இந்த மாத செய்தி

                                                                        "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து,

                                    கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்."

                                                                                                                                                                                  எரேமியா 17:7

                                                                                                                                                                                                                                       

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,

இன்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறேன்.

மனிதன் பலவிதமான காரியங்களில் நம்பிக்கை உடையவனாக இருக்கிறான். அவனால் உருவாக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் நம்பிக்கை உடையவனாய் இருக்கிறான். எனக்கு இவ்வளவு நிலம் இருக்கிறது, வீடுகள் இருக்கிறது, இத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள், எனக்கு இவ்விதமான லாபம் தருகிற தொழில் இருக்கிறது என்று அவைகளை நம்பி, அவைகளையே சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். சிலர் தாங்கள் தெரிந்து கொண்ட தெய்வத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்களாக பூஜைகளையும், சடங்காச்சாரங்களையும் செய்து வருகிறார்கள். சிலர் இவ்விதமாய் சொத்துக்களை, தொழிலை, சம்பாதித்துத் தந்த மரித்த பெற்றோரின் படங்களை வணங்குகிறார்கள். 

ஒருமுறை ஒரு சகோதரர் தன்னுடைய தோல் சம்பந்தமான வியாதி நீங்க ஜெபிக்க வந்தார். அவர் ஒரு கிறிஸ்தவர். சபை ஆராதனைகளுக்குச் செல்கிறவர். காணிக்கைக் கொடுக்கிறவர், ஊழியங்களில் பங்கெடுக்கிறவர். ஜெபிக்க வந்த சமயத்தில் அவர்மீது அன்பு வைத்த இயேசு கிறிஸ்து, அவரது பிழையான காரியத்தைச் சுட்டிக்காட்டினார். தொழிலகத்தைத் திறந்தவுடன் முன் வாசலின் மேலாக தொங்கவிட்டிருக்கிற மரித்துப்போன தகப்பனார் படம் இருக்கிறது. சில நேரங்களில் ஊதுபத்தியும் கொழுத்தி அந்தப்படத்திற்கு வணக்கம் செலுத்தி, உங்கள் தொழிலை ஆரம்பிப்பதால் இந்த வேதனை என்று வெளிப்படுத்தினார். இதனை எத்தனையோ ஆண்டுகளாக அனுசரித்து வருகிறேன் என்று கூறினார். இந்தப் படத்தை எடுத்து விடுங்கள். ஆவியாய் அசைவாடுகிற தேவ சமுகத்திலே தாழ்த்தி ஜெபியுங்கள். உங்கள் தோலிலுண்டான நோய் நீங்கும். மெய்யான சமாதானமும் சந்தோஷமும் உங்கள் எல்லைகளில் பெருகும் என்று சொன்னவுடன், ஆலோசனையை ஏற்றார். அற்புதமான சுகத்தையும் பெற்றார். தவறான நம்பிக்கை சரீரத்திலும் பாடுகளைக் கொண்டு வந்ததை உணர முடிந்தது.

சிலருடைய நம்பிக்கை திசைகள் மீதும் எண்ணிக்கையின் மீதும், வாஸ்து என்று சொல்லப்பட்ட காரியங்களிலும் இருக்கிறது. இதனால் வாழ்க்கையில் பல பாடுகளையும், வேதனையான காரியங்களையும் சந்திக்கிறார்கள். அண்ட சராசரங்களை வார்த்தையினாலும், வல்லமையினாலும் உருவாக்கின கர்த்தாதி கர்த்தரை அறியாது, புரியாது தங்கள் மனதின் சிந்தையின்படி பிழையான காரியங்களைச் செய்து பாடுபடுகிறார்கள்.

அருமையான சகோதரனே/ சகோதரியே நமக்காக யாவையும் செய்து முடித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புங்கள். அவரை நம்பும்போது நாம் பாக்கியவான்களாக, ஆசீர்வதிக்கப்பட்ட மக்களாக மாறிவிடுவோம்.

கர்த்தரை நம்பவேண்டிய காரியங்கள்

1) அவருடைய நாமத்தை நம்பவேண்டும் "...அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையா " யிருப்பார்கள்." செப்பனியா 3:12

கர்த்தர் என்ற நாமம் தேவனுடைய வல்லமையின் செயல்களையுடைய நாமம் ஆகும். கர்த்தருடைய நாமத்தில் அதிசயம் நடைபெறும். சமாதானத்தைக் கொண்டு வரும் ஆற்றல் உடைய நாமம் ஆகும். அந்த நாமத்தினால் ஆலோசனையைப் பெறுகிறோம்.

அந்த நாமத்தினால் பிசாசுகள் துரத்தப்படும் என்று மாற்கு 16:17ல் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த நாமத்தினால் பிதாவை நோக்கி வேண்டும்போது மெய்யான மகிழ்ச்சி உண்டாகும். (யோவான் 16:24). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் இந்தப் பூமியில் நாம் இரட்சிக்கப்படவும், ஆசீர்வதிக்கப்படவும் கொடுக்கப்பட்டது. எல்லா நாமத்தையும்விட மேலான நாமம் என்று அப். 4:12ல் கூறப்பட்டிருக்கிறது.

உன்னதமான பரிசுத்த நாமத்தின் மேல் நம்பிக்கையுள்ள ஒவ்வொருவர் வாழ்விலும் அதிசயங்களை அந்த நாமத்தினால் பெற்றுக் கொள்வார்கள். கர்த்தருடைய நாமம் பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான் என்று நீதி. 18:10ன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே நமது நம்பிக்கையை தேவகுமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மீது வைப்போமாக.

2) கர்த்தருடைய வார்த்தைகளை நம்ப வேண்டும்

"...தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 2 கொரிந்தியர் 1:20

 “இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்து வருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறு மென்று நம்பியிருக்கிறார்கள்..." அப்போஸ்தலர் 26:7

நம்முடைய நம்பிக்கையானது கர்த்தரின் ஜீவ வார்த்தையின் மீது இருக்க வேண்டும். ஏனென்றால் அவைகள் மாறாதவைகள் என்று சத்திய வேதம் சொல்லியிருக்கிறது. ஆவியும் ஜீவனுமுடைய வார்த்தைகள் மனிதரின் வாழ்க்கையை மாற்றக்கூடியது. இந்த வாக்குகள் வியாதியைக் குணமாக்கக் கூடியது. அழிவுக்கு விலக்கிக் காக்கக்கூடியது. ஆதிமுதல் யார் யார் இந்த வாக்குத் தத்தங்களை நம்பி வாழ அர்ப்பணித்தார்களோ, அவர்கள் அதிசயங்களைக் கண்டார்கள், அநுபவித்தார்கள். இன்னும் அனுபவிக்கிறார்கள். இந்த மாறாத கர்த்தரின் வார்த்தைகளின் மேல் நம்பிக்கை வைத்தவர்கள் ஜீவனைப் பெற்று சுகவாழ்வைச் சுதந்தரித்துக் கொண்டார்கள். இந்த அன்பின் வார்த்தைகளை உறுதியாய்ப் பற்றிக்கொண்டு இவ்வுலக வாழ்வில் சுடர்களைப் போல பிரகாசிப்போமாக.

3) கர்த்தருடைய ஆலோசனையின் மேல் நம்பிக்கை

 "...அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவ மானவர்."ஏசாயா 28:29

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒன்று ஆலோசனைக் கர்த்தர் என்பதாகும். அவரின் ஆலோசனைகள் ஆச்சரியமாகவும், ஆசீர்வாதமாகவும் இருக்கும். சங்கீதம் 32:8ல் உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்' என பார்க்கிறோம். கர்த்தரின் ஆலோசனைகள் ஆசீர்வாதத்தையும், நம்முடைய செயல்களில் ஜெயத்தையும் கொண்டு வரக்கூடியது. ஆலோசனை இல்லாத இடங்களில் ஜனங்கள் விழுந்து போவார்கள்.

கர்த்தரை நம்புவதினால் வரும் ஆசீர்வாதங்கள்

1) கர்த்தரை நம்புகிறவர்களை விடுவிப்பார்

"உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவ தில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார்." எரேமியா 39:18

 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களை, அவர்களின் நம்பிக்கையின் அளவுக்குத்தக்கதாக விடுவிக்கிறார். விடுதலைக்காக ஏங்கித் தவிக்கிற மக்கள் ஏராளம் உண்டு. யார் என்னை விடுவிப்பார் என்று தவிக்கிற மக்களும் உண்டு. விடுதலையில்லாதபடியால் துக்கம் மிகுதியாகி தற்கொலை செய்து கொள்ளுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக் கிறது. என் வாழ்வில் உள்ள என் பிரச்சனைகளுக்கு என்றைக்கு முடிவு வரும் என்று கண்ணீருடன் காத்திருக்கும் கூட்டமும் உண்டு.

'எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்' சங். 22:4ல் பார்க்கிறோம். அன்பு சகோதரனே, சகோதரியே! உன் வாழ்வில் உள்ள பிரச்சனை பொருளாதாரமாக இருக்கலாம், பாவ பழக்கத்தினிமித்தம் இருக்கலாம், பிசாசின் பிடியினிமித்தம் இருக்கலாம். ஒருவேளை உன் குடும்ப, அலுவலக பிரச்சனையாகவும் இருக்கலாம். உன் பெலவீனத் திலிருந்து விடுதலையை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கலாம். 'உன்னை நிச்சயமாகவே விடுவிப்பேன்' என்று கூறிய கர்த்தர் உன்னை உன் பிரச்சனையிலிருந்தும்,போராட்டத்திலிருந்தும், உன் சகல வேதனையின் காரியத்திலிருந்தும் விடுவிப்பார்.உன் குடும்பப் பிரச்சனையானாலும் சரி, தவறான குற்றச்சாட்டுகளானாலும் சரி கலங்காதே. கர்த்தரை நம்பு. “அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது." என்ற சங். 34:22ன் படி சகல அநீதியான குற்றச் சாட்டுகளிலிருந்தும் உன்னை விடுவிப்பார்.

ஒரு போதகர் தன் பிள்ளையிலும் தன்னிலும் உண்டான புண்களினால் மிகவும் வாடினார். பிள்ளையானது உடுப்பு உடுத்த முடியாதபடி தவித்தது. படுக்க, உட்கார முடியாத வேதனை நிறைந்த போராட்டம். கர்த்தர்தான் என்னையும் என் பிள்ளையையும் இந்த வேதனையான நிலையிலிருந்து விடுவிக்க முடியும் என்று நம்பி, கர்த்தரின் பிள்ளைகளுடன் இணைந்து உபவாசத்தோடு ஜெபித்தார். ஜெபத்தைக் கேட்கிற தேவன் அற்புதமான விதத்தில் அவருக்கும், அவருடைய பிள்ளைக்கும் சுகம் கொடுத்தார்.

போராட்டத்துடன் வாழும் தேவப்பிள்ளையே! தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிற தேவன், உன்னில் பூரண விடுதலையைத் தர வல்லவராக இருக்கிறார். "குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்." யோவான் 8:36ன் படி இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மை விடுதலையாக்க வல்லவர் என்பதை நம்புவோமாக.

யோபு என்ற பக்தன், மிகுந்த வேதனையையும் பாடுகளையும் அடைந்தான். செல்வத்தை இழந்தான். பிள்ளைகளை இழந்தான்; சுகத்தையும் தன் மனைவியின் மூலம் உள்ள சமாதானத்தையும் இழந்தான். தன் பிரச்சனையை யாராலும் புரிந்து கொள்ளாத நிலையில் “அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்." என்று யோபு 13:15ல் தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினதைப் பார்க்கிறோம். இந்த யோபுவைக் கர்த்தர் விடுவித்தார். இரட்டிப்பான ஆசீர்வாதத்தையும் அருளினார்."

அன்பு சகோதரனே, சகோதரியே உன் நெருக்கத்திலும் உன் பிரச்சனையிலும் கர்த்தர்மேல் நம்பிக்கை இருக்குமானால், உன்னை விடுதலையாக்குவதுடன் முன்நிலைமையைப் பார்க்கிலும் பின்நிலைமையை மிகுந்த சிறப்படையச் செய்வார்.

2) உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்

"கர்த்தரை நம்புகிறவன் உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்." நீதிமொழிகள். 29:55

கர்த்தரை நம்பி தப்புவிக்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டு நாம் அனுதினமும் இந்த இரட்சிப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரட்சிப்பின் பாதுகாவல் கர்த்தரை நாம் நம்பும்போது நமக்குத் தரப்படும் என்று பார்க்கிறோம். மனிதன் தனக்குப் பாதுகாவலைத் தனது செல்வம், ஞானம், பெலன், ஜாதி இவற்றின் மூலமாக தேடுகிறான். இது தகர்க்கப்படக் கூடியது. நம்பிக்கையற்றது. காலஞ்சென்ற நமது பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் சிலரை தனது மெய்க்காப்பாளராக அமைத்திருந்தார்கள். அந்த மெய்க் காவலரில் ஒருவரே அவரது உயிரை மாய்த்துப் போட்டார். மனிதன் மூலமாக ஏற்படுகிற பாதுகாவல் இப்படிப்பட்டது.

அநேகர் அழிந்து போகிற பொருட்களின் மீதும், செல்வத்தின் மீதும், நிலையற்ற மனிதர் மீதும் தங்கள் பாதுகாவலுக்கான நம்பிக்கையை வைத்து, தங்கள் ஆவி, ஆத்மா, சரீரத்தைக் கெடுத்தும் போடுகிறார்கள். ஆனால் நமது நம்பிக்கையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது வைக்கும்போது நமக்கு அவர் உன்னத பாதுகாவலைத் தருகிறார்.

ஒரு முறை சில வாலிபர்கள் குற்றாலத்தின் மலைமீதுள்ள நீர் வீழ்ச்சி அருகில் தங்கி இயேசு கிறிஸ்துவைப் பற்றி தியானித்தார்கள். அச்சமயத்தில் கிறிஸ்துவை தன் வாழ்க்கையின் நம்பிக்கையாக கொண்ட வாலிபன் அவர்களது சாப்பாட்டுக் காரியங்களைப் பொறுப்பேற்று முடித்து, நீர்வீழ்ச்சியில் சென்று கழுவி, வரச் சென்றான். சென்ற அவன் வழுக்கி கீழே விழுந்தான். பல நுாறு அடிகளுக்குக் கீழாக விழுந்த அவன் எவரும் தப்பிப் பிழைக்க முடியாத பொங்குமா கடலில் விழுந்து விட்டான். இவன் மரித்திருப்பான் என்று தேடினார்கள். ஆனால் கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்ட  இம்மனிதனைக் கர்த்தரின் கரம் பாதுகாத்து, ஒரு பாறையின் மீது அமரச் செய்தது.

தீயணைப்புப்படையினர் அழைக்கப்பட்டனர். சில மணி நேரத்திற்குப் பின்பு அவனை அந்த இடத்திலிருந்து இக்கரைப் படுத்தினார்கள். இதைப் போல கர்த்தரை தன் நம்பிக்கையாக வைத்த தெய்வ மனிதர்களுடைய சாட்சியைப் பல்லாயிரக் கணக்கில் காண்லாம். உன் வாழ்க்கையிலும் இதைவிட மேலான பாது காவலைத் தர உனக்காக ஆணிகளால் கடாவப்பட்ட அன்பின் கரம் நீட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதை நீ ஏற்றுக் கொண்டு வாழ்வாயானால் உயர்ந்த கன்மலையின் மேல் தன் கூட்டைக் கட்டின கழுகைப் போல் உன் குடும்பமும் உயர்வாய் பாதுகாக்கப்படுவது நிச்சயமல்லவா?

3) காரியத்தை வாய்க்கச் செய்வார்

 "அவர் (கர்த்தர்) மேல் நம்பிக்கையா யிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" சங்கீதம் 37:5

இன்று மனிதன் தனது வாழ்வில் காரியங்களைப் பணத்தின் மூலமாகவும், தன் சுய ஞானத்தின் மூலமாகவும், பக்க பலத்தின் மூலமாகவும் சாதித்து விடலாம் என்று முயற்சித்து தோல்வியடைந்து வாழ்க்கையில் நம்பிக்கை அற்றவனாய் காணப்படுகிறான். வேறு நபரை அல்லது காலத்தைக் குறை கூறி வருந்துகிறான். கர்த்தரை நம்புகிறவர்களுக்கோ தோல்வி கிடையாது. நாம் முழுமையாக இயேசு கிறிஸ்துவிடம் சரண் அடைந்து, அவர் மீது நம்பிக்கை வைக்கும் சமயம், நமது ஒவ்வொரு முயற்சியும் நுநூறு மடங்கு நன்மையை நமக்குத் தரும். ஈசாக்கு என்ற தேவ மனிதன் கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, அவர் மீது நம்பிக்கை வைத்து விதை விதைத்தார். அது நுாறு மடங்கு விளைந்தது என்று வேதத்தில் பார்க்கிறோம். நமது நம்பிக்கை கர்த்தரை விட்டு குறைய குறைய நமது வெற்றியும், வருவாயும் நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.

அநேக விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விதைகளைப் பயிர் செய்து, பூச்சி, புழுக்களிலிருந்து பாதுகாக்கப்பட பல பூச்சி மருந்துகளை அடித்து பலவிதமான தழைச்சத்துக்களையும் உப்புச் சத்துக்களையும் கொடுத்தாலும் மகசூல் குறைந்து காணப்படுவது ஏன்? இதை வாசிக்கின்ற தேவ பிள்ளையே, நம் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்ட முறையில் ஒரு தெய்வம் நமது காரியங்களை வாய்க்கச் செய்ய கட்டளையிடாவிட்டால் நமது காரியம் ஒரு போதும் வெற்றி பெற இயலாது. உன்னுடைய காரியம் முழுமையாக வெற்றி பெற்ற தானியேல் என்ற தேவ மனிதன் போல, உனது நம்பிக்கையைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும்போது உன் காரியம் வெற்றியாக, பூரணமாக வாய்க்கும்.

உன் வீடு கட்டுகிற முயற்சியில் வெற்றி இல்லையா? உன் திருமண வாழ்க்கையில் வெற்றி இல்லையா ? ஒரு நல்ல வேலை அமைவதில் தோல்வியா ? உன் சரீர வியாதியிலிருந்து விடுபட முடியாத அளவு உன் முயற்சி தோல்வி அடைந்துள்ளதா ? உன் கடன் தொல்லைகளைக் குறைப்பதில் தோல்வியா ? எந்தக் காரியமானாலும் சரி. அதில் பூரண வெற்றி பெற இன்றே உன் நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைப்பாயானால் உனது காரியங்களை வாய்க்கச் செய்வார். உன் செல்வம், பெலம், ஞானம் இவற்றின் மீது நம்பிக்கை வையாது, கர்த்தர் மீது நம்பிக்கை வை. அவரே காரியத்தை வாய்க்கச் செய்வார்.

“உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர்" ஏசாயா 26:3.

கர்த்தரை நாம் நம்பும்போது நமக்கு சமாதானமும் சந்தோஷமும் நிறைவாய் கிடைக்கும். இன்று மனிதன் சமாதானத்தை நாடி பல விதமான காரியத்தைக் கையாளுகின்றான். தனது வாழ்வில் தன் மனைவி துரோகம் செய்துவிட்டாள் என்று மதுவை அருந்தி, மேலும் தன் சரீரத்தைக் கெடுத்து சமாதானம் இழந்த நபர்களைப் பார்க்கிறோம். சிலர் தாங்கள் நேசித்த அருமையான பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அவர்கள் நிலைமாறும்போது சமாதானம் இழந்து தவிப்பதைப் பார்க்கின்றோம். நம்பிக்கையற்ற இந்த உலக வாழ்வில் சமாதானம் பெற ஒரே வழி இயேசு கிறிஸ்துவே.

தேவ சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனின் சமாதானத்தைப் பிசாசானவன் தனது தந்திரத்தால் கெடுத்துப் போட்டான். இவனது நம்பிக்கைத் துரோகச் செயலினால் மனிதனுக்குச் சாபம் ஏற்பட்டது. பழத்தைப் புசிப்பாயானால் நீ சாகாமல் இருப்பாய். நன்மை தீமை அறியத்தக்க ஞானம் கிடைக்கும் என்று கூறி நம்பிக்கைத் துரோகம் செய்த இந்தச் சாத்தானின் வலையில் இருந்து தப்பி, உன்னை மீட்டுக் கொள்வேன். உனக்குச் சகாயம் செய்வேன். கலங்காதே, திகையாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கூறும் ஜீவ தேவனின் வார்த்தை மீது நம்பிக்கை வைத்து, "அவர் என்னை ஆதரிப்பார். தப்புவிப்பார், பாதுகாப்பார்." என்று உன் நம்பிக்கையை அவர் மீது வைப்பாய் என்றால் உன் சமாதானம் நதியைப் போல உன்னைத் தொடர்ந்து வருவதைக் காண்பாய். இதோ, சமாதானத்தை வைத்துப் போகிறேன் என்று சொன்னார். அவ்வாறே செய்து முடித்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீது உன் நம்பிக்கையை வைப்பாய் என்றால் சமாதானம் உன் வாழ்வில் நிரந்தரமாய், பூரணமாய் காக்கப்படும்.

4) நம்புகிறவனை கிருபை சூழ்ந்து கொள்ளும்

"கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.

                                                                                                                      சங்கீதம் 32:10

கிருபை என்பது தகுதியற்ற நமக்குத் தேவனின் இரக்கம், தயவு, அன்பு காட்டப்படுவதாகும். இந்தக் கிருபையினால் தான் நாம் சத்துருக்களினால் அழிக்கப்படாது காக்கப்பட்டு வருகிறோம். “நாம் நீர்மூலமாகாதிருப்பது அவரது சுத்த கிருபை” என்ற வேக வசனத்தை மறந்து போகக் கூடாது. அநேகருக்கு இல்லாத சுகம், பெலன், உத்தியோகம், வீடு சமாதானமான சூழ்நிலை ஆகியவை உனக்குக் கொடுக்கப்பட்டிருப்பது அவரது கிருபையால் தான். நான் அவற்றிற்குத் தகுதியா என்று இந்த வேளையில் சற்று சிந்திப்போம். என் வேலையில் நான் உத்தமமாய், உண்மையாய் காணப்படவில்லை. ஆனால் தண்டிக்கப்படாமல் இருக்கிறேன் என்று உன் மனதில் தோன்றுமானால் தகுதியற்ற உனக்குக் கர்த்தர் கிருபை பாராட்டுகிறார். நீ சீர்ப்படுத்தப்பட்டு உத்தமமாய் வாழ வேண்டுமென்று கர்த்தர் உன் மீது இரங்கி கிருபையின் காலத்தைக் கொடுத்திருக்கிறார். இன்று உன் நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைத்து உண்மையாய் வாழ்ந்து என்றென்றைக்கும் கிருபையைப் பெற்று வாழ்வாயாக. இந்தக் கிருபையானது பெருகவும், உன்னைச் சதா சூழ்ந்திருக்கவும் வேண்டுமென்றால் உன் நம்பிக்கை கர்த்தர் மீது மட்டுமே வைக்கப்பட வேண்டும். அனுதின வாழ்வில் நாம் வீட்டை விட்டு வெளிச் சென்று மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் முன் எத்தனை விதமான விபத்துக்களைக் கடந்து செல்கிறோம், எத்தனை விதமான வியாதிகளைச் சந்திக்கிறோம், எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத தீய ஆவிகள் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. இவைகளினின்று நாம் காக்கப்படுவது கர்த்தருடைய கிருபை அல்லவோ ? இந்தக் கிருபை இன்னும் பெருகவும், உன்னைச் சூழவும் இருக்க வேண்டுமானால் கர்த்தர்மீது உன் நம்பிக்கையை வை.

5) கர்த்தரை நம்புகிறவன் செழிப்பான்

"கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்" நீதிமொழிகள் 28:25

இன்றைய நலிந்த வாழ்விலிருந்து மீட்கப்பட்டு சகலவிதத்திலும் செழிப்படைய வேண்டுமானால் கர்த்தர் மீது நம் நம்பிக்கையை வைக்க வேண்டும். சரீரம் பெலன் அடைய வேண்டுமென்று ஆகாரத்தின் மீது சிலர் நம்பிக்கை வைக்கிறார்கள். சிலர் அழிந்து போகிற பொருட்களின் மீது நம்பிக்கை வைத்து சந்தோஷம், சமாதானத்தில் செழிக்கலாம் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் அவர்கள் பொருளும், செல்வமும் அழிந்து போகும்போது அவர்களுடைய சமாதானமும் சந்தோஷமும் மறைந்து விடுகிறது. என்றென்றைக்கும் ஜீவிக்கிற கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கும்போது செல்வத்திலும், பாதுகாப்பிலும் போஷிக்கப் படுவதிலும், சமாதானத்திலும், சந்தோஷத்திலும், சரீரத்திலும், பிள்ளைகளில் நடை பெறவேண்டிய நன்மையான காரியங்களிலும் நாம் செழிப்படைந்து ஆசீர்வதிக்கப்படுவோம். ஈசாக்கு கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தபோது ஐசுவரியவானாகி, விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று எழுதப்பட்டுள்ளபடி நாமும் செழிப்படைய நமது நம்பிக்கையைக் கர்த்தர் மீது வைப்போம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.

                                                                                  கிறிஸ்து இயேசுவின் பணியில்,

                                                                                             சகோ. C. எபனேசர் பால்.


E- STORE