"உன் வேதனை நீங்கி சுகமாயிரு..."

                                                                                                                                               மாற்கு 5:34

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன்.

இன்று பலருடைய வாழ்க்கையில் வேதனைகள் நிறைந்திருக்கிறது. "என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப் படுகிறது" என்று எரேமியா 4:19-லே பார்க்கிறோம். யோபு 7:11-ல் என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின்  கசப்பினால் அங்கலாய்ப்பேன் என்று சொல்வதைப் பார்க்கிறோம். 12 ஆண்டுகளாய் தன் உதிரப்போக்கினால் வருத்தத்தையும் வேதனையும் அடைந்து, கலங்கி கண்ணீர் சிந்தின மகள், அற்புத சுகத்தைப் பெற்றுக் கொண்ட சாட்சியை வேதத்தில் பார்க்கிறோம். மனிதரால் கூடாதகாரியம் தேவனால் கூடும் என்று வேதனை நீங்கி சுகமடைந்த சகோதரியின் சாட்சியின் மூலம் நாம் அறிய முடிகிறது. இன்று அநேகருடைய வாழ்க்கையிலே வேதனைகள் நிறையும் போது, ஏன் நான் வாழ வேண்டும் என்று வேதனை தாங்கமுடியாதபடி தற்கொலை செய்து கொள்கிறார்கள். இன்னும் சிலர் தவறான முடிவை எடுத்து தங்களின் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

ஏன் வேதனை வருகிறது?

1. கீழ்ப்படியாமையினால்.

"அவர் ஸ்திரியை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே  பிள்ளைபெறுவாய்..."ஆதியாகமம் 3:16

மனுக்குலத்திற்கு வேதனையானது சாபமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்த ஏவாளின் வாழ்க்கை இந்த வேதனையின் காரியத்திற்கு ஆரம்பமானது. தோட்டத்தின் நடுவில் இருந்த மரத்தின் அருகே சென்றாள். நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் வெறுக்கிற தவறான இடங்களுக்கு நாம் செல்வோமென்றால், நாம் பாவம் செய்து சாபத்திற்கு ஆளாகி விடுவோம். அத்துடன் ஏவாள் சாத்தானின் வார்தையைக் கேட்டவுடன், தன் உள்ளத்தில் தவறான எண்ணமும் தீர்மானமும் செய்தாள். ஒரு போதும் சாப்பிடாத அந்தப் பழத்தைப் பார்த்து புசிப்புக்கு நல்லதும் பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமாயிருக்கிறது என்று கண்டாள். அத்துடன் அந்தக் கனியைப் பறித்து புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். இதனால் அவர்கள் தேவ மகிமையின் மேன்மையை இழந்தார்கள். ஒளியை வஸ்திரமாய்த் தரித்திருந்த தேவனின் சாயலை இழந்து, இருளின் மக்களாய் மாறினார்கள். நிர்வாணிகள் என்று உணரக்கூடிய நிலை  உண்டானது. சாத்தானின் தந்திரமான வலைகளிலே நாம் என்றும் எப்போதும் சிக்கி விடாமலிருக்க கவனமாய் தெளிந்த புத்தியோடு இருக்கவேண்டும். இதன் விளைவாக கர்த்தரின் சத்தத்தைக் கேட்டும், அவருடைய சமுகத்திற்குச் செல்லமுடியாமல் ஒளிந்து கொள்ளவேண்டிய நிர்பந்தம் வந்தது. இந்தக் கீழ்ப்படியாமையினால் பூமியில் சாபமும், மரணமும், வேதனையும் உண்டானது. தேவனோடு உள்ள அந்த நல்ல உறவை இழந்து, பாடுபடவும்  நெற்றி  வியர்வை சிந்தி உழைக்க வேண்டிய போராட்டமான வாழ்க்கை உண்டானது. தேவனுடைய பிரசன்னத்தில் வாழ்ந்த ஏவாளும் பாவச் செயலினால் தேவ உறவை இழந்து, சாபத்தைப் பெற்றாள். அவர்கள் தேவ சமுகத்தை விட்டு துரத்தப்பட்டார்கள். மண்ணான மனுஷனுக்கு தான் வெட்டியெடுக்கப்பட்ட மண்ணை பண்படுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவானது.

இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே, உன் வாழ்வில் ஒரு போதும் தேவனுடைய வார்த்தையை அலட்சியப்படுத்தி, அசட்டை செய்து விடாதே. அவருடைய வார்த்தைகள் மிகுதியான ஆற்றல் உடையது. அவருடைய வார்த்தைகள் அக்கினியைப் போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறது. இந்த வார்த்தைகள் நம்மைக் குணமாக்கி அழிவின் குழிக்கு விலக்கும் ஆற்றல் உடையது. கர்த்தரின் வார்த்தைகள், ஆலோசனையின் வார்த்தைகளாய், ஆறுதலின் வார்த்தைகளாய், நாம் ஆசீர்வாதம் பெறுவதற்கு வழியாகவும் இருக்கிறது. ஆகவே நாம் ஏவாளைப்  போல அசட்டை செய்யாது, மிகக் கவனமாய் இருந்து ஆசீர்வதிக்கப்படுவோமாக.

2. பயத்தினால் வேதனை.

"அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது..." 1யோவான் 4:18

இன்று பலவிதமான பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களைப்  பார்க்கிறோம். மரண  பயத்தினாலும் பலவிதமான சமாதானமற்ற சூழ்நிலைகளின் நிமித்தமாயும் பொருளாதார பிரச்சனையினாலும் குடும்ப பிரிவினையின் செயலினாலும் வேதனையோடு வாழ்கிற மக்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தைக் குறித்து பயப்படுவார்கள்.

ஒரு  முறை ஒரு சகோதரியின் வீட்டிலே ஒரு நீளமான பாம்பு வந்தது. அந்தச் சகோதரியோ அந்தப் பாம்பைக் கண்ட மாத்திரத்தில் மூர்ச்சித்து மயங்கி கீழே விழுந்து விட்டார்கள். அந்த வீட்டில் இருந்த ஆண் மக்கள், நீளமான பாம்பாயிருந்தாலும் அதை அடித்து கொன்று விட்டார்கள். பயந்து மயங்கி விழுந்த மகளின் சரீரத்தின் தலைப் பகுதியில் தோன்றிய பெலவீனத்தால் அறுவை சிகிச்சைக்கு உட்படவேண்டியதாயிற்று. பயப்பமாட்டோம் என்று பாடுகிற நாம், சின்ன காரியங்களிலும் பயப்படுகிறோம். பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்று திரும்பும்வரை பயப்படுகிற பெற்றோர் உண்டு. ஆகவே இந்த பயமானது நமது விசுவாசத்தை முற்றிலும் ஒழியப்பண்ணுகிறதாய் இருக்கிறது. பயப்படும் போது கர்த்தருக்குள் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய முடியாமல் போகிறது.

3. அடிமைத்தனத்தினால் வேதனை.

"...ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற  கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன்." யாத்திராகமம் 3:7

அடிமைத்தனம் என்றாலே உன் சுதந்தரத்தை இழந்த ஒரு வாழ்க்கை. மனதின் விருப்பங்களைச்  செய்ய இயலாத நிலைமை. அடிமைப் படுத்தினவர்களின் சொல்லைக்  கேட்டு சகலவற்றையும் செய்ய வேண்டிய நிர்ப்பந்த வாழ்க்கை. தாகம் தீர்க்கமுடியாத வேதனையான போராட்டமான வாழ்க்கை.

இன்று அநேகரின் வாழ்வில் சில பழக்கங்களுக்கு அடிமையாயிருப் பதைப்  பார்க்கிறோம். அடிமையாக்கப்பட்ட பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாதபடி தவிக்கும் நிலைகளைப்  பார்க்கிறோம். புகைப்பிடித்தல், மதுபானம் அருந்துதல், சினிமா காட்சிகளைப் பார்ப்பது, சினிமா பாடல்களைப்  பாடுவது, பாரம்பரிய பழக்கவழக்கங்கள், இப்படிப்பட்ட அநேகக் காரியங்களுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். கர்த்தரின் தாலந்துகளை கர்த்தரின் ஊழியத்திற்கு, கர்த்தரின் நாமத்திற்கு பயன்படுத்தாது , அறிவில்லாமையால் சங்காரம் ஆகிறார்கள்.

இன்றைக்கு இவ்விதமான தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாது நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். சிலர் தங்கள் வாழ்க்கையில் பார்க்கக்கூடாத ஆபாசக்காட்சிகளை தொலைக் காட்சியிலும், கம்ப்யூட்டரிலும் பார்த்து, தங்களின் பரிசுத்த வாழ்க்கையை நாசப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் சரீரங்களும் தீய காரியங்களுக்கு ஈடுபடுத்தப்பட்டு அழிவை அடைகிறார்கள்.

அருமையான தேவப்பிள்ளையே, நீ கண்விழிப்பாய் இருந்து கவனமாய் உன் ஆவி ஆத்துமா சரீரத்தைக் காத்துக்கொள்.

4. பிசாசினால் வேதனை உண்டாகிறது.

"...ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள்  என்று சொல்லி கூப்பிட்டாள்." மத்தேயு 15:22

உலக வாழ்க்கையில் நமக்கு விரோதமாக எப்பொழுதும் எங்கும் போராடுகிற தீயசக்தியை நாம் பார்க்க முடிகிறது. இந்தத் தீய சக்தி ஆதியிலிருந்து மனுக்குலத்திற்கு விரோதமாக, தந்திரமாக செயல்படுகிற தாய் இருக்கிறது. உலகம் அனைத்தையும் மோசம் போக்குகிற பிசாசு என்றும், சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பமும் செயல்படுவதைப் பார்க்கிறோம். இவைகள் கொடிய நோய்களையும் பெலவீனங்களையும், பல தவறான காரியங்களைச்  செய்ய தூண்டுகிறதாயும் இருக்கிறது. இவைகளின் தாக்குதலினால் மனிதன் சமாதானம், சந்தோஷம்  இழந்து கசந்து போன ஒரு வாழ்க்கை வாழ்கிறான்.

எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடி சுற்றித் திரிகிறான். ஆகவே நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருந்து விழித்திருக்க வேண்டும். இவ்விதமான தாக்குதலை நாம் எதிர்த்து மேற்கொள்ள வேண்டுமானால் வேதவாக்கியங்க ளாகிய ஆவியின் பட்டயம் நமக்குள் நிறைவாக இருக்க வேண்டும். சந்துருவின் தந்திரமான ஆலோசனைகளை, வார்த்தைகளைக் கேட்கும் போது ஜீவவசனமாகிய ஆவியின் பட்டயத்தைக் கொண்டு அதைச் சரி பார்த்து வெறுக்க வேண்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வேத வாக்கியங்களைக் கொண்டு பிசாசின் தந்திரங்களையும் அவனையும் மேற்கொண்டார். இன்றைக்கு நாம் தேவனுடைய வார்த்தையின்படி பரிசுத்தமும், தேவபயமும், கர்த்தருக்குப் பிரியமான செயல்களும் நிறைந்து, கர்த்தரின் பரிபூரண சுகவாழ்வைப் பெற்றுக்கொள்வோம்.

5. தேவனை மறப்பதால் தோல்வியும் வேதனையும் உண்டாகிறது.

"உன் பெலனாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,

பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும், கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்." ஏசாயா 17:10,11

இன்று அநேகர் நம்மை உண்டாக்கின கர்த்தரை மறந்து பலவிதமான காரியங்களைச் செய்து, தோல்வியும் வேதனையும் அடைந்து, ஏன் எனக்குத் தோல்வி, ஏன் என் கையின் காரியங்களில் ஆசீர்வாதம் இல்லை என்று கலங்கி புலம்புவதைப் பார்க்கிறோம். கர்த்தரை அறியாத பேதுரு, தன் ஞானத்தினாலும், பழக்கத்தினாலும் இரா முழுவதும் கடலிலே மீன் பிடிக்க முற்பட்டபோது ஒன்றும் அகப்படவில்லை. ஆலோசனைக் கர்த்தர், பேதுருவின் படகில் ஏறி அவன் வாழ்வில் மாற்றம் உண்டாக அற்புத ஆலோசனைத் தந்தார். அதன்படி செய்தபோது, அமோக வெற்றியை அடைந்தான். வலை கிழியத்தக்கதாக படகும் நிறைந்து, அழைக்கப்பட்ட தன்  நண்பனின் படகும் நிரப்பப்பட்டதைப் பார்க்கிறோம்.

இந்த பேதுரு உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் காரியாக்களை அறியாது, இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்து பின்மாற்றம் அடைந்தவனாக மீண்டும் மீன்பிடிக்கச் சென்றான். அவனுடன் மற்ற சீஷர்களும் பின் சென்றார்கள். ஆனால் அந்த இராத்திரியில் அவர்களால் ஒன்றும் பிடிக்க முடியவில்லை. பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும் கண்ட சீஷர்கள், அவருடைய வார்த்தையை மறந்து, பின்மாற்றம் அடைந்த அவர்கள் மூன்றாம் நாளில் தோல்வியும் துக்கமும் அடைந்தார்கள்.

அருமையான சகோதரனே/ சகோதரியே, உன் வாழ்க்கை வெற்றியாய் நிறைந்திருக்கவேண்டுமென்றால், உன் பெலனாகிய, கன்மலையாகிய கர்த்தரை மறவாது, என்றும், எப்பொழும், உன் முன் வைத்துக் கொள். அவரே உனக்கு ஜெயம் தருகிறவர். அவரே உன் காரியங்களை வாய்க்கச் செய்து வெற்றி சிறக்கச் செய்வார். எந்த வேதனையும் காணப்படாது நல்வாழ்வைப் பெறுவாய்.

6. பண ஆசையினால் வேதனை.

"பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தை விட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்." 1 தீமோத்தேயு 6:10

இன்று பண ஆசையினால் பலர் தங்கள் வாழ்க்கையிலே தவறான தீதான காரியங்களைத் துரிதமாய் செய்வதைப் பார்க்கிறோம். பண ஆசையின் நிமித்தமாய், திருடுவது, கொலைசெய்வது, மற்றவர் உடைமைகளைத் தந்திரமாய் பறிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சில வியாபாரிகள் தாங்கள் விற்கிற பருப்பு, அரிசி போன்ற காரியங்களில் கலப்படமாய் கற்களையும், மணல் கற்களையும் சேர்த்து விற்பதைப் பார்க்கிறோம். மக்களுக்கு கெடுதி உண்டாகும் என்று அவர்கள் நினைப்பதில்லை. இன்றும் சிலர் தங்கள் செல்வத்தைப் பெருக்குவதற்காக, அதிக வட்டிக்குக் கொடுத்து ஏழைகளை ஒடுக்குகிறதைப் பார்க்கிறோம்.

ஒருமுறை பிள்ளையில்லாத ஒரு சகோதரன் தன் தாயின் மரணத்தின் போது, தன் இரண்டு சகோதரிகளிடத்திலும் ஈமச்சடங்குகளைச் செய்வதற்கு தேவை என்று கையெழுத்தை வாங்கி சொத்துக்கள் அனைத்தும் அவரே எடுத்துக் கொண்டார். இப்படிப்பட்ட பாசமில்லாத செயல்கள் ஏன் நடைபெறுகிறதென்றால் அவர்களுக்குள் இருக்கிற பண ஆசையின் நிமித்தமே.

வேதத்தில் சாபத்தீடான எரிகோவின் கொள்ளைப் பொருளை, பண ஆசை, பொருளாசையினால், ஆகான் என்பவன் எடுத்து தன் கூடாரத்தின் மத்தியில் ஒளித்து வைத்திருந்தான். அதன் விளைவு இஸ்ரவேல் ஜனங்களுக்கு தோல்வியைக் கொண்டுவந்தது. அவன் கண்டு பிடிக்கப்பட்ட போது, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆகோர் பள்ளத்தாக்கில் கொண்டு வரப்பட்டு, அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் கல்லெறிந்து கொன்று சுட்டெரித்தார்கள்.

அன்பின் தேவப்பிள்ளையே, பண ஆசை வேதனையையும், சாபத்தையும் உண்டாக்குகிறதாய் இருக்கிறது. இன்று இதை வெறுத்து கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கை வாழ அர்ப்பணிப்போமாக.

7. பாதாளத்தில் வேதனை.

"பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது..." லூக்கா 16:23

ஐசுவரியவான் பூமியில் வாழ்ந்திருக்கும்போது ஏழைகளை நினைப்பதற்கும் எளியவர்களைப் பராமரிப்பதற்கும் எந்த எண்ணமும் சிந்தையும் இராது, தன் எல்லா காரியங்களையும் தன்னயத்தோடு நடந்து அனுபவித்து வந்தான். இயேசு கிறிஸ்துவிடத்தில் நித்திய ஜீவனை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட ஐசுவரியவானுக்கு, நிறைந்த செல்வம் உடையவனுக்கு, உனக்கு   உண்டானவற்றை விற்று தரித்திரருக்குக் கொடு என்று சொன்ன ஆலோசனையை நாம் அறிவோம். அவ்வாறே ஐசுவரியவானான இவன், ஏழைகளை நினைப்பதற்கும், எளியவர்களைப் போஷிப்பதற்கும் மனதில்லாமல் நடந்தபடியால் நித்திய ஆக்கினையை  அடைந்தான். இந்தப் பாதாளமானது அக்கினியினால் நிறைந்த ஒரு இடம். பிசாசுக்கும்  அவன் தூதர்களுக்கும் ஆயத்தமாக்கப்பட்ட நித்திய அக்கினியை இங்கு காண முடிகிறது. இப்படிப்பட்ட வாழ்வினை நாம் அடையாதபடி இந்த பூமியிலேயே அன்பினால், பண்பினால் நிறைந்து மற்றவர்களையும் நேசிக்கும் உள்ளத்தோடு வாழ்வோமாக.

II. சுகமாயிரு என்ற வாக்கு நிறைவேற நாம் என்ன செய்ய வேண்டும் ?

1. கர்த்தர் துஷ்ட மிருகங்களை அகற்றும் போது

"நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப் பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரை பண்ணுவார்கள்." எசே. 34:25

துஷ்ட மிருகங்கள் மனிதருடைய வாழ்க்கையைக் கெடுக்கக் கூடியதாய், எதிர்க்கக்கூடியதாய், சமாதானத்தைக் கெடுக்கக் கூடியதாய் இருக்கிறது. 1 கொரி. 15:32 - ல் நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேன் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். தீத்து 1:12ல் கிரேத்தா தீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள் என சொல்லி யிருப்பதைப் பார்க்கிறோம்.  '...கர்த்தர் மனுஷரையும், மிருகங்களையும் நாசம் பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் 4 கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது...' என்று எசேக். 14:21ல் சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். அந்தத் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும் என்று எசேக். 14:15ல் பார்க்கிறோம். உன்னை பிள்ளையில்லாமல் போகப் பண்ணும் துஷ்ட மிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன் என்றும் (எசேக். 5:17), லேவி. 26:22ல் உங்களுக்குள்ளே வெளியின் துஷ்ட மிருகங்களை வரவிடுவேன். அவைகள் உங்களைப் பிள்ளையற்றவர்களாக்கி, உங்கள் மிருக ஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்து போகப்பண்ணும் என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சங். 22ல் தாவீது பலவிதமான மிருகங்களைச் சொல்வதைப் பார்க்கிறோம். அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது, பலத்த எருதுகள் வளைந்து கொண்டது என்றும், பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல் என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள் என்றும், இதன் விளைவாக என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டது என்று தாவீது கலங்குகிறதைப் பார்க்கிறோம்.

இந்த துஷ்ட மிருகங்களின் தன்மை என்னவென்றால், நமக்கு விரோதமாய் எழும்புகிற தீய சக்திகளைக் குறிக்கிறதாய் இருக்கிறது.                   1 பேதுரு 5:8ல் உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற  சிங்கம் போல் எவனை விழுங்கலாமோவென்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட ஒவ்வொரு மிருகங்களின் தன்மையும் பிசாசின் தன்மையாக இருந்து நமக்கு எதிரிடையாக இருக்கிறது. நாய்கள் என்று சொல்லும்போது, நமக்கு விரோதமாய் செய்யப்பட்ட சூனியங்களைக் குறிக்கிறது. ஆகவே தான் தாவீது சங். 22:20ல் நாய்களின் துஷ்டத்தனத்திற்குத் தப்புவியும் என்று கூறுகிறார். மேலும் பிலி. 3:2ல் நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஒருமுறை ஒரே மகளை உடைய ஒரு குடும்பத்தில் ஒரு வேதனையான நிகழ்ச்சி நடந்தது. உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அந்த மகள், மாடு என்னை முட்டுவது போல் சொப்பனம் கண்டேன் என்று பலமுறை தன் தாயிடம் கூறினாள். அந்தத் தாயோ அதின் அர்த்தங்களை அறியாதிருந்தாள். ஒரு நாளிலே அந்த மகள் வீட்டில் குளிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, தற்கொலை செய்து கொண்டாள். மாட்டின் ரூபத்தில் பிசாசின் தாக்குதல் ஏற்பட்டதை அறியாதபடியினால் அந்தக் குடும்பத்தினர் பிள்ளையற்றவர்களாக மாறினார்கள். என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள் என்று ஓசியா 4:6ன் படி அநேகர் தங்கள் ஜீவனை இழந்து நித்திய ஆக்கினை அடைகிறார்கள்.

அன்பின் தேவப்பிள்ளையே, நம்முடைய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, துஷ்டமிருகம் ரூபத்தில் வருகிற ஆவிகளை அகற்றும்போது, நாம் சுகமாய் தங்கி தாபரிக்க முடியும்.

2. விசுவாசத்தினால் சுகமுள்ள வாழ்வைப் பெறுகிறோம்.

"அவர் அவளைப்பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி சுகமாயிரு என்றார்." மாற்கு 5:34

இயேசு கிறிஸ்து இந்த வார்த்தைகளை 12 ஆண்டுகளாக பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீயைப் பார்த்துக் கூறினார். இந்தச் சகோதரியோ, தனக்குண்டான எல்லாவற்றையும் செலவழித்தும் சற்றும் குணமடையாத ஒரு சகோதரி. இந்நிலையில் இயேசு கிறிஸ்துவைக் குறித்து கேள்விப்பட்டாள். கேள்வியானது விசுவாசத்தை வர்த்திக்கச்செய்தது. விசுவாசம் கேள்வியினாலே வரும் என்ற வார்த்தையின்படி கேள்விப்பட்ட இவளுடைய உள்ளத்தில் விசுவாசம் பெருகிற்று. ஆகவே இயேசு கிறிஸ்துவின் வஸ்திரத்தைத் தொட்டால் நான் சுகமாவேன் என்று நம்பிக்கையின் நிச்சயத்தோடு தன் உள்ளத்தில் எண்ணிய தீர்மானத்தை நிறைவேற்றினாள். உடனே அவள் அற்புத சுகம் பெற்றாள். இயேசு கிறிஸ்துவோ தன்னிடம் இருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்து யார் என்னைத் தொட்டது என்று கேட்டார். அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, இயேசுவின் பாதத்தில் விழுந்து உண்மையையெல்லாம் அவரிடம் கூறினாள். அப்பொழுது இயேசு கிறிஸ்து, வேதனை நீங்கி சுகமாயிரு என்று கூறினார். விசுவாசத்தோடு இயேசு கிறிஸ்துவிடம் வந்து அற்புத சுகம் பெற்று சுகமுள்ள வாழ்வைப் பெற்றாள்.

3. பெருமூச்சுடன் ஜெபிக்கும் மக்களின் வாழ்வில் சுகம் உண்டு.

"ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்." சங்கீதம் 12:5

பெருமூச்சோடு ஜெபிக்கிற ஜெபம் மிகவும் அதிகமாக கேட்கப்படும். அடிமைத்தனத்தில் வேதனை அடைந்து கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெருமூச்சுடன் வேண்டின காரியங்களைத் தேவன் கேட்டார். தாம் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார் என்று யாத். 2:24ல் பார்க்கிறோம். யாத். 6:5ல் இஸ்ரவேலின் பெருமூச்சையும் நான் கேட்டேன் என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியது இன்னதென்று அறியாதிருக்கிறபடியால், ஆவியானவர் தாமே நமக்காக வாக்குக்கடங்காத பெருமூச்சுடன் வேண்டுதல் செய்கிறார் என்று ரோமர் 8:28ல் பார்க்கிறோம். பெருமூச்சு என்பது ஜெபத்தின் ஒரு வகையாகும். இவ்விதமாய் ஜெபிக்கிற மக்களுக்கு, அவர்களின் இக்கட்டு, இன்னல் மற்றும் சத்துருவின் போராட்டத்தின்போது, நமக்காக அவர் யுத்தம் பண்ணி நாம் சுகமாயிருக்க உதவி செய்கிறவராயிருக்கிறார்.

4. தமது ஊழியக்காரரின் சுகத்தை விரும்புகிற கர்த்தர்.

"என் நீதி விளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரத்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்லக்கடவார்கள்." சங்கீதம் 35:27

நாம் கர்த்தருக்காக உழைக்கும்போது, அவருடைய காரியங்களைச் செய்யும்போது, அவருக்காக தொண்டு செய்கிற மக்களாக இருக்கிறோம். இவ்விதமான காரியத்தை நாம் செய்யும்போது அவர் நம்மைத் தமது ஊழியக்காரன் என்று சொல்லுகிறார். தமது வேலைக்காரரைக் குறித்து கரிசனையுடைய நூற்றுக்கு அதிபதியைப் பார்க்கிலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை நேசிக்கிறவர். கர்த்தருடைய நாமத்தினாலே கட்டுண்ட வர்களின் கட்டுகளை அவிழ்க்கவும், நெருக்கப்பட்டவர்கள் யாவரையும் விடுவிக்கவும், பசியுள்ளவனுக்கு ஆகாரத்தைக் கொடுக்கவும், துரத்துண்டவர் களை வீட்டிலே சேர்த்துக் கொள்கிற நற்பண்புகளும், வஸ்திரம் இல்லாதவனுக்கு வஸ்திரம் கொடுப்பதும், மாம்சமானவனுக்கு ஒளிக்காமல் இருப்பதும் கர்த்தருக்கு ஏற்ற உகந்த உபவாசமாயிருக்கிறது. இப்படிப்பட்ட தேவ ஊழியர்களிடத்திலே உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் என்று ஏசாயா 58:8ன் படி துளிர்த்து ஆசீர்வதிக்கப்படுவதைக் காணலாம்.

உன் சுகவாழ்வை விரும்புகிறவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவர் தமது வார்த்தையின்படி நமக்குள் சுகவாழ்வைத்  தந்து, நம்மை ஆசீர்வதிக்கிறார்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

கிறிஸ்து இயேசுவின் பணியில்,

சகோ. C. எபனேசர் பால்.