செய்தி

                        " சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசிர்வதிக்கப்பட்டிருப்பாய் ; உங்களுக்குள்ளும் உங்கள் மிருக ஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை."                                                                           உபாகமம்7:14

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

                        கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்திலே உங்களை வாழ்த்துகிறேன் .

                        நம்முடைய தேவன் நம்மை ஆசீர்வதித்து, சகலவிதமான நல்  ஆசீர்வாதங்களினால் நம்மை நிரப்புகிற தேவன். எபேசியர் 1:3ல் '...உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும்  நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் 'என்று பார்க்க முடிகிறது. இந்த ஆசீர்வாதத்தை  பெற்றுக் கொள்வதற்கு நாம் தகுதியுடைய மக்களாய் இருக்க வேண்டும்.கர்த்தர் தம்முடைய ஜனத்திற்கு சொன்னபடியே தமது அளவற்ற ஆசீர்வாதத்தை  நிறைவாய் ஊற்றுகிறவராய் இருக்கிறபடியினாலே இன்றைக்கு நாம் ஆசீர்வாதத்தைப்  பெறுவதற்கு தகுதியடைய  வேண்டும்.  

 

I. தேவனுடைய ஆசீர்வாதங்கள் யாருக்கு அருளப்படுகிறது?

1.இஸ்ரவேலருக்கு

 "இஸ்ரவேலை  ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப்  பிரியம்..." எண்ணாகமம்  24:1

            இஸ்ரவேல் என்று சொன்னாலே தேவன் விரும்புகிற அல்லது தெரிந்துக்கொண்ட, நேசிக்கிற,மாற்றமடைந்த  ஒரு மனிதன். மாற்றத்தைப்  பெறும்போது தான், தேவனுடைய ஆசீர்வாதத்தை அளவில்லாமல் பெற்றுக்கொள்வதற்கு நம்மைத் தகுதிபடுத்துகிறார். அநேக நேரங்களில் நாம் அதை அறியாதிருக்கிறோம் . யாக்கோபின் வாழ்க்கையைப் பார்க்கும்  போது  , அவன் பலவிதமான தவறுகளை, தீமையான காரியங்களைச்  செய்தவன். தன்  வாழ்க்கையிலே குறுகிய எண்ணமும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவன்.சொந்த சகோதரனை நேசிக்க முடியாதபடி வாழ்ந்த ஒரு மனிதன். இந்த யாக்கோபு தன்  உள்ளத்திலே அன்பற்ற எண்ணத்தோடு,உலகத்தாரைப்  போல , உலகத்தின் ஆசீர்வாதங்களைப்  பெறுவதற்கு முற்பட்டவன் .தன்  சகோதரனாகிய ஏசா  ஒரு நாளிலே பசியாக இருந்தபோது யாக்கோபு வைத்திருந்த சிவப்பான கூழிலே  நான் சாப்பிட கொஞ்சம் தா , இளைத்திருக்கிறேன் என்று அவனுடைய சகோதரனாகிய ஏசா கேட்ட போது, அவனுடைய வாழ்க்கையிலே ஒரு காரியத்தை செய்வதைப்  பார்க்கிறோம்.உன்னுடைய சேஷ்டபுத்திரப் பாகத்தை எனக்கு விற்றுப் போடு என்றுச் சொல்லி, தன்னுடைய மூத்த சகோதரனுடைய சேஷ்டபுத்திர பாகத்தை அற்பமான ஒரு கூழுக்காக  வாங்கிக்  கொண்ட ஒரு மனிதன்.சகோதர பாசமில்லாதவன் தான் இந்த யாக்கோபு. உலகத்தின்  ஆசைகளைப்  பெறுவதற்கு,ஆசீர்வாதங்களை அடைவதற்கு பாசமில்லாதபடி, நேசமில்லாதபடி வாழ்ந்த ஒரு மனிதன் தன்  இந்த யாக்கோபு. இந்த நாளிலே அநேகருடைய வாழ்க்கை அப்படி தான் இருக்கிறது. ஒரே குடும்பத்தில் பிறந்த மக்களாய் இருந்தாலும், சொத்துக்கள்,செல்வங்கள் பெருகியிருக்குமானால், அதினிமித்தமாய் பிரிவினைகளும், பலவித வழக்குகளும் நடைபெறுவதைப்  பார்க்கிறோம்.

           நான் அநேக நேரங்களிலே என் வீட்டிற்கு அருகே இருந்த மூன்று சகோதரர்கள் இணைந்து  நடத்தின ஹோட்டலை நினைப்பதுண்டு. அவர்கள் அதிகமாய் பிரயாசப்பட்டு  அத்தொழிலை நடத்தினார்கள். நன்றாய் அந்த தொழில் நடந்தது. அந்த ஹோட்டலானது அநேகருக்கு நல்ல  ஆகாரத்தைக் கொடுக்கக்கூடிய ஒரு ஹோட்டலாக இருந்தது.ஆனால்  திடிரென்று சொல்லி, மூன்று சகோதரருக்குள்ளாய்  பிரிவினைகள்,சண்டைகள். ஆகவே அந்த ஹோட்டலை மூடினார்கள்.ஒருவர் மீது ஒருவர் வழக்குப் போட்டார்கள். நடத்தின அந்த தொழிலானது நின்று போயிற்று. வழக்கானது தொடரப்பட்டது. ஏறத்தாழ நான் அறிந்து,35 ஆண்டுகளாகியும் அந்த வழக்கு முடியாதபடி அந்த ஹோட்டல் இடமானது ஒரு மண் மேடாக மாறி ஒருவரும் பயன்படுத்த முடியாத ஒரு வேதனைக்குரிய இடமாக மாறிவிட்டது. இன்றைக்கும் அப்படித்தான்  உள்ளது. இந்த யாக்கோபு சேஷ்ட புத்திரபாகத்தை தனக்கு தர வேண்டும் என்றுச் சொல்லி நேசமில்லாதபடி, பாசமில்லாதபடி அற்ப கூழுக்காக  வாங்கிக்  கொண்டதைப்  பார்க்கிறோம்.

          அது மாத்திரமல்ல , அவன் தகப்பனார் அவன் மூத்த சகோதரனை அழைத்து, நீ வேட்டையாடிக் கொண்டு வந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றுச் சொன்ன வார்த்தைகளை அவனுடைய தாயார் கேட்டாள்  அதை இளைய மகனுக்குச்  சொன்னாள், சொன்னதோடு மாத்திரமல்ல நான் உனக்கு சமைத்துத்   தருகிறேன்; நீ கொண்டுபோய் அதைக் கொடு , அதினிமித்தமாக உன் தகப்பனார்  உன்னை ஆசீர்வதிப்பார் என்றாள். ஆனால் யாக்கோபு , அவர் என்னைக் கண்டுக்கொள்வாரே , மேலும் என் சகோதரன் நிறைவான ரோமம் உடையவனாய் இருந்தானே என்று தடவிப் பார்த்தால் நான் தவறு செய்கிறவனாய் மாறுவேனே  என்று சொல்லிப் பயந்தான். ஆனால் அதற்கேற்ற தோல் உடைகளை உடுத்தி ரோமமுள்ளவன் போல் காண்பித்தான்.  அவனுடைய தோலுடைய  வஸ்திரங்களை எடுத்து அணிந்துக் கொண்டு தகப்பனுக்கு முன்பாக நின்று , அவன் நான் தான் ஏசா என்றதோடு,பொய்யான ஒரு காரியத்தைச் சொல்லி , அவனின் ஆசீர்வாதங்களைப்  பறித்துக் கொண்டான். அநேகருடைய வாழ்க்கையிலே தகப்பனுடைய  ஆசீர்வாதத்தைப் பெருவகற்கு எப்படியாவது தந்திரமான விதங்களிலே  தங்கள் காரியங்களைச் சாதிக்க வேண்டுமென்று பொய்ச்  சொல்லி, பெற்றோரை ஏமாற்றுவதைப்  பார்க்கிறோம். பொய்யைக்   கூறி , தகப்பனுடைய ஆசீர்வாதங்களினால் மகிழ்ச்சியடைந்தான். நீ என் குமாரனாகிய ஏசா தானோ அல்லவோ என்று,நான் உன்னை தடவிப் பார்க்கும்படி கிட்ட வா என்றான். அப்பொழுதும் சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்றுச் சொல்லி, அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப் போல ரோமமுள்ளதாக இருந்தபடியினாலே  இன்னான்  என்று அறியாமல் அவனை ஆசீர்வதித்தான்  என்றுப்  பார்க்கிறோம். அவன் சொந்த தகப்பனே ஏமாறுகிறான். கண் தெரியாத தன்  தகப்பனை ஏமாற்றி , ஆசீர்வாதத்தைப்  பெற்றவன்தான் இந்த யாக்கோபு. இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையிலே இவ்விதமாய் செய்கிற மக்கள் உண்டு. தவறான விதத்திலே கையொப்பமிட்டு மேன்மையான பதவியை நாடுகிறவர்கள் உண்டு.

              ஏசா தன்  வாழ்க்கையிலே, ஆசீர்வாதங்களை இழந்து போனதினால் , கோபமடைந்தவனாய் இருந்தான். தகப்பனாருடைய மரணம் நேரிடும். பிறகு யாக்கோபை கொன்று விடலாம் என்றுச் சொல்லி அவனுடைய  உள்ளத்தில்  எண்ணின  காரியத்தைப் பெற்றோர்களாகிய ஈசாக்கும்  ரெபெக்காளும் அறிந்த பொழுது, உடனே அவனை வேறொரு ஊருக்கு அனுப்புகிறதைப்  பார்க்கிறோம். ஆனால்  அவ்விதமான ஊருக்குச் சென்று, எதை விதைத்தானோ, அதையே அறுப்பான் என்று சொன்னதுபோல அவனும் தன்  வாழ்க்கையிலே ஏமாற்றப்படுகிறான்.அவன் தான் நேசித்த  ஒரு மகளை திருமணம் முடிப்பேன் என்றுச் சொல்லி நினைக்க, ஆனால்  அதற்குப் பதிலாக, அங்கு லேயாளுடன் திருமணம் முடிந்ததைப் பார்க்கிறோம். ஆனால் , மீண்டுமாக ராகேலுக்காக வேலை செய்து அவளைத் திருமணம் செய்துகொண்டதைப்  பார்க்கிறோம்.

           அதோடு மாத்திரமல்ல, கர்த்தருடைய சமூகத்திலே வாக்குத்தங்களைச்   சுதந்தரித்துக் கொள்ளுவதற்கு தன்னை அர்ப்பணித்தான். இவ்விதமான ஒரு நிலையிலே திரும்பி வருகிற போது, எங்கு  தன்  மூத்த சகோதரன் அவனையும் குடும்பத்தையும் அளித்து விடுவானோ என்று பயந்து கலங்கினான். இரவிலே தனித்திருக்கும்போது , ஆண்டு தேவ சாயலாக இருந்த ஒரு மனிதரோடு யுத்தம் பண்ணுவதைப்  பார்க்கிறோம். யுத்தம் பண்ணின பொழுது,பொழுது விடிகிறது என்றுச் சொல்லி அந்த மனிதன் சொன்ன பொழுது, நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய  உம்மை விடமாட்டேன் என்றுச் சொல்லி அவன் அதிகமாய் போராடினதைப் பார்க்கிறோம்.அப்பொழுது அவன் உன் பேர்   என்ன? என்று கேட்டபொழுது, உண்மையான பெயராகிய யாக்கோபு என்றான். அப்பொழுது அவர் இனி உன் பெயர் யாக்கோபு எண்ணப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார் .

         கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இந்த யாக்கோபு இஸ்ரவேலாக மாறினதைக் காண முடிகிறது. ஆகவே தான் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பது  கர்த்தருக்கு பிரியம். ஆகவே அந்த இஸ்ரவேலாய்  மாறின யாக்கோபைப் போல , நம்முடைய வாழ்க்கையிலும் கிறிஸ்துவுக் குள்ளாய்  மாறும்போது, பழையவைகள் ஒழிந்து  எல்லாம் புதிதாகும் பொழுது நாம் கர்த்தருக்குள்ளாக  ஆசீர்வதிக்கப்படுகிற  மக்களாய் இருக்கிறோம். 

2.குடும்பத்திற்கு ஆசீர்வாதம்

"கர்த்தருக்குப் பயந்து , அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய் ; உனக்கு பாக்கியமும் நன்மையும்  உண்டாயிருக்கும்." சங்கீதம் 128:1,2

                    அருமையான சகோதரனே, சகோதரியே , உன்னுடைய வாழ்க்கையிலே கையின் பிரயாசங்களை நீ காண முடியாதபடி அனுபவிக்கமுடியாதபடி செலவுகள் வருகிறதா? பலவிதமான நிலைகளிலே அது ஒன்று மில்லாததாய் ஓடி மறைந்து விடுகிறதா? பொத்தலானா பைகளிலே  நீ போட்டுக் கொண்டிருக்கிறாயா ? இன்றைக்கு இயேசு  கிறிஸ்துவின் பாதையிலே, அவர் வழியிலே நடப்பதற்கு உன்னை ஒப்புக்கொடுப்பாய்  என்றால், உன் கையின்  பிரயாசங்களை நீ சாப்பிடுவாய் , மற்றவர்கள் அல்ல, உன் குடும்பத்தாரே  அதை அனுபவிக்கத்தக்கதான ஆசீர்வாதத்தைத் தருவார்.

             இரண்டாவது  காரியமாக உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள் என்று பார்க்கிறோம். மலை பிரசேதங்களிலே அதிகமான மழையும் குளிரும் உள்ள இடங்களிலே திராட்சச் செடியானது நடப்படுகிறது. இஸ்ரவேல் நாட்டிலும் அதனைச்  சார்ந்து அருகே இருக்கிற நாடுகளிலும் இந்தத் திராட்சச் செடியை வீடுகளின் ஓரத்திலே பயிரிடுகிறதைப் பார்க்க முடியும். அதோடு மாத்திரமல்ல, கனித் தருகிற திராட்சக்கொடி  என்றால் கனி நிறைந்த பண்புகளுடைய ஒரு மகளாய் , அவளுடைய குடும்பத்தை நேசித்து நடத்துவாள். ஆகவே இன்றைக்கு கர்த்தருக்குப்  பயந்து அவருடைய வழியில் நடக்கும்போது, ஒரு குடும்பத்தில் முக்கியமான ஸ்தானத்தில் இருக்கக்கூடிய மனைவியானவள் ஒரு புத்தியுள்ள ஸ்திரீயாய்  இருப்பதினால்,வீட்டைக் கட்டுகிறவளாய் இருப்பாள். அதோடு மாத்திரமல்ல, இந்தக் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகள் ஒலிவ மரக்கன்றுகளைப் போல் பந்தியைச் சூழ இருப்பார்கள். பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும் என்று  சொன்ன தேவன்,பிள்ளைகளை அளவில்லாதபடி ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். பிள்ளைகளுடைய ஆசீர்வாதமானது  ஒலிவ மரக்கன்றுகளைப்  போல் இருக்கிறதென்று பார்க்கிறோம். ஒலிவ எண்ணெயானது முகத்திற்கு அழகைத் தருகிறது. அந்த எண்ணெயானது காயங்களை ஆற்றுகிற  விலையேறப்பெற்ற எண்ணெயாக  இருக்கிறது. செல்வத்தைத் தரக்கூடிய பிள்ளைகள், சிறப்பான அழகைத் தரக்கூடிய பிள்ளைகளுடைய வாழ்க்கையானது நம்மை எல்லாவிதமான வேதனைக்குரிய போராட்டத்திலிருந்து குணமாக்கக்கூடிய ஆற்றலுடையவைகள். அதோடு மாத்திரமல்ல ஜீவனுள்ள நாட்களெல்லாம் எருசலேமின் வாழ்வையும், பாக்கியத்தையும் ஆசீர்வாதத்தையும் காணத்தக்கதான நாட்களைத் தருகிறவராய் இருக்கிறார். கர்த்தருக்குப் பயந்து வாழும்போது, அவர் வழியில் நடக்கும்போது இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை  அடைகிறோம். கர்த்தருக்குப் பயப்படுத்தல்  என்று சொன்னாலே தீமையான காரியங்களை விட்டு விலகுவது.

3.ஆலயத்தில் அல்லது சங்கத்தில், ஊழிய ஸ்தாபனத்தில் ஆசீர்வாதங்கள்.

 

"இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை  நன்மையும்  எத்தனை  இன்பமுமானது?...அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார் ." சங்கீதம் 133:1,3

              கர்த்தருடைய பெரிதான ஆசீர்வாதம் என்றென்றைக்கும் இருக்க வேண்டுமென்றுச்  சொன்னால் ஒரு மனதோடு வாசம் பண்ணுகிற ஒரு வாழ்க்கை,சபை,சங்கம், fellowship-கள் ,ஒருமனத்தோடு வாழ்கின்ற குடும்பங்கள் வேண்டும். அநேக குடும்பங்களிலும் சபைகளிலும் , சங்கங்களிலும் ஒரு மனதில்லாத ஒரு நிலைமை. வேதத்தில் , இரண்டு பேர் ஒருமனப்பட்டு  தேவ சமூகத்தை நோக்கி ஜெபிக்கும்போது , அது பரலோகத்திலிருந்து அவர்களுக்கு கட்டளையிடப்படுகிறது. ஆகவே கணவனும் மனைவியும் குடும்ப வாழ்க்கையிலே இணைந்து  ஜெபிக்கும் போது கர்த்தர் அந்த ஜெபத்தைக் கேட்டு, பிள்ளைகளையும்,குடும்பத்தையும் ஆசீர்வதிக்கிற ஆண்டவராக இருக்கிறார். அப்போ 2ம் அதிகாரத்தில் பெந்தகொஸ்தே நாளிலே சீஷர்கள் ஒருமனதோடு கூடினார்கள். அங்கு கர்த்தருடைய ஆவியின் அபிஷேகத்தையும் ஆவிக்குரிய வரங்களையும் பெற்றுக் கொள்ளுகிறதைப் பார்க்கிறோம்.நம்முடைய வாழ்க்கையிலே ஒருமனதோடு காரியங்களைச் செய்ய ஒப்புக்கொடுக்கும் போது , கர்த்தர் ஆசீர்வாதத்தைப் பெருகச் செய்கிறவராயிருக்கிறார் .

4.கர்த்தருடைய நாமத்தை உயர்த்துகிறவர்களுக்கு

    '...நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து , உன்னை ஆசீர்வதிப்பேன் .' யாத் .20:24

             வேதத்தை நாம் பார்க்கும்போது கர்த்தருடைய பிரசன்னம் அவரை பிரஸ்தாபப்படுத்தும் இடத்திலே வந்து ஆசீர்வதிக்கிறதாய்  இருக்கிறது. எல்லா நாமங்களுக்கும் மேலான ஒரு நாமம். அந்தக் கர்த்தருடைய நாமத்தை நாம் பிரஸ்தாபப்படுத்தும் பொழுது,அவர் வந்து நம்மை ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார் . 

கர்த்தருடைய  நாமத்தை எப்படி பிரஸ்தாபப்படுத்தலாம்?

1. கர்த்தர்மேல் வைத்திருக்கிற நம்பிக்கையினால்

"...அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப்பணியாமல், அவரையே நம்பி , ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்." தானியேல்  3:28

                அருமையான சகோதரனே, சகோதரியே, கர்த்தருடைய நாமத்தை உயர்த்தும்பொழுது அதற்குரிய பிரதிபலனாக உன் கூடாரத்திலும் உன் சந்ததியிலும்  ஆசீர்வாதங்களைக்  காணமுடியும். வேதத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது நம்பிக்கையின் நிச்சயத்தினாலே கர்த்தருடைய நாமம் மகிமைபடக்  கூடியதாயிருக்கிறது. சாத்ராக்,மேஷாக், ஆபேத்நேகோ என்ற இந்த மூன்று வாலிபர்களும் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் செய்து வைத்த சிலைக்கு முக்கியத்துவம் தரவில்லை. அதைத் தாழ விழுந்துப் பணிந்து கொள்ளவில்லை. ஆகவே ராஜா கோபமடைந்தவராய் அவர்களைப்  பார்த்துக் கீத வாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, தாழ விழுந்து பணிய வேண்டுமென்று சொன்னான். ஆனால்  இந்த மூன்று வாலிபர்களும் தங்கள் நம்பிக்கையிலே உறுதியாயிருந்தார்கள். நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். நீர் உண்டுபண்ணி வைத்திருக்கிற சிலைக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். கோபமடைந்த அந்த ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஏழு மடங்கு சூளையை  அதிகரித்தார். அவ்விதமான சூளையின் நடுவே இந்த முன்று  வாலிபர்களையும்  கட்டி சூளையிலே  போட்டார்கள். ஆனால்  அக்கினி சூளையின் நடுவே அந்த மூன்று வாலிபர்களும் தங்கள் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு உலாவுகிறவர்களாய்  மாறினார்கள். அவர்களோடு நாலாம் ஆளாக தேவப்புத்திரனுக்கு ஒப்பாயிருக்கிற ஒருவர் உலாவுகிறதை நேபுகாத்நேச்சார் கண்டபோது ஆச்சரியமடைந்தார்.

                      அருமையான தேவ ஜனங்களே, ஒரு மனிதனுடைய வாழ்க்கை கர்த்தருக்குச் சொந்தமாயிருக்குமானால் நீ என்னுடையவன் என்று சொல்லத்தக்கதாக நம்முடைய நம்பிக்கை இருக்குமானால், அவர் நம்மை ஆசீர்வதிக்கிறவராயும்  மேன்மைப்படுத்துகிறவராயும் இருக்கிறார்.அக்கினியில் நடக்கும்போது வேகத்திருப்பாய், அக்கினி ஜுவாலை உன்பேரில் பற்றாது  என்ற வாக்குறுதியின் அடிப்படையிலே இந்த அக்கினியானது அவர்களைப்  பாதிக்கவில்லை. ராஜா ஆச்சரியத்தோடு அவர்கள் அருகில் வந்து வெளியே வரும்படி  அவர்களை உரத்தச்  சத்தமாய்க்  கூப்பிட்டான். உன்னதமான தேவனுடைய தாசர்களாகிய சாத்ராக்,மேஷாக்,ஆபேத்நேகோ என்பவர்கள் வெளியே வந்தார்கள். அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தவுடனே, அவர்களைச்  சோதித்தார்கள்.

அவர்களுடைய சரீரத்திலே எந்தவிதமான அக்கினியின் மணமும்  காணப்படவில்லை. ஆகவே அந்த மூன்று வாலிபர்களின் முழுமையான நம்பிக்கையின் காரியத்தினாலே ராஜா, அவர்களுடைய தேவனே தேவன் என்று ஒரு சட்டமாக இயற்றினதைப் பார்க்கிறோம். அவர்களுடைய நம்பிக்கையானது அந்தத் தேசத்திலே எழுப்புதலைக் கொண்டுவந்தது.

2.பேச்சினால்

 

" சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து:மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள் ". மத்தேயு 26:73

 

   பேதுருவினுடைய வாழ்க்கையை பார்க்கும்போது, அவருடைய பேச்சானது இயேசு  கிறிஸ்துவைப் பிரதிபலிக்கக் கூடியதாய் இருந்தது. சேனைவீரர்கள் இயேசு கிறிஸ்துவைப் பிடித்து,பிரதான ஆசாரியனுடைய அரமணைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு முன்பாக நிறுத்தின பொழுது,பல  கேள்விகள் கேட்கப்பட்டதுடன் பலவிதமான காரியங்களைக் குற்றமாய்ச் சொன்னதையும் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் காண  வேண்டுமென்று தூரத்தில் பேதுருவானவன் அமர்ந்திருந்தான். அந்த இடத்திலே வந்த ஒரு வேலைக்காரி நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தாய் என்றாள். உடனே இயேசு கிறிஸ்துவை அவன் மறுதலிப்பதைப் பார்க்கிறோம். மூன்றாவது முறையாக ஒருவர் வந்து நீயும் அவர்களில் ஒருவன் , உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்று சொன்னதைப்  பார்க்கிறோம்.படிப்பறிவில்லாத பேதுருவினுடைய வார்த்தைகள், இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைப்  போல வெளிப்பட்டதைப்  பார்க்க முடிகிறது.

            ஒரு மனிதன் இயேசு கிறிஸ்துவோடு இசைந்திருந்தால், அவரோடுகூடிய உறவின் நிமித்தமாக அவனுடைய பேச்சானது முழுமையாய் மாறிவிடுகிறது. சில சமயங்களிலே சிறுபிள்ளைகளிடம் இதைப் பார்க்க முடிகிறது.

           அமெரிக்க தேசத்திலே வாழ்ந்து வருகிற ஒரு குடும்பத்தை நான் நன்கு அறிவேன். அந்தக் குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் நன்கு தமிழ் மொழியிலே பேசக்கூடிய வழக்கமுடையவர்களாய் இருந்தார்கள். ஆனால்  அமெரிக்க தேசத்திற்கு சென்றபிறகு, அவர்கள் தமிழ்மொழியை மறந்து,பேசுகிற வார்த்தையெல்லாம் அந்தத் தேசத்தின் மக்களைப்போல பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம்  அவர்கள் இணைந்த மக்களுடைய பண்புகள், சுபாவங்கள்,அவர்களுடைய வார்த்தையின் உச்சரிப்புகள் இவர்களையும் மாற்றிவிட்டது. நீங்கள் இயேசுகிறிஸ்துவோடு  இசைந்து,இணைந்து  வாழக்கூடிய வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டால், அவரைப்போல பேசுகிறவர்களாய்  மாறிவிடுவீர்கள்.உங்களுடைய பேச்சானது, இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கக்கூடியதாய் மாறிவிடும். படிப்பறிவில்லாத பேதுருவினுடைய பேச்சைப் பார்த்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். ' பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு , அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே  கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள்.' அப் . 4:13ல் பார்க்கிறோம். பேச்சு இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிறது . இந்தப் பேதுருவினுடைய வார்த்தைகளைக் கேட்டு அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் பெற்று, சபையிலே சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள் என்று சொல்லி அப் 2ம் அதிகாரத்தில் பார்க்க முடிகிறது. ஆகவே பேதுருவினுடைய வார்த்தைகள் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கிறதாய் இருக்கிறது.  அதோடு பேதுரு கொர்நேலியு வீட்டிற்கு அழைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளைச்  சொன்னபோதே, அந்த வார்த்தைகளைக் கேட்ட அத்தனை மக்களுக்குள்ளாயும், பரிசுத்த ஆவியானவர் இறங்கினார் என்று அப். 10:44ல் பார்க்க முடிகிறது. வார்த்தையிலே வல்லமை வெளிப்பட்டது.இயேசு கிறிஸ்துவின் நாமம் உயர்த்தப்பட்டதைப்  பார்க்கமுடிகிறது.

3.சாட்சியின் வாழ்க்கையினால்

 

" அப்பொழுது, சம்பவித்ததைப்  பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக்  கண்டு பயந்தார்கள்." லூக்கா 8:35

 

        பிசாசினால் பிடிக்கப்பட்ட லேகியோன் விடுதலை அடைந்ததும் இயேசுவோடு இருக்கவேண்டுமென்கிற எண்ணத்தை உடையவனாய் மாறினான். 'இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப் போய் , தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய் ,இயேசு தனக்குச்  செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான்.' லூக்கா 8:39ல் பார்க்கிறோம். அவன் அவ்விதமாய் ஒரு சாட்சியாய் மாறுகிறான். கர்த்தர் தனக்குச் செய்த நன்மைகளை அறிவித்தபொழுது,அநேகர் இயேசு கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு, சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டதோடு,இயேசு கிறிஸ்து திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய்  ஏற்றுக் கொண்டார்கள் என்று பார்க்கிறோம்.

               ஒரு மனிதன் இயேசுவோடு இருக்குபோது அவன் இயேசுவுக்கு சாட்சியாய் மாறுகிறான்.யோவான் 15:27ல் 'நீங்களும் ஆதிமுதல் என்னுடனே கூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் ' என்று சீஷர்களைக் குறித்து இயேசு சொன்னார். இன்று நாம் சாட்சியாய் மாறி இயேசுவை பிரஸ்தாபப்படுத்துகிறோம்.

                 இன்னுமாய் நம்முடைய வாழ்க்கையிலே பரிசுத்த ஆவியானவர் வரும்போது, இயேசு கிறிஸ்துவை பிரஸ்தாபிக்கிற மக்களாய்  மாறி விடுகிறோம். அப் .1:5ல் நீங்கள் எருசலேமிலே  காத்திருங்கள் என்றுச் சொன்னார். ஏனென்றால், 'பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும் ,யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும் ,பூமியின் கடைசிபரியந்தமும்,எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.' என்று சொன்னதைப்  பார்க்கிறோம்.

               தானியேல் 6:22ல் தானியேலுடைய  வாழ்க்கை தேவனுக்கு முன்பாகவும் இராஜாவுக்கு முன்பாகவும் சாட்சியுள்ளதாய் இருந்தபடியினால் சிங்கக் கெபியில் போட்டபொழுதும் , சாட்சியுள்ளவனாய் அவன் காணப்பட்டான், உயிரோடு எடுக்கப்பட்டு, காக்கப்பட்டான். தூக்கியெடுக்கப்பட்ட அவனுடைய வாழ்க்கையானது கர்த்தருடைய நாமத்தை அந்தத் தேசத்திலே உயர்த்துவதற்கு காரணமாய் மாறியது. சாட்சியின் மூலமாய் இயேசு கிறிஸ்துவின் நாமம் உயர்த்தப்படுவதைப்  காணமுடிகிறது.

4.மாறிய தோற்றத்தினால்

 

"...அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக்  கண்டார்கள்." அப் .6:15

    

ஸ்தேவானுடைய முகம் தேவதூதனைப் போல பிரகாசித்தது. நம்முடைய தோற்றமானது அநேகர் பாவ அறிக்கைச் செய்வதற்கும் ஆச்சரியப்படுவதற்கும் ஏற்றதாய் மாறுகிறது. அவரை நோக்கிப் பார்த்தவர்கள் பிரகாசமடைந்தார்கள் , முகங்கள்  வெட்கப்படவில்லை என்று சொன்ன வார்த்தையின்படியே நம்முடைய வாழ்க்கையானது அவரை நோக்கிப்பார்க்கும் போது, வெட்கப்படாத, பிரகாசமடைகிற  ஒரு வாழ்க்கையாய் மாறுகிறது. இயேசு கிறிஸ்துவினுடைய முகத்தின் பிரகாசமான ஒளியானது நம்மீது வீசக்கூடியதாய் இருக்கிறது. யாத் . 34ம் அதிகாரத்திலே  மோசேயானவன் தேவனோடு பேசின படியினாலே  அவனுடைய முகம் பிரகாசமாய் இருந்தது. ஜனங்கள் அவனோடு பேசுவதற்குப் பயந்தார்கள். அவன் முக்காடிட்டுக்கொண்டான் என்றுப்  பார்க்கிறோம்.

 

5. கிறிஸ்துவின் அன்பினால் நிறையும்பொழுது

 

"கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது..." 2கொரி. 5:14

       கிறிஸ்துவின் அன்பினால் நிறையும்போது ,இயேசு கிறிஸ்துவை உயர்த்திக் காண்பிக்கிற மக்களாய் மாறுகிறோம். பேதுருவைக் குறித்து நாம் பார்க்கும்பொழுது, இயேசு கிறிஸ்துவை மூன்று முறை மறுதலித்து பேதுரு, எனக்குப் பின்னாலே போ சாத்தானே என்று இயேசுவால் சொல்லப்பட்டவன், இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறவனாய் மாறினான்.

         யோவான் 21ம் அதிகாரத்திலே  இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து, யோனாவின் குமாரனாகிய சீமானே  என்னை நேசிக்கின்றாயா என்று கேட்டபொழுது, அவன் ஆம் என்று சொன்னதோடு அவன் இயேசுவை நேசித்தபடியினாலே. இயேசு அவனுடைய கரத்திலே  ஒரு மேலான பொறுப்பைக் கொடுக்கிறார். அந்த மேலான பொறுப்பு என்ன? என் ஆடுகளை மேய்ப்பாயாக  என்றார். இயேசு கிறிஸ்து தமக்கு பின்னாக ஒரு ஊழியனை எழுப்புகிறார். அது பேதுருவாய் இருப்பதைப்  பார்க்கிறோம். படிப்பறிவில்லாதவன் அவனுடைய வாழ்க்கையிலே எந்தவிதமான காரியங்களும் நலமாய் காணப்படாத ஒரு நிலைமை. ஆனால் இயேசு கிறிஸ்துவை அதிகமாய் நேசித்தவனாய்  இருந்தபடியினால் அவருக்காய்  வாழ்வதற்கு, அவருக்காய்  ஜீவனைக் கொடுப்பதற்கு ஆயத்தமடைந்தவனாய் இருந்தபடியினால் அவனை இயேசு கிறிஸ்து தனக்குப் பின்னாக ஒரு பெரிய பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு வழிநடத்தினதைப் பார்க்கிறோம்.

         ஆகவே இன்றைக்கு இந்த வார்த்தைகளை நாம் வாசித்தவர்களாய் இயேசு கிறிஸ்துவை உயர்த்துவதற்கு நம்பிக்கை,பேச்சு,அதோடு சாட்சி,தோற்றத்தில் மாற்றம்,அன்பு இவைகள் இருக்குமென்றால் அவருடைய நாமத்தை பிரஸ்தாபிக்கிற மக்களாய் மாறி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வோம்.

                                                                                       கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                                                                                                              கிறிஸ்துவின் பணியில்,

                                                                                                                                                                              சகோ.சி.எபினேசர் பால்.