கர்த்தர் எனக்குக் கொடுத்த எனக்கு என்று உணர்த்திய வாக்குத்தத்தம் நிறைவேற ஒரு ஜெபம்

 

அன்பின் தேவனே. இந்த நல்ல ஜெப நேரத்திற்காய் நன்றி கூறுகிறேன். உம்முடைய திவ்விய வார்த்தைகளினால் என்னோடு நீர் பேசின அன்பின் செய்கைக்காக உம்மைத் துதிக்கிறேன். ஸ்தோத்தரிக் கிறேன். நான் சோர்வடைந்த நேரத்தில் நீர் உம்முடைய மாறாத வல்லமை யுள்ள வார்த்தைகளினால் என்னைத் தேற்றினீர். என் பெலவீனங்கள், என் போராட்டங்கள் விலகிச் செல்ல உதவினீர். குழந்தையில்லாத ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தீர். அது நம்புவதற்கு ஏதுகரமான வார்த்தைகள் அல்ல. ஆனாலும் நீர் அதைச் செய்து அவனை மகிழ்வித்தீர். அதன்படி அவன் சந்ததியை மணலத்தனையாய்ப் பெருகச் செய்தீர் நீர் சொன்னபடி செய்கிற தேவன். என் வாழ்க்கையிலே மிகுதியான பயம் நிறைந்த நேரத்தில் உம்முடைய வார்த்தைகளினாலே பயத்தை மேற்கொள்ள எனக்கு உதவிசெய்தீர். நீரே எனக்குத் துணையும் கேடகமுமாயிருக்கிறார். மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும் என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்ற வாக்கினாலே என்னைத் திடப்படுத்தினீர். அதற்காக உம்மை ஸ்தோத்தரிக் கிறேன். உம்முடைய ஜீவ வசனமாகிய வாக்குத்தத்தங்கள் என்னைத் தேற்றுகிறது. என் வாழ்வில் உண்டான போராட்டங்களிலிருந்து விடுதலைப் பெற்று பெலன் அடைந்தேன். இப்போதும் கர்த்தாவே, என் சரீரத்திலும் என் ஆவியிலும் உண்டாயிருக்கிற கசப்புகளை நீக்கி, உம்முடைய கல்வாரியின் வல்லமையுள்ள வார்த்தையினால் என்னைத் திடப்படுத்தும், நான் கலங்கின நேரத்திலெல்லாம் உம்முடைய ஜீவ வசனங்கள் என்னை ஆற்றித் தேற்றியது. இயேசு கிறிஸ்துவே, எனக்கு இரங்கும். உம்முடைய வாக்குத்தத்தங்களினால் என்னைத் திடப்படுத்தி தைரியப்படுத்தி என்னை ஆசீர்வதியும், என்னுடைய தோல்வி நேரத்தில் எனக்கு உம்முடைய ஆலோசனையின் வார்த்தைகளினால் தோல்வியை ஜெயமாக மாற்றினீர். எனக்குள் உண்டான துக்கத்தினால் என்ன செய்வது என்று கலங்கின நேரத்தில் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்ற வார்த்தைகளினால் மாறப்பண்ணி என்னை ஆசீர்வதித்தார். அதற்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே இயேசு கிறிஸ்துவே. உம்முடைய ஜீவ வசனங்களினால் என் சூழ்நிலையிலே மாறுதலை உண்டாக்கினபடியால் ஸ்தோத்திரம். தொடர்ந்து கண்ணின்மணிபோல் காத்துக்கொண்டபடியினால் உமக்கு ஸ்தோத்திரம் இப்போதும் இன்று நீர் எனக்கு அருளின வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக் கொள்ள உதவிசெய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே வேண்டுகிறேன் நல்லபிதாவே. ஆமென்.