சிந்தி செயல்படு

                                                 "... வேதனை நீங்கி சுகமாயிரு..."

                                                                                            மாற்கு 5:34

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

           சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா நாட்டிற்கு வந்து சேர்ந்தோம். சில தினங்களிலேயே பல்லின் ஒரு பகுதி உடைந்து காணப்பட்டது. நாக்கில் ஒரு பகுதியைக் கிழித்துக் கொண்டும் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்தச் சொத்தைப் பல்லை எடுப்பதற்காக பல் மருத்துவரை அணுகினேன். ஆனால் எனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் பல்லை எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். ஆகவே என் நாவைக் கொண்டு அந்தப் பல்லை முன்னும், பின்னும் தள்ளி அசைத்துக் கொண்டிருந்தேன். அதினால் என் சொத்தைப் பல் உடைந்துவிட்டது. ஒரு சிறிய பகுதி மட்டும் ஈறுக்குள்ளாய் புதைந்து விட்டது. இது நடைபெற்று பத்து, பதினைந்து ஆண்டுகள் கழித்து, அந்தக் கடைவாய்ப்பல்லின் மீதி பகுதியானது நாவில் பட ஆரம்பித்தது. அறுவை சிகிச்சை மூலமாய்தான் எடுக்க வேண்டுமோ என்று எண்ணினேன். இப்பொழுதோ அமெரிக்காவில் இருக்கிறேன், என்ன செய்வதென்று எண்ணினேன். பல்லில் வேதனையும் இருந்தது. கர்த்தருடைய பெலத்தால் எல்லாம் சீராகும் என்று எண்ணி அவரையே துதித்துக் கொண்டிருந்தேன். இரவில் இருந்த பல்லின் பகுதியானது காலையில் பல்லை விளக்கும்போது, அந்த இடத்தில் இல்லை.

                       உன்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுவேன் என்றவர் ஜீவனோடிருக்கிறார். அற்புதத்தைச் செய்தவர் மாறாதவராய் இருக்கிறார். இதை வாசிக்கும் அருமையான சகோதரனே/ சகோதரியே, உன் வாழ்க்கையில் தோன்றியுள்ள வேதனையை முற்றிலும் நீக்கிவிடுவார். உன் நினைவுகள் என் நினைவுகள் அல்ல என்று சொன்னவர் பெரிய காரியங்களை நமக்காகச் செய்வார். நாம் கர்த்தரை நம்பி வாழும்போது நமக்காக செய்து முடிப்பார்.

                                   கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                             சகோ. C. எபனேசர் பால்.