வயதானவர்களின் பெலவீனம் நீங்கி சமாதானம் பெற ஒரு ஜெபம்

அன்பின் தேவனே இந்த நல்ல நேரத்திற்காக நன்றி கூறுகிறேன். பலவிதமான இக்கட்டு நேரத்தில் என் ஜெபத்தைக் கேட்டு அதிசயமாய் காரியங்களைச் செய்தவரே, உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இன்று என் சரீரத்தில் உண்டாயிருக்கிற வேதனைகள் என் உள்ளத்தைப் பாதிக்கிறது. நான் யாருக்கும் பாரமாயிராதபடி வாழ அதிகமாக விரும்பி உம் சமுகத்தில் என்னைத் தாழ்த்தி வேண்டுகிறேன். எனது தலைசுற்றல், கால்களில் உள்ள பெலவீனம், என் சர்க்கரை நோயின் தன்மை இன்னும் என் சரீரத்தில் உள்ள அத்தனை பெலவீனங்களும் நீங்க எனக்கு உதவி செய்யும். அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள் என்று சொன்னவரே, எனக்கு இரங்கும். சிலநாட்களாக சரியாக தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறேன். அப்படி தூங்கினாலும் பல தீய சொப்பனங்கள் என்னைப் பயப்படுத்துகிறது. சில சமயம் எனக்குத் தெரியாத சம்பந்தமே இல்லாத செத்தவர்களின் உருவங்கள் என்னைப் பெலவீனப்படுத்துகிறது. இன்னும் என் வீட்டாரில் செத்தவர்கள் என்னைக் கூப்பிடுகிற காட்சிகள் எனக்கு மரணபயத்தை உண்டாக்குகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். என் பெலவீனத்தின் செயல்கள், என் பிள்ளைகளுக்கு கவலையையும் சில சமயம் கோபத்தையும் உண்டாக்கிவிடுகிறது. இதனால் இன்னும் கலங்குகிறேன். இத்துடன் அதிகமான மறதி எனக்குள் வந்துவிட்டது. காலையில் சாப்பிடவேண்டிய மாத்திரையை சாப்பிட்டேனா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. இந்த பெலவீனங்கள் சோர்வை உண்டாக்கி கவலையைப் பெருகச் செய்து விடுகிறது. கர்த்தாவே, எனக்கு இரங்கும். எனக்கு புதுப்பெலன் உண்டாக்கும். என் இருதயம் சரியாகச்செயல்பட உதவி செய்யும். எந்தக் காரியத்தையும் நான் செய்ய முடியாமல் படுத்தே கிடக்கிறேன். கர்த்தாவே, எனக்கு இரங்கும். இந்த முதிர் வயதினால் என் கண் பார்வையும் குறைவுபட்டுவிட்டது. இத்துடன் அடிக்கடி உண்டாகிற இருமல் சளியினால் என் காதும் சரியாக கேட்கமாட்டாமல் தவிக்கிறேன். கால்களில் உள்ள வலி வெளியவே போக முடியாது பண்ணுகிறது. இம்மட்டும் என்னை நடத்திவருகிற அன்பின் தேவனே, எனக்குப் பூரண சுகத்தையும் பெலத்தையும் கொடுத்து என்னை நடத்துவீராக. இந்த பெலவீனத்தினால் உண்டான மரணபயம் என்னை விட்டு நீங்கட்டும். நான் உம்முடைய அடியான்/ அடியாள். இன்றே என் பெலவீனம் நீங்கி பூரண சமாதானத்தை எனக்குத் தாரும். நீர் அப்படிச் செய்வீர் என்று உம்மைத் துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் ஜெபம் கேட்டருளும் பிதாவே. ஆமென்.