"...தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்…"

                                                                                                                                          மத்தேயு 7:7

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

     கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே உங்களை வாழ்த்துகிறேன்.

ஒரு வாலிப சகோதரன் தன் கல்லூரியின் பாடவேளை முடிந்தபின்பு மாலையில் கல்லூரி மைதானத்தில் விளையாடிவிட்டு வீடு திரும்பினான். குளிக்கும் வேளையில் தான் அணிந்திருந்த செயினானது தன கழுத்தில் இல்லை, எங்கோ விழுந்து விட்டது என்று அறிந்தான். அப்பொழுது இருட்டிவிட்டது.  உடனே தன் கல்லூரிக்கு திரும்பிச் சென்றான். புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியானதால் ஆள் நடமாட்டம் அந்த பகுதியில் அதிகம் இல்லை. வாட்ச்மேன் மற்றும் ஒரு சிலர் தான் ஆங்காங்கே இருந்தார்கள். வாட்ச்மேனிடம் தான் மாலையில் கால் பந்தாட்டம் விளையாடும்போது தன் செயின் மைதானத்தில் விழுந்து விட்டது, அதை நான் தேடப் போகிறேன் என்றான். அவரும் உள்ளே செல்வதற்கு அனுமதி கொடுத்தார். தன் கையில் டார்ச் லைட்டை வீட்டிலிருந்து எடுத்துச் சென்றிருந்தான். அந்த மைதானத்தின் ஒரு பக்கத்திலிருந்து ஆரம்பித்து அங்குலம் அங்குலமாக டார்ச் லைட் அடித்து தேடிக்கொண்டே வந்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலே அந்த செயின் அறுந்து விழுந்து கிடந்தது. அவனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவனுக்கு ஒருவர் பரிசாக கொடுத்திருந்த அந்தச்செயினைக் கண்டு பிடித்து மிகுந்த மகிச்ழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.  

அருமையான சகோதரனே/சகோதரியே, இந்த மகனைப் போலவே உன் வாழ்க்கையில் எதையாவது ஒன்றை இழந்து நீ துக்கத்தோடு காணப்படலாம். இவ்வளவு நாளும் நான் அனுபவித்த சந்தோத்தை, கர்த்தர் இலவசமாகக் கொடுத்த சமாதானத்தை நீ இழந்திருக்கிறாயா? ஒருவேளை உன் குடும்பம்பத்தின் ஐக்கியத்தை இழந்திருக்கிறாயா? எதை என்ன காரணத்தினிமித்தம் இழந்திருந்தாலும், கர்த்தரால் அதை மீண்டுமாக முழுமையாக பெற்றுத்தரமுடியும். நீ எந்த இடத்திலே இழந்தாய், எதினிமித்தம் அதை இழந்தாய் என்பதைக் கண்டுகொள்ள கர்த்தர் உனக்கு உதவி செய்வார். அதை மீண்டுமாக பெற்றுக்கொள்ள, உன் நிலைகளைச்  சரிபடுத்திக்கொள்ள கர்த்தர் வழி திறப்பார். இன்று முதல் கர்த்தரை நித்தமும் முழுமனதோடு தேட இடம் கொடு. நீ மிகுந்த ஆவலோடு, முழுமனதோடு கர்த்தரைத் தேடும்போது, இழந்து போனதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு நலமாய் வாழ இயலும். சோர்ந்து போகாமல், ஐயோ! இழந்துவிட்டேனே என்று எண்ணாமல் தேவ சமுகத்திலே முழுமனதோடு தேடினால், கண்டு களிகூறுவாய். அந்த வாலிப சகோதரனைப்போல நீயும் இழந்ததைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைவாய். கர்த்தர் நமக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிற நன்மையான ஈவுகளை இழந்தது விடாதபடி ஜாக்கிரதையாயிருப்போம். கர்த்தரைத் தேடுவதில் குறைவுபடாதிருப்போம்.

                                                                                                                                                     கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக

                                                                                                                                                                                                                                                                                               சகோ. C. எபனேசர் பால்.