செய்தி

"என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்."

லூக்கா 11:23

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே வாழ்த்துகிறேன்.

நம்முடைய வாழ்க்கை கர்த்தரோடு இருக்கிறதா? அல்லது உலகத்தாரோடு இருக்கிறதா? என்னோடு இராதவன் விரோதியாயிருக்கிறான் என்று இயேசு சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் 'அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்' மத்தேயு 1:23ன்படி தேவன் நம்மோடிருக்கிறார். வேதத்தைப் பார்க்கும்போது, யூதாஸ்காரியோத்து தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட அப்போஸ்தலனாய் இருந்தும், தேவனோடு இருக்க வேண்டிய அவன், இயேசுவுக்கு விரோதமாய் இருந்தவர்களை அணுகி, 30 வெள்ளிக்காசுக்கு காட்டிக் கொடுக்க சம்மதித்தான். ஏன் இந்த நிலை  வந்தது? அவனுக்குள் சாத்தான்  புகுந்ததால் (லூக்கா 22:3).

இன்று அநேகர் இயேசு கிறிஸ்துவோடு இருப்பதோடு, உலகத்தோடும் இருப்பதற்குக் காரணம் பிசாசின் தந்திரங்களும் பிசாசின் செய்கைகளுமாய் இருக்கிறது. ஆகவே அவர்கள் பலவிதமான உலகரீதியான காரியங்களைச் சொல்லியும், செய்தும் வருகிறதைப் பார்க்க முடிகிறது.

I. யார் இயேசுவோடு இருப்பார்கள்?

1. பிசாசின் பிடியில் இருந்து விடுதலைப் பெற்றவர்கள்

"பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்." லூக்கா 8:38

இன்று அநேகர் பலவிதமான பிழைகளை, தவறுகளை, தீயக்காரியங்களைச் செய்கிறார்கள். ஒவ்வொரு தீமையான காரியங்களைச் செய்கிறவர்களின் பிண்ணனியில் பிசாசின் ஆவிகள் செயல்படுவதைப் பார்க்கிறோம். சிலருடைய வாழ்க்கையிலே பொய்யாகவே பேசுவார்கள், பேசுகிற சொல்லானது உண்மையைப் போல தோன்றும். ஆனால் அது உண்மையாயிராது. பொய்யின் ஆவியானது தீர்க்கதரிசிகளுக்குள்ளே பொய்யானதைப் போதித்தது என்று 2 நாளா. 18:21,22ல் பார்க்கிறோம். இன்னும் சிலருடைய வாழ்க்கையில் இந்த ஆவியின் செயலால், வீடு வாங்குவது, திருமணம் மற்றும் வேலைக் காரியங்களில் பொய்யான சான்றிதழ், பொய்யான காரியங்களைக் கூறி சந்தோஷ வாழ்வைக் கெடுத்து விடுகிறார்கள். சில நண்பர்களுக்கு துரோகம் செய்வதெல்லாம் இதன் காரணமாகவே அமைகிறது. 

சில தினங்களுக்கு முன்பாக ஒரு அருமையான சகோதரி பொய்யின் சொல், செயலினால் தான் ஒரு பெரிய நஷ்டத்தை அடைந்து விட்டேன் என்று கூறினார்கள். அவர்களுடைய மூத்த மகள் பட்டதாரி நர்சிங் படித்து, தனியார் மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தாள். விமான நிலையத்தில் நர்ஸ் பணியாளர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்து online-லேயே விண்ணப்பம் செய்தார்கள். சில தினங்கள் கழித்து உங்களுக்கு இந்த நாளிலே online- ல் நேர்முகத் தேர்வு இருக்கிறது, ஆயத்தப்படுங்கள் என கூறினார்கள். மிகுதியாய் ஆயத்தம் அடைந்து interview-ல் பங்கேற்ற சகோதரிக்கு மிகுந்த சந்தோஷமான ஒரு செய்தி வந்தது, இந்தப் பதவிக்கு தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டீர்கள். சீக்கிரத்தில் உங்களுக்கு appointment order அனுப்பப்படும் என்று கூறினார்கள். முன் தொகையாக ரூ.50,000/- கட்ட வேண்டும் என்று சொன்னவுடனே, எளிமையான குடும்பத்தார் பணத்தைக் கட்டினார்கள். திருச்சி விமான நிலையத்திலேயே பணி என்று சொன்னபடியினாலே ஆர்வத்தோடு விமான நிலையம் சென்று விசாரித்தபோது, அவ்விதமான காரியங்கள் ஒன்றும் இல்லை என்று விமானநிலைய அதிகாரிகள் சொன்னபோது, மிகுந்த துக்க மடைந்தார்கள். வேதனையால் ஜெபிக்க வந்தார்கள். பொய்யான காரியங்களைத் துணிகரமாய்ச் செய்து ஆதாயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறவர்கள் ஏராளம் உண்டு.         

பொய்யான காரியங்களைச் சொல்லி திருமணம் செய்து விடுகிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். மகளுக்கு திருமணமாகவில்லையே என்று ஏங்குகிற பெற்றோர்களிடத்தில் சென்று, தவறான காரியங்களைச் சொல்லி திருமணம் செய்து விடுகிறவர்கள் உண்டு. ஒரு சகோதரர் தான் ஒரு மருத்துவர் என்று ஒரு குடும்பத்தாருக்கு தன்னை அறிமுகப்படுத்தி, அந்த வீட்டாரின் மகளை திருமணம் செய்தார். பின்புதான் தெரியவந்தது, மருத்துவப்படிப்பு படிக்காதவர், மருத்துவரிடம் பணியாற்றுபவர் என்று அறிந்து கொள்ளமுடிந்தது. தனக்குத் தெரிந்த சில மருந்துகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்தார். இப்படியாக மக்களை ஏமாற்றி கண்ணீர் சிந்த வைக்கிற ஜனக்கூட்டம் மிகுதி. இதைப்போல ஒவ்வொரு தீங்கின் செயலுக்குப் பின்னாக தீய ஆவிகள் செயல்பட்டு வருகிறது. சிலருடைய வாழ்க்கையில் இவ்விதமான தீய ஆவிகள் அவர்களை ஆளுகைச் செய்கிறது. அதனால் அவர்களுடைய செயல்களெல்லாம் சமுதாயத்திற்கு வித்தியாசமான விதத்தில் அமைகிறது.

லேகியோன் பிசாசு பிடித்தவனைக் குறித்து லூக்கா 8:27ல் பார்க்கிறோம். அவன் வஸ்திரம் தரியாதவனாய், அலைந்து திரிந்ததோடு இயேசுவிடம் வந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறோம். சுதந்தரம் என்று சொல்லி பணத்திற்காக, புகழுக்காக அரை நிர்வாணமாய்ச் செல்கிற மக்கள் பெருகியிருக்கிறார்கள். அவர்களுக்குள் இருக்கிற வேசித்தன ஆவி  அவர்களை வழி தப்பி நடத்துகிற செயலைக் காண முடிகிறது. இதைப் போன்று பல காரியங்களைப் பார்க்க முடிகிறது.

ஒருமுறை ஒரு சகோதரிக்கு ஜெபித்துக் கொண்டிருந்தபோது, தானாகவே ஆடைகளைக் கழற்றி எரிய, கூட்டத்திற்குள் ஓட முற்பட்டபோது, அந்த மகளின்மேல் துணியை விரித்து கையைக் கட்டி, அவமானத்துடன் அவள் வீட்டார் நின்று கொண்டிருந்தார்கள். இதைப் போன்று தான் அன்று லேகியோன் பிசாசுகளினால் பாதிக்கப்பட்டவன் எந்த சுய நினைவும் இல்லாது அலைந்து திரிந்தான். மேலும் அவன் வீட்டில் தங்காதவனாய் கல்லறைத் தோட்டத்தில் தங்குகிறவனாய் இருந்தான். மாற்கு 5:5ல் தன் சரீரத்தை அவனாகவே காயப் படுத்தினான் என்று பார்க்கிறோம். இன்று அநேகருடைய வாழ்க்கையிலே தீய ஆவிகளுக்கு அடிமையாகி, இதுதான் சரி என்று எண்ணி வாதாடுகிறார்கள். தற்கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.

இந்த லேகியோன் பிசாசானவன் விடுதலை அடைந்தபோது, வஸ்திரம் தரித்து, புத்தி தெளிந்து இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்திருந்த நிலையைப் பார்க்கிறோம். அவனுடைய வாழ்க்கையிலே விடுதலை வந்தபிறகு இயேசு கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வாஞ்சையும் வந்ததைப் பார்க்கிறோம். புத்தி தெளியும்போதுதான் நலமான தீர்மானங்களைச் செய்ய இயலும். தன் தகப்பனுடைய அன்பையும், சகோதரனுடைய ஐக்கியத்தையும் விரும்பாதபடி, தன் மனம்போல வாழ வேண்டும் என்று பிரிந்து சென்றவனுக்கு புத்தி தெளிந்தது என்று லூக்கா 15:17ல் பார்க்கிறோம். பின் தன் நிலைகளை அறிந்து எழுந்து தகப்பனிடம் சென்றான். இந்த மெய்யான விடுதலையை இயேசு கிறிஸ்து மூலமாக யார் யார் பெற்றார்களோ, அவர்கள் இயேசுவோடு இருக்க விரும்புவதைப் பார்க்கலாம். விடுதலைப் பெற்றவர்கள் தெளிந்த புத்தியடைகிறார்கள், இயேசுவுடன் இருக்க அர்ப்பணிக்கிறார்கள்.

2. இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவரோ என்று காண விரும்புவோர் இயேசுவோடு இருப்பார்கள்

"இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்." லூக்கா 19:5

சகேயு என்று சொல்லப்பட்ட மனிதன் இயேசு எப்படிப்பட்டவர் என்று பார்க்க விரும்பினான்.  அவன் குள்ளனானபடியால், காணமுடியாதபடியினால், காட்டத்தி மரத்தில் ஏறி, அவர் வரும் பாதையில் காத்திருந்தான். இயேசு அவ்விடம் வந்தபோது, அண்ணாந்து அவனைப் பார்த்து சகேயுவே, சீக்கிரம் இறங்கி வா என்று அழைத்து, இன்று நான் உன்னுடனே தங்க விரும்புகிறேன் என்று சொன்னவுடன் அவன் உற்சாகமாய் இறங்கி இயேசு கிறிஸ்துவை தன்  வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.  பாவியான மனுஷன் என்று ஜனங்களால் அழைக்கப்பட்ட அவனோடு தங்கி இருக்க சென்ற போது, அவன் பாவ உணர்வு அடைந்து, பாவ நிவர்த்திக்குரிய காரியங்களைச் சொன்னான்.  இயேசு அவனைப் பார்த்து இன்று இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது என்றார்.

அருமையான சகோதரனே, சகோதரியே, இயேசு என்று சொல்லப்படுகிற, வரையப்பட்ட படங்களைப்  பார்த்து, இயேசுவிடம் வேண்டுகிறேன் என தவறாய்க் காரியங்களைச் செய்யும் தேவப் பிள்ளையே, தேவனை ஆவியோடும், உண்மையோடும் தேடும்போது, அவர் தென்படுவார்.  ஆசீர்வாத வார்த்தைகளினால் தேற்றி உன் வாழ்க்கையை மலரச் செய்வார்.  மாறாக பாரம்பரிய பழக்க வழக்கத்தினாலும் அப். 17:29ல் உள்ளதுபோல் மனுஷருடைய சித்திர வேலையினால் நாம் ஏமாற்றம் அடையாதபடி காத்துக்கொள்ள வேண்டும். உண்மையாய்த் தேடுகிறவர்களுக்கு தென்படுகிறவர். உண்மையாய்த் கூப்பிடுகிறவர்களுக்கு அவர் பதில் அளிப்பவர். சகேயுவைப் போல நாம் தேடும்போது கர்த்தர் அதிசயம் செய்வார். 

3. சத்தத்தைக் கேட்டு திறக்கிறவர்களிடத்தில் இருப்பார்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஓருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்." வெளிப்படுத்தல்  3:20

கர்த்தருடைய சத்தம் வல்லமையான சத்தம்.  அது காதேஷ் வனாந்தரத்தையே அதிரப்பண்ணக்கூடிய சத்தம்.  பெண்மான்களை ஈனச் செய்யக்கூடிய சத்தம்.  கர்த்தருடைய சத்தம் அமர்ந்த மெல்லிய சத்தமாயும் இருக்கிறது.  இந்த சத்தத்தையுடைய தேவன், உன் இருதயக் கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறார். மகனே, இருதயத்தைத் திறக்க மாட்டாயா? உனக்குள்ளே வாசம்பண்ணி உன்னை மேன்மைப் படுத்துவேன் என்று சொன்ன சத்தம் உன் காதுகளில் தொனிக்கவில்லையா? உனக்காக நான் பாடுபட்டேனே, உனக்காக என் ஜீவனைப் பலியாகக் கொடுத்தேனே, உனக்காக என் இரத்தத்தைச் சிந்தி வேதனையோடு மரித்தேன். மரித்தேன், ஆனாலும் உயிர்ப்பிக்கப்பட்டேன். சதாகாலமும் ஜீவிக்கிறேன் என்று சொல்கிற அன்பின் ஆண்டவராகிய கர்த்தரின் சத்தத்திற்கு செவிகொடுத்தால், உனக்குள்ளே வாசம் பண்ணி உன்னோடே போஜனம் பண்ணுவார். நீயும் அவரோடு போஜனம் பண்ணுவாய். வனாந்தரத்தில் கோபம் மூட்டின மக்களைப் போல் இராது, இன்று சத்தத்தைக் கேட்போம், இருதயத்தைத் திறப்போம். அவருடன் இருந்து என்றும் ஆசீர்வதிக்கப்படுவோமாக.

4. மோசேயோடு இருந்ததுபோல உன்னோடும் இருப்பார்

"நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை." யோசுவா 1:5

இங்கு தெளிவாக ஒரு காரியத்தை யோசுவாவுக்குச் சொல்கிறார். நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடும் இருப்பேன் என்கிறார். அருமையான தேவஜனமே, மோசேயானவன், தேவனுடைய சொற்படியெல்லாம் செய்தவன். அவன் பார்வோனுடைய சமுகத்திலே சென்று கர்த்தர் சொன்ன வார்த்தைகளையும் சொன்னதோடு, அந்தந்த வாதையையும் அவனது வார்த்தையினால் கட்டளையிட்டார். எகிப்து தேசத்து மக்களுக்கு மத்தியிலே அவன் மிகவும் பெரியவனாய் இருந்தான். அவனது வாழ்க்கையை ஆராயும்போது, 'அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு' எபி. 11:25ன் படி தேவ ஜனங்களோடு துன்பத்தை அநுபவிக்க தெரிந்து கொண்டவன். அவனது வாழ்க்கையை தேவன் அதிகமாய் விரும்புவதற்கு ஒரு காரணம், தன்னையே வெறுத்து, தேவனுடைய ஜனங்களோடு பாடு அநுபவிக்க ஆயத்தமான செயல்.

இன்று பதவி பட்டங்களை விரும்பி உண்மையற்ற விதங்களில் செயல்படுபவர்கள் ஏராளம் உண்டு. சண்டைகளுக்கு காரணமாக இச்சைகளுக்கு அடிமையாகி பலவித சண்டையிடுகிற மக்கள் ஏராளம் உண்டு. ஆனால் மோசே தன்னை வெறுத்தவன். அத்துடன் மோசே மிகுந்த சாந்த குணமுடையவன். ஆகவே தேவன் அவனோடிருந்தார் என்று திட்டமாய் அறிந்து கொள்ள முடிகிறது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, இன்று உன்னை அக்கினி ஜுவாலையாய் மாற்றி அவருக்காக உன்னைப் பயன்படுத்துவார்.         

5. கர்த்தர் தம்முடன் இருப்பதற்கு சிலரைத் தெரிந்து கொள்கிறார்.

"அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்," மாற்கு 3:14

இயேசு கிறிஸ்து எப்போதும் தம்மோடு இருக்கவேண்டும் என்று சிலரைத் தெரிந்து கொள்கிறார். அவர்களைத் தம் திட்டத்தின்படி போதிக்க, பிரசங்கிக்க, பிசாசுகளைத் துரத்த, குணமாக்க, அவர் ஜனமாய் மாற்ற, அவரோடு இருந்து ஜெபிக்கத் தெரிந்து கொண்டார். இன்று நம்முடைய அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் திட்டமாய் தெரிந்து கொண்டால், நாம் இடறாது ஊழியங்களைச் செய்ய முடியும். 'ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும் படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்து கொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.' 1கொரி. 1:27,28ன் படி பெரிய பலவான்களை அவர் தெரிந்துகொள்ளவில்லை. பலவீனர்களைத் தான் தெரிந்து கொண்டார். அதைப் போல ஞானிகளை வெட்கப்படுத்தும்படி பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார். இன்று அநேகர் தாங்கள் ஞானிகளாய் இருக்கிறோம் என்றாலும், கர்த்தருக்கென்று வாழ உழைக்க வந்திருக்கிறோம் என்று படித்த பட்டங்களை தங்கள் பேரோடு இணைந்து விடுகிறார்கள். அதைவிட முக்கியமான ஒரு படிப்பு B.A. (Born Again) ஆகும்.

ஒருமுறை சீப்புரு தீவிலே ஊழியம் செய்யும் போது ஆஸ்தரேலியா நாட்டைச் சார்ந்த மிஷனெரி இரவு வேளை சாப்பாட்டிற்காக அழைத்தார். சீக்கிரமாய் வரச் சொன்னார். ஆனால் சற்று தாமதமாகி விட்டது. ஆகவே அவர் உடனே சாப்பிடுவோம் என்று எங்களை டைனிங் டேபிள்க்கு அழைத்தார். அவர்கள் செய்திருந்த ஆகாரத்தை ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கக் கேட்டுக் கொண்டார்கள். ஜெபநேரத்தில் அவரின் ஸ்பைனல் காடில் 5-வது rib மற்றும் cartilage-ல் இருந்த வேதனை நீங்கவும், அது குணமடையவும் ஜெபித்தேன். இவ்விதமாய்ச் சொல்லி ஜெபித்து முடித்து, ஆகாரத்தையும் ஆசீர்வதித்து காத்திருந்தேன். அவர்களோ அழுது கொண்டிருந்தார்கள். எனக்குள் இருந்த வேதனை எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கண்ணீரோடு கேட்டார்கள். இயேசு கிறிஸ்து காதிலே சொன்னாரா என்று கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள். எனக்குத் தெரிவித்த விதத்தை அவர்களுக்குச் சொல்லி, இரவு 2 மணி வரை வேதத்தின் காரியங்களைக் கற்றுக் கொண்டார்கள். பல பட்டங்களைப் படித்து Ph.d படிப்பு படித்திருந்த அவர், தன் பட்டப்படிப்பு முடித்த கார்டுகளை எல்லாம் கிழித்துப் போட்டார். இவ்விதமான காரியத்தைக் கற்று ஊழியத்தைச் செய்ய விரும்புகிறேன் என்று கர்த்தருக்கென்று தன்னை அர்ப்பணித்தார்.

இன்னுமாக 'பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காக தெரிந்து கொண்டார்...' (சங். 4:5). பக்தி என்றால் என்ன? யாக். 1:27ன் படி பக்தி என்றால் பரிசுத்த வாழ்வும் அன்பின் செயலும் உடையவர்கள். அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை. ஆகவே பரிசுத்தமும் அன்பின் செயலை உடையவர்களைக் கர்த்தர் தமக்காத் தெரிந்து கொள்கிறார்.

II. அவருடன் இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் என்ன?

1. கனப்படுத்துவார்

"அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கன ப்படுத்துவேன்." சங்கீதம் 91:15

நானே ஆபத்தில் அவனோடிருந்து அவனைத் தப்புவித்து கனப்படுத்துவேன் என்கிறார். தப்புவிக்கிரத்தோடு மாத்திரமல்ல கனப்படுத்துகிற தேவனாய் இருக்கிறார். என்று கர்த்தரை நம்முடையவராய் ஏற்றுக்கொள்கிறோமோ அன்று அவருடைய பிள்ளையாக மாறுகிறோம். நீ என்னுடையவன் என்று உன்னைக் குறித்து சொந்தம் பாராட்டுகிறவராய் இருக்கிறார். நீ என் பார்வைக்கு அருமையானபடியால் கனம் பெற்றாய் என்று ஏசாயா 43:4ல் பார்க்கிறோம்.   

கர்த்தருக்கென்று நம்மை அர்ப்பணிப்பதோடு அவர் விரும்புகிற பரிசுத்தம் உடையவராய் நாம் மாற வேண்டும். எந்த மனிதன் தன்னைத் தூய்மையாக உள்ளும் புறம்பும் சுத்தமாக்கிக் கொள்கிறானோ, அவன் கர்த்தருக்குப் பிரியமான பிரயோஜனமான பாத்திரமாய் மாறுவதுடன், எந்த நற்கிரியைகளுக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பான்.

சுய விளம்பரங்களினாலே தங்களைக் கனத்துக்குரியவர்கள் என்று உலகத்தார் பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ராஜா ஒருவனை கனம் பண்ண விரும்பினால், அவனை எவ்விதமாய் கனம் பண்ண வேண்டும் என்று ஆமானிடத்தில் கேட்டபொழுது, ராஜா உடுத்திக்கொள்கிற ராஜ வஸ்திரமும் ராஜமுடியும் கொடுத்து அலங்கரித்து, ராஜா ஏறுகிற குதிரையின் மேல் ஏற்றி ஊரைச் சுற்றிவரவேண்டும் என்றான். அதன்படியே ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற மொர்தெகாய்க்கு செய்து, கனப்படுத்தினார்.

2) குறைகளைத் தீர்ப்பார்

"இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்கிறார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள்."

"அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்தி விசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார்; அவர்கள் கொண்டு போனார்கள்." யோவான் 2:7, 8

இயேசு கிறிஸ்துவை திருமண வீட்டார் அழைத்திருந்தார்கள். தாயார் மரியாளும் அழைக்கப்பட்டிருந்தார்கள், சீஷர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். திருமண வீட்டிலே திராட்சரசம் குறைவுபட்டது. இயேசு கிறிஸ்து தாயாரின் வேண்டுதலுக்குச் செவி கொடுக்கவில்லை. இதை அறிந்த தாயார் இயேசு கிறிஸ்து உங்களுக்கு என்ன சொல்கிறாரோ அதன்படி செய்யுங்கள் என்றாள். இயேசு கிறிஸ்து வேலையாட்களை 6 கற்சாடிகளையும் தண்ணீரால் நிரப்பச்சொன்னார். நிரப்பிய தண்ணீரை பந்தி விசாரிப்புக் காரரிடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார். அது ருசி மிக்க திராட்சரசமாய் இருந்தது. அதனால் குறைவு நீங்கினது மாத்திரமல்ல மணவாளனுக்கு புகழ்ச்சியும் வந்தது.

அருமையான சகோதரனே/சகோதரியே, பலவிதமான குறைகளினாலே கலங்கி இருக்கிறாயா? கலங்காதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி, அவரை உன் வாழ்க்கையில் அழைத்து அவர் ஆலோசனையின்படி செய்யும்போது, உன் குறைவு நீங்கி புகழ்ச்சி உண்டாகும். நீ ஞானத்தில் குறைவுபட்டிருப்பாயானால், 'உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்து கொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக்  கொடுக்கப்படும்' யாக். 1:5 ன்படி யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கக்கூடிய தேவன், உங்களுக்கு வேண்டிய ஞானத்தைக் கொடுத்து, கர்த்தருக்குரிய பாத்திரமாய் மாற்றுவார். ஞானக்குறைவு நீங்கி மகிழ்ந்து களிகூறுவீர்கள்.

3) கொந்தளிப்பை அமர்த்துவார்

"அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்து போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று." லூக்கா 8:24

இன்று உலக வாழ்க்கையிலே பலவிதமான கொந்தளிப்பின் காரியங்களைக் காண்கிறோம். அவைகளைக் கடந்து செல்ல வேண்டிய நிர்பந்த நிலை உருவாகிறது. சங்கீதம் 38:8ல் இருதயத்தின் கொந்தளிப்பைக் குறித்துப் பார்க்கிறோம். இருதய கொந்தளிப்பினால் புலம்பி, கலங்கி கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறோம். என்ன செய்வது? யார் நமக்கு உதவி செய்வார் என்ற பயம் மனஉளைச்சல் நிறைந்த வாழ்க்கை உருவாகுகிறது. அன்று சீஷர்கள் இயேசுவை நோக்கி, குற்றப்படுத்தி வார்த்தைகளைச் சொன்னார்கள். நாங்கள் மடிந்து போகிறோம் என்று கதறினார்கள். இயேசு கடல் கொந்தளிப்பை அமர்த்தினார்.

இதைப்போல எல்லா சூழ்நிலைகளும் சீராக்கி, இருதயத்தின் கொந்தளிப்பை அடங்கச் செய்கிற தேவன் ஜீவிக்கிறார். சங். 107:29ல் கொந்தளிப்பை அமர்த்துகிறபடியினால் அமைதல் உண்டானதினால், அதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். தாங்கள் நாடின துறைமுகத்திற்கு அவர்களைக் கொண்டு சேர்க்கிறார் என்று பார்க்கிறோம் சங். 46:6ல் ஜாதிகள் கொந்தளித்து எழும்புகிறதை பார்க்கிறோம். பலதரப்பட்ட ஜாதிகளின் கொந்தளிப்பை இன்றும் காண முடிகிறது. கர்த்தர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணி அதை அழித்துப் போடுகிறார். ஏசாயா 37:29ல் கர்த்தருக்கு விரோதமாய் கொந்தளித்து பேசினபடியால் கர்த்தருடைய தூதன் அனுப்பப்பட்டார். அசீரியரின் பாளையத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்ததால் அதிகாலையில் எழுந்திருக்கும்போது அவர்கள் செத்துக்கிடந்தார்கள். கொந்தளித்து வீரியம் பேசின சனகெரிப் நினிவேக்குச் சென்று அங்கே தங்கியிருந்தான். அவன் தன் தேவனை ஆராதிக்கச் சென்றபோது சொந்தக் குமாரர் மூலமாய் வெட்டப்பட்டான்.

கர்த்தரோடு நீ இருக்கும்போது எல்லாக் கொந்தளிப்பையும் அமரச் செய்து சந்தோஷத்தை உண்டாக்கி நாடின எல்லைக்கு கொண்டு செல்வார். 

4) கர்த்தர் உன்னோடு இருக்கும்போது தோல்வி ஜெயமாய் மாறும்

"அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத் தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்." லூக்கா 5:6

தோல்வி நிறைந்த நேரத்தில் இயேசு கிறிஸ்து கடந்து வந்தார். அவர் படகிலே ஏறினார். பிரசங்கித்தார். செய்தி முடித்தபின்பு பேதுருவைப் பார்த்து, உன் படகை ஆழத்திலே கொண்டுபோய் வலையை போடுங்கள் என்றார். இரா முழுவதும் முயற்சித்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனாலும் உன் வார்த்தையின்படி வலைப்போடுகிறோம் என்று போட்டபோது, அவனது தோல்வியை ஜெயமாய் மாற்றுகிறார். இன்று இயேசு கிறிஸ்து உன்னோடு இருப்பாரானால் ஏற்ற ஆலோசனைகளைக் கொடுத்து உன் தோல்வி மாறச் செய்வார். அதைச் செய்யும்போது உன் தோல்வி, அதனால் ஏற்படும் துக்கம், கசப்பு சகலமும் மாறும்.

இன்று இயேசு கிறிஸ்துவை உன்னோடு வைத்துக்கொள்ள அவரை அழைத்து, உன்னோடு வைத்துக்கொள்ள இடம் கொடு.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்துவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.