சமாதான வாழ்வு நிறைவாக ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி. கூறுகிறேன். என் வாழ்க்கையில் நான் கேட்டுக்கொண்ட எல்லா ஜெபத்திற்கும் பதில் தந்து, என்னை மிகுந்த ஆசீர்வாதத்தினால் நிறைத்தீர். இப்பொழுதும் கர்த்தாவே, என் வாழ்க்கையில் சமாதானம் இல்லாது சோர்வுகள் நிறைந்து, ஜெபிக்கவும் முடியாது. வேதத்தைத் தியானிக்கவும் முடியாதபடி மிகுந்த போராட்டத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, ஜெபத்தைக் கேட்கிறவரே. எனக்கு இரங்கும். இயேசு கிறிஸ்துவே, நான் இழந்திருக்கிற சமாதானத்தை, சந்தோஷத்தை இன்றே எனக்குத் தாரும். சின்ன காரியம் தடையாகும் போதும், பிரச்சனையாய் மாறும் போதும், முன்பு இருந்த திடமனதை இழந்து, சமாதானத்தை இழந்து தவிக்கிறேன். இதன் விளைவாக இரவிலும் நான் துாங்கமுடியாதபடி போராடிக் கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். என் குடும்பத்தில் இழந்து போன சமாதானத்தைத் திரும்பத் தந்து என்னை ஆசீர்வதியும். என் பிள்ளைகளின் வாழ்க்கையிலும் சமாதானம் இழந்திருக்கிறார்கள். சமாதான பிரபுவாக இவ்வுலகில் வந்தவரே, என் எல்லைகளிலே சமாதானத்தைத் தாரும். உன் பிள்ளைகள் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களின் சமாதானம் பெரிதாயிருக்கும் என்று சொன்னீரே, என் பிள்ளைகள் உமது சமாதானத்தினால் நிறைந்து ஆசீர்வதிக்கப்படவும், அனுதினமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும் அநுக்கிரகம் செய்யும். கர்த்தாவே, எங்கள் பெற்றோர்கள் எங்களுடன் சமாதானமாய் இருக்கவும், நானும் என் மனைவியும் அவர்களோடு சமாதானமாய் இருக்கவும் எங்களுக்கு உதவி செய்யும். சமாதானத்தில் ஒருபோதும் குறைவுபடாதபடி நானும் என் குடும்பமும் இனிதாய் வாழ உதவி செய்யும். எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானம் எங்கள் இருதயங்களையும் சிந்தையையும் காக்கக்கடவது என்ற வார்த்தையின் படி எல்லாவற்றையும் உம்முடைய சமுகத்தில் சொல்லி வேண்டிக்கொண்டிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். கர்த்தாவே, நீர் ஒருவரே எனக்குள் பூரண சமாதானத்தை ஈந்து என்னைக் காத்துக் கொள்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக்கின்றேன். என் ஜெபம் கேளும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.