"...அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்."

                                                                                                                                                                                                  1 பேதுரு 2:24

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஒரு தேவ ஊழியர் என்னைச் சந்திக்க வந்தார். பல நாடுகளில் ஊழியம் செய்தவர். பல வேதாகம கல்லூரிகளில் Visiting Bible Lecturer-ஆக இருந்தவர். அவரின் மனதில் சமாதானம் இல்லாதபடியால், என்னிடம் அவரை ஒரு ஊழியர் ஜெபிக்க அழைத்து வந்தார்கள். டீ குடித்து விட்டு ஜெபிப்போம் என்று கூறினேன். இவர் என்ன செய்வார் என்று அழைத்து வந்த தேவ ஊழியரை துரிதப்படுத்தினார்.

 

நான் அவரைத் தனியாக அழைத்து, உங்கள் பாக்கெட்டில் உள்ள தற்கொலை கடிதத்தை எடுங்கள் என்றேன். அவர் ஆச்சரியமடைந்து எப்படித் தெரியும், என் வாழ்வின் பிரச்சனையால் நான் ஜெபித்து விட்டு என் இடம் சென்றவுடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டு இக்கடிதத்தை எழுதி வைத்திருக்கிறேன் என்றார்.கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசித்து இங்கு அழைத்து வந்திருக்கிறார். எந்தப் பாவியையும் புறம்பே தள்ளேன் என்ற இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார். நீங்கள் அவருக்காக வாழவும், உழைக்கவும் வேண்டும். உங்களின் மனநிலையை அவர் அறிவார். நம் பாவங்களை மன்னிக்க தயவு பெறுத்தவர். இம்மட்டும் உங்களை ஊழியராக உருவாக்கினவர், உங்களைச் சீர்ப்படுத்தி ஒரு சிறந்த ஊழியத்தைச் செய்ய வழி நடத்துவார். உங்களை புது சிருஷ்டியாகச் செய்து புதிய காரியங்களைச் செய்வார் என்று கூறி அவரைத் தேற்றினேன். கடிதத்தை எடுத்து கிழித்து விட்டு புது வாழ்வு வாழ தன்னை ஒப்புக் கொடுத்தார்.

 

அன்பு சகோதரனே, சகோதரியே, நான் பாவம் செய்து விட்டேன், இனி எந்த நிலையிலும் கிறிஸ்துவுக்குப் பணி செய்ய இயலாது என்று நினையாதே. உன் பாவத்தை உணர்ந்து மனஸ்தாபப்பட்டு, அவர் பாதத்தில் மன்னிப்புக்காக மன்றாடு. உன் உள்ளத்தில் நீ செய்த பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, உன் பாவத்தைக் கர்த்தரிடம் மாத்திரம் அறிக்கை செய். ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டும் என்றவர் உன்னை மன்னிப்பார். அவர் அதிசயமாய் சகல நிலைகளையும் சீராக்கி உன்னை ஆசீர்வதிப்பார்.

 

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

சகோ. C. எபனேசர் பால்.