு சமாதானத்துடன் கர்த்தரின் காரியத்தைத் தொடர்ந்து பணியாற்ற கிருபை புரிந்தார்.

நாம் வாழும் பகுதியில் பஞ்சம், கஷ்டம், வறட்சி நீங்க நாம் மற்றவர் நலனுக்காக ஜெபிக்க வேண்டும். சாமுவேல் தீர்க்கதரிசியை இஸ்ரவேல் ஜனங்கள் வேண்டாம் என்று சொல்லி, தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கர்த்தரிடம், சாமுவேல் தீர்க்கதரிசி மூலமே கேட்டார்கள். அந்த விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டு சவுலை ராஜாவாக ஏற்படுத்தினார். ஆனால் சாமுவேல் தீர்க்கதரிசி அந்த தேசத்தின் மக்கள் தன்னை தள்ளிவிட்டார்கள் என்று சொல்லிவிடாது, 'நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்' என்று 1 சாமு.12:23ல் கூறுவதைப் பார்க்கிறோம். நமக்குப் பிரியமான மக்களுக்கு மட்டும் அல்ல நம்மை நிந்திக்கிற மக்களுக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும்.

 ஒரு அருமையான ஆசிரிய சகோதரிக்கு வீட்டில் மகன் மூலமாய் போராட்டம், பள்ளியில் உடன் வேலை செய்யும் ஆசிரியையின் மூலமாகவும் வேதனை வந்தது. இந்தப் பாடுகள் நீங்க வேண்டும் என்றும், வேதனைத் தருகிற உடன் ஆசிரியையின் மனம் மாற வேண்டும் என்றும் தானும் ஜெபித்து மற்றவர்களையும் ஜெபிக்க கேட்டுக் கொண்டார்கள். இயேசு கிறிஸ்து அந்த சகோதரியின் நிலையை நோக்கிப் பார்த்தார். உடன் வேலை புரிந்த ஆசிரியரை அருகில் உள்ள பள்ளிக்கு மாற்றுவித்தார். அந்தச் சகோதரியின் வேதனையைக் கர்த்தர் மாற்றினார்.

வேதத்தில் பார்க்கிறோம், யோபு தன் சிநேகிதர்களுக்காக ஜெபித்த சமயம் அவனது வாழ்வில் இருந்த துயரங்களைக் கர்த்தர் மாற்றினார். நாமும் அவ்வாறே கஷ்டம், வேதனை, துயரத்தில் ஆழ்ந்த மக்களுக்காகவும், கர்த்தரின் வார்த்தைகளைச் சுமந்து செல்லுகிற மக்களுக்காகவும், அதிகாரிகள், கிறிஸ்தவ ஸ்தாபனங்கள், ஆலயத்தில் பணிபுரிவோர், போதகர்கள், பிஷப்மார்கள் அவர்கள் குடும்பங் களுக்காகவும் அதிகமாக இன்று முதல் ஜெபிப்போம். கர்த்தருக்குப் பிரியமான இந்தச் செயலை மறவாமல் அனுதினமும் செய்வோமாக.

5.கர்த்தருக்குக் கொடுப்பது கர்த்தருக்குப் பிரியம்

"...பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்." மல்கியா 3:4

கர்த்தருக்கென்று நல்மனதுடன் காணிக்கை கொடுப்பது கர்த்தருக்குப் பிரியம். கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற இயேசு கிறிஸ்துவின் ஆலோசனையை நாம் மறந்து போகக்கூடாது. இன்று அநேக இடங்களில் ஊழியத்தில் தடைகளுக்கு ஒரு காரணம் காணிக்கை போதிய அளவு இல்லாதது ஆகும். ஆசாரியர்களைக் குறித்து கர்த்தர் மோசேயிடம் கூறினது “இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேருக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக் கொண்டேன்" என்று எண். 8:17ல் பார்க்கிறோம். இவ்வாறு பணிபுரிகிற மக்களுக்கு கர்த்தருடைய நாமம் மகிமைப்பட நாம் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துவது அவருக்குப் பிரியம் என்று பார்க்கிறோம்.

தசமபாகம் கொடாமல் இருப்பது கர்த்தரை வஞ்சிக்கிற காரியம் என்று மல்கியா 3:8ல் சொல்லப்பட்டுள்ளதை நாம் மறக்கக் கூடாது. காணிக்கை தான் தருவது இல்லை என்றும், தனது ஆசாரியர்களை குறை கூறுகிற அநேகர் உண்டு. அன்பின் சகோதரனே, இந்தக் காரியத்தில் சற்று கவனமாய் நாம் நடக்க வேண்டும். காணிக்கை செலுத்துவது நமக்குச் சொல்லப்பட்ட கட்டளை. காணிக்கையைப் பயன்படுத்துகிற முறை ஆசாரியர்களுக்கு உரியது. அவர்கள் அதில் நேர்மையாய் காணப்படவில்லை என்றால் அவர்கள் நிலை அதிகமாய் பாதிக்கப்படும். இதனை நாம் நியாயம் தீர்க்க நமக்கு அதிகாரம் தரப்படவில்லை.

மேலும், ஏலியின் பிள்ளைகள் கர்த்தரின் காணிக்கையைப் பலவந்தப்படுத்தி, அதன் மாமிசத்தைக் கொப்பரைகளிலிருந்து எடுத்து புசித்து நேர்மையாய் காணப்படவில்லை. அதனால் அந்த ஆசாரிய குடும்பமே அழிந்து போன சம்பவத்தை நாம் மறக்கக் கூடாது.

ஒரு அருமையான குடும்பத்தினர் கோழி வளர்த்து அதன் முட்டைகளை விற்று வருகிற பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தினார்கள். ஒரு முறை கோழிகள் எல்லாம் முட்டை விடாமல் நின்று அந்தக் குடும்பத்தில் பெரிய போராட்டம் ஏற்பட்டது. ஒரு ஊழியர் அந்த இல்லத்திற்குச் சென்று ஜெபித்தார். அந்த ஊழியர் கையில் அந்த வீட்டுத் தலைவர் அன்று விட்ட ஒரே முட்டையைக் காணிக்கையாகக் கொடுத்தார். அந்த ஊழியர் அதனை வாங்க சற்று தயங்கினார். அவ்வீட்டின் தலைவர் கர்த்தர் எங்களை ஆசீர்வதிக்க இடம் கொடுங்கள் என்று அதனை அவர் கையில் கொடுத்து சொன்னார். அந்த ஞாயிறு ஆராதனையில் கூடை நிறைய முட்டையை காணிக்கையாக படைத்தனர். காரணம் கர்த்தர் அவர்கள் கோழிகளை ஆசீர்வதித்தார்.

ஒருமுறை தஞ்சையைச் சார்ந்த சகோதரர் தனது ஊழியத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். அவர் உள்ளத்தில் தான் விரும்பி வாங்கிய பெட்டியை மற்றொரு உடன் ஊழியருக்கு கொடுக்கும்படி உணர்த்தப்பட்டார். அந்தச் சகோதரர் கர்த்தரிடம் முதலில் மறுப்பு தெரிவித்தார். ஆனால் அதை அந்த ஊழியருக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். இது நடைபெற்ற அதே வாரத்தில் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அந்தச் சகோதரரை அணுகி எங்கள் குடும்பத்திற்கு அதிக உதவி செய்துள்ளீர்கள் என்று கூறி ஒரு தங்க நாணயம் ஒன்றை, (ஒரு சாவரின் நிறை உள்ளது) அன்பளிப்பாக கொடுத்து சென்றார்களாம். நாம் கர்த்தருக்குக் கொடுக்கும் சமயம் அதை ஆசீர்வதித்து, திரும்ப நமக்குத் தேவைப்படி கர்த்தர் கொடுப்பார்.

 "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங் களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள் ;அப்பொழுது  நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ வென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” என்ற மல்கியா 3:10ன் படி நாம் ஆசீர்வதிக்கப்பட தசம பாகத்தைச் செலுத்துவோம். இது கர்த்தருக்குப் பிரியம்.

ஆகவே மனந்திரும்பி, வேத வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, கர்த்தரின் நாமத்தைத் துதித்து, எல்லா மக்களுக்காகவும் ஜெபித்து, காணிக்கையைச் செலுத்தி நாம் கர்த்தருக்குப் பிரியமானவர்களாய் வாழ்வோம். கர்த்தர் நம்மை இம்மையிலும் மறுமையிலும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                           கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                               சகோ. C. எபனேசர் பால்.