"...எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்;
             
நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்."

                                                                                                                             மத்தேயு 10:19

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு வெளிநாடு ஓன்றில் ஊழியர்களுக்கு மத்தியிலே நடைபெற்ற கூட்டத்தில் கர்த்தருடைய செய்தியைப் பகிர்ந்து கொள்ள கிருபை புரிந்தார். செய்தி முடிந்தவுடன், கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சில மிஷினரிகளும் இருந்தனர். எனது சாட்சியைக் கேட்டதுடன், நீங்கள் எப்படி பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறீர்கள், உங்களுக்கு யார் பணம் தருகிறார்கள் என்ற ஒரு கேள்வியை ஒரு அமெரிக்க மிஷினரி கேட்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கிருபையாய்த் தருகிறார் என்றேன்.  எங்களுக்கும் அவர் தான் தருகிறார் என்றார்கள். ஒரு இக்கட்டான நேரத்தில் இருக்கிறேன் என்று உணர்ந்து என் வழக்கப்படி என்ன பதில் சொல்லுவது என்று கர்த்தரிடம் என் உள்ளத்தில் வேண்டுதல் செய்ய ஆரம்பித்தேன். சற்று வேடிக்கையாக எனக்கு 'Bank of Heaven'ல் ஒரு அக்கவுண்ட் இருக்கிறது. அதன்மூலம் பணம் கிடைக்கிறது என்றேன்.  அப்படித்தான், ஆனால் American United Church எங்களுக்கு ஏஜென்டாக இருக்கிறார்கள் என்றார்கள். இல்லை நான் நேராக அந்த 'Bank of Heaven'ல் இருந்து பணம் எடுத்துக் கொள்கிறேன் என்றேன். அது எப்படி என்று அவர்கள் வினவின நேரத்தில், ஒரு தரிசனத்தை உள்ளத்தில் தந்தார். அது ஒரு நீரூற்று. உடனே அவர்களிடம் நீரூற்றில் எவ்விதமாய் தண்ணீர் வருகிறது என்று சொல்ல முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இல்லை என்று தலையை அசைத்து, மகிழ்ச்சியுடன் சென்று விட்டார்கள்.

அருமையான சகோதரனே, சகோதரியே, இன்று உங்கள் உள்ளத்தில் என்ன பதில் தருவது என்ற எண்ணம் தோன்றலாம். கலங்காது, கர்த்தரையே நோக்கிப் பாருங்கள், கூப்பிடுங்கள். அவர் உங்களை அதிசயமாய் நடத்துவார். பூரண திருப்தியடையத்தக்க பதிலைப் பெற கர்த்தருடைய ஆவியானவர் உதவிசெய்வார். நாம் கலங்கவோ குழம்பவோ வேண்டியதில்லை.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

சகோ. C. எபனேசர் பால்