"...கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது."

                                                                                                     சங்கீதம் 34:10

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்து  கூறுகிறேன்.

விசுவாச ஊழியத்தைச்  செய்து கொண்டிருக்கிற எங்களுக்கு ஒருமுறை அதிகமான பணநெருக்கடி ஏற்பட்டது. என்ன செய்வது என்று உள்ளத்தில் அதைக்குறித்து எண்ணினேன். இந்த வாரத்தில்  ஒரு லட்ச ரூபாய்  பல காரியங்களுக்கு நான்  தர வேண்டியதிருந்தது. என்ன  அப்பா எங்களுக்கு விசுவாசத்தை அதிகமாக போதித்து நடத்தி காட்டிய உங்களுக்கு ஏன் கவலை, விசுவாசக்குறைவு என்று மகன் கூறினான். நான்  கூறி விட்டு ஒரு ஊழியத்திற்குச் சென்று விட்டேன். இரண்டு தினம் கழித்து, ஒரு குடும்பத்தைச் சார்ந்த மகன் ஒருவர்,தங்களின் மரித்துப் போன தகப்பனாரின் சம்பளபாக்கித் தொகையும், மற்ற பணமும் வந்தபடியால், அந்த ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு வந்து என் மகனிடம் கொடுத்தார்கள். மரித்துப்போன என் தகப்பனார் 'டைரியில்' தான்  உங்களுக்குத் திருப்பித்தர வேண்டிய தொகையைக் குறிப்பிட்டு இருந்தபடியால் அந்தப் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தேன் என்றார்கள். தேவைகள் சந்திக்கப்பட்டது.

அன்பின் சகோதரனே, சகோதரியே, இன்று வாழ்வில் பல குறைவுகளினால் கலங்கியிருக்கிறீர்களா? கலங்க வேண்டாம். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று ஜீவிக்கிறார். அவர் இன்றே உங்கள் தேவைகளைச்  சந்திப்பார் . அவரைத் தேடுகிற மக்களுக்கு ஒரு நன்மையுங் குறைவுபடாது என்ற வாக்கின்படி அதிசயமாய் நம் தேவைகளைச் சந்திப்பார். 'கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடி வருவார்கள்.' என்ற எரேமியா 31:12ன் படி அவரைத் தேடி அவர் சமுகத்தை நாடி வரும் பொது நிறைவாய் நம்மை ஆசீர்வதிப்பார். 'தேவன் அவருடனே கூட இருந்தபடியால் அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும், சுற்றித் திரிந்தார்.' என்ற அப்போஸ்தலர் 10:38ன் படி உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரத்தில் ஏற்பட்ட குறைவுகளை நீக்கி, சுக வாழ்வைப் பெருகச் செய்வார்.

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

சகோ. C. எபனேசர் பால்.