சிந்தி செயல்பாடு

"உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள்." ஏசாயா 41:12

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு முறை ஆசிரியப் பணி செய்யும் ஒரு சகோதரி தன்னுடைய பிரச்சனையைக் கூறினார்கள். நல்ல கட்டிடத்தில் நல்ல வகுப்பறைகள் இருந்தும், மரத்தின் அடியில் பிள்ளைகளை வைத்து சில சமயங்களில் பாடம் கற்றுக் கொடுத்தார்கள். இவ்வாறு பள்ளியிலுள்ள மற்றும் சில ஆசிரியர்களும் செய்தார்கள். ஒரு நாளில் பள்ளியின் இன்ஸ்பெக்ட்ர் பார்வையிட வந்தபொழுது, இவ்வாறு நடத்தியதைக் கண்டித்தும், அதற்குரிய விளக்கம் தரவேண்டுமென்றும் கூறினார். இதனால் கலங்கிய ஆசிரியர்கள் என்ன ஆகுமோ என்று கலங்கினார்கள். கர்த்தருக்குள் வாழும் அச்சகோதரிகள் என்ன செய்வது என்று கேட்டபொழுது, நீங்கள் கூடி ஜெபியுங்கள். கர்த்தர் இரண்டு நாட்களில் அற்புதம் செய்வார் என்று தைரியப்படுத்தி அனுப்பி வைத்தோம்.

இரண்டாம் நாளில் பள்ளிக்குச் சென்றபோது, ஒரு அதிர்ச்சியான தகவல் பள்ளியின் தலைமையாசிரியரிடமிருந்து வந்தது. பார்வையிட்ட அதிகாரி, தன் மேல் அதிகாரியைச் சந்திக்க வரும்படி ஆசிரியர்களுக்கு உத்திரவு கொடுத்திருந்தார். ஆசிரியைகள் மிகவும் கலங்கினார்கள். அவரைச் சந்திக்க ஆயத்தமானார்கள். குறித்த நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னாக, அந்த அதிகாரி வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டார்கள். யாரும் வரத்தேவை இல்லை என்ற செய்தி, அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

ஜெபத்தைக் கேட்கிற தேவன் இன்றைக்கு ஜீவிக்கிறார். ஜெபத்தைக் கேட்டு உன்னை அதிசயங்களைக் காணச் செய்வார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவன். எதைக் குறித்தும் கலங்க வேண்டாம். கூடி ஜெபிப்போம். கர்த்தர் அருளும் அதிசயத்தையும், நன்மையையும் பெற்று மகிழ்வோம்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்