சென்ற காலத்தில் தடையான காரியங்கள் இந்த ஆண்டில் நடைபெற ஒரு ஜெபம்

அன்பின் தேவனே, இந்த  ஜெப நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். கர்த்தாவே, ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்க செய்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். கர்த்தாவே, இதுவரை என் பென்ஷன் காரியங்கள் முடிய வில்லை. தயவாய் இரங்கி, என் ஓய்வு ஊதியத்தை நான் துரிதமாய்ப் பெற எனக்கு உதவி செய்யும். யாரையாவது வைத்து காரியங்கள் செய்யலாம் என்றால்,  ஒருவரையும் அந்த அலுவலகத்தில் தெரியாதிருக்கிறேன். பணம் கொடுத்தாவது காரியங்களை முடிக்க யோசித்தாலும் எப்படி யாரிடம் பணம் கொடுப்பது என்று தெரியவில்லை. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். இந்தப் பணம் வந்தால் வீட்டின் முடிவடையாத பகுதியைக் கட்டி முடித்து விடலாம் என்ற திட்டத்திற்குத் தடையாக இருக்கிறது. இன்னும் என் மகனின்/மகளின் திருமண காரியம் தடையாகிவிட்டது. இந்த  வருடமாவது நடைபெறுமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழுந்து, என்னில் கவலையைப் பெருகச் செய்து விடுகிறது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். கடந்த ஆண்டுகளில் நீர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். இன்னும் திருமணமான என் மகன் குடும்பத்தில் பிள்ளையில்லாத காரியம் என்னை அதிகமாக துக்கப்படுத்துகிறது. கர்த்தாவே, என் மகளின் வாழ்வில் பல பிரச்சனை பெருகியுள்ளது. பிரிந்து விடுவாளோ என்ற கவலை அடிக்கடி என்னைத் தாக்கிக் கொண்டே இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே, நீர் இந்த ஆண்டில் என் பிள்ளைகளின் குடும்பத்தில் சமாதானத்தையும், சந்தோஷத்தையும் பெருகச் செய்யும். எல்லாத் தடைகளும் நீங்கட்டும். இன்னும் கர்த்தாவே என் கணவர்/மனைவி திடீரென மரித்துப் போனபடியால் மிகுந்த போராட்டம். துக்கம் என்னிலும், என் குடும்பத்தாரிலும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சம்பள பாக்கி, மற்றும் ஓய்வு ஊதியம் பெற முடியாது தடையாக இருக்கிறது. கர்த்தாவே, சீக்கிரமாக காரியங்கள் நடைபெற உதவி செய்யும். கர்த்தாவே, என் இளைய மகனுக்குக் கொடுத்த வேலைக்காக நன்றி கர்த்தாவே, அவனது வேலை நியமனம் சீக்கிரமாய் உறுதி ஆகி, ஏற்ற சம்பளம் பெற உதவி செய்யும். கர்த்தாவே, என் ஜெபத்தைத் தள்ளாமல் சகலமும் சீராய் நடைபெற என் ஜெபம் கேளும். இயேசு கிறிஸ்துவினாலே பிதாவே. ஆமென்.