வாங்கின வீட்டின் சமாதானத்திற்கான ஒரு ஜெபம்

அன்பின் தேவனே. உம்முடைய சமுகத்தை நோக்கி மன்றாட கொடுத்த நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். என் வாழ்க்கையிலே என் ஜெபத்தைக் கேட்டு அநேக நன்மையான ஆசீர்வாதமான காரியங்களைக் கொடுத்தீர். இப்பொழுதும் உமது தயவினால் வாங்கின வீட்டின் பிரச்சனைக்காக உம் சமுகத்தை நோக்குகிறேன். எல்லாம் சரியாக இருக்கிறது,எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று கண்டு, வீட்டை வாங்கினோம். இப்பொழுதும் வீட்டின் ஒரு பகுதியை என்னுடையது என்று என் அயலகத்தார் சொல்வதினால் மிகவும் வருத்தப்படுகிறேன். நான் என்ன செய்வேன்? எவ்விதமாய் இந்தக் காரியத்தைச் சரி செய்வேன் என்று கலங்குகிறேன். இயேசு கிறிஸ்துவே, இன்று என் ஜெபத்தைக் கேட்டு எனக்கு உதவி செய்யும். வீட்டின் பட்டாவைப் பார்க்கும்போது அதில் எந்தக் குறைவும், எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் அவர்களோ இந்தப்பகுதி நாங்கள் பொழங்கின இடம் என்று சொல்லி வேதனைப்படுத்துகிறார்கள். இதற்காக வக்கீலையும் நிலம் சம்பந்தமான ரெவன்யு மக்களுடனும் கலந்து பேசி, குறுகிய நாளில் வீட்டின் நிலத்தை அளக்க இருக்கிறோம். இதில் எந்தப்பிரச்சனையும் வராது கர்த்தர் எங்களைக் காத்து, இடத்தைக் காத்துத் தரும்படியாக எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவே, இந்த வீட்டை வாங்குவதற்குப் பல மாதங்கள் ஜெபித்தபின் வாங்கினோம். இப்பொழுது உள்ள இந்தக் குறையும். பிரச்சனையும் நீர் தீர்த்து, சமாதானத்தோடு நாங்கள் இதில் வசிக்க எங்களுக்கு உதவி செய்யும். உன் னதமான தேவனே, நீரே இதைச் செய்ய வல்லவர். அத்துடன் இந்த வீட்டில் உமது பிரசன்னமும், பாதுகாவலும், பரிபூரண சுகமும், சந்தோஷமும் நிறையும்படி வேண்டுகிறேன். எந்த தீங்கின் ஆவிகளும், அருவருப்பான ஆவிகளும் பிரவேசியாதபடி நீர் காத்துக் கொள்ளும். உமது அக்கினியின் வேலி வீட்டைச் சுற்றிலும் என்றும் இருக்கட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுதல் செய்கிறேன் பிதாவே, ஆமென்.